![](pmdr0.gif)
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும்
பொ. வே. சோமசுந்தரனார் உரையும் - part 1
cIvaka cintAmani - part 1
of tiruttakka tEvar with commentaries
of M.P. cOmacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a digital version of this work for the etext preparation.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும்
பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
-
Source:
திருத்தக்க தேவர் இயற்றிய "சீவகசிந்தாமணி" மூலமும்
புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
மதராஸ் : கழகம், 1994
---------------------
உள்ளடக்கம்
-
பதிப்புரை
அணிந்துரை
நூலாசிரியர் வரலாறு
I. கடவுள் வாழ்த்து, பதிகம் 1-29 (29)
II. நூல்
1. நாமகள் இலம்பகம் 30-408 (379)
2. கோவிந்தையார் இலம்பகம் 409- 492 (84)
3. காந்தருவதத்தையார் இலம்பகம் 493- 850 (358)
4. குணமாலையார் இலம்பகம் 851- 1165 (315)
5. பதுமையார் இலம்பகம் 1166- 1411
6. கேமசரியார் இலம்பகம் 1412- 1556
7. கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888
8. விமலையார் இலம்பகம் 1889 - 1994
9. சுரமஞ்சரியார் இலம்பகம் 1995 - 2101
10. மண்மகள் இலம்பகம் 2102 - 2326
11. பூமகள் இலம்பகம் 2327 - 2377
12. இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598
13. முத்தி இலம்பகம் 2599 - 3145
செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
அருஞ்சொற்களின் அகரவரிசை
பதிப்புரை
இந்நூல் நாமகள் இலம்பகத்தை மட்டும் முதலில் கி.பி. 1868 இல் ரெவரெண்ட். எச். பவர் என்பவர் பதித்து வெளியிட்டனர். பின்னர் நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம், காந்தருவதத்தையார் இலம்பகம் என்ற மூன்றும் நச்சினார்க்கினியர் உரை, பதவுரையுடன் சோடசாவதனம் தி. க. சுப்பராய செட்டியார் அவர்களாற் பதித்து வெளியிடப் பட்டன. அதன்பின் முதல் ஐந்து இலம்பகம் மூலம் மட்டும் ப.அரங்கசாமி பிள்ளை அவர்களால் கி.பி.1883 இல் பதித்து வெளியிடப்பட்டது. கி.பி. 1887 இல் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் நூல் முழுவதும் நச்சினார்க்கினியர் உரையுடன் பதித்து வெளியிட்டனர். அப் பதிப்பு மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது. கி.பி. 1941 இல் சைவசித்தாந்த மகா சமாசம் இந்நூல் மூலம் மட்டும் பதித்து வெளியிட்டுள்ளது.
இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் நல்லுரை கண்டார் முதலில். அன்றுமுதல் இன்றுவரை அவ்வுரையே புலவர்கள் ஆய்ந்து பொருள்கண்டு வந்தனர் - வருகின்றனர் - வருவார். நச்சினார்க்கினியர் உரை சிறந்தது; தெளிவுடையது; நூலாசிரியர் கருத்தை நுணுக்கமாக எடுத்துக்காட்டுவது; புலவர்கள் எவரும் போற்றத் தக்கது என்பது மறுக்கமுடியாத உண்மையாம். ஆயினும் அஃது இன்ன சொல்லுக்கு இன்ன பொருள் என்பது காண இயலாத பொழிப்புரை; முறையான பொழிப்புரையும் அன்று; சுருக்கமாக உரை வரைந்து செல்லும் இடங்களும் உள்ளன. இரு பாடல்களையும் இணைத்து மேல் கீழாக மாற்றி யுரை வரைந்திருப்பதும் காணலாம். பல பாடல்களைச் சேர்த்து மாட்டேற்றாக ஒரு பாடலில் இருக்கும் சொல்லை மற்றொரு பாடலுக்குக் கொண்டு கூட்டி யுரை வரைந்திருக்கும் இடங்களும் பல இருக்கின்றன. எவ்வாறு சொற்குப் பொருள்காண இயலும்? இவ்வுரை சிறந்த புலவர்கட்கே பொருத்தமானது. புலவர்களும் ஆய்ந்து காணும் அருமையுடையது; இளமை மாணவர் எளிதிற் பொருள் காண இயலாத தொன்று. நச்சினார்க்கினியர் உரையின் அருமை நாவலர்க்கெல்லாம் நன்கு தெரியும். அதனை எளிய புலவர் எங்ஙனம் பயில்வார்? இளைஞர்க்கு ஏற்ற வுரையும் அன்று.
இக்காலத்து இளைஞர்கள் எல்லா நூல்களுக்கும் எளிதிற் பொருள் காண முயல்கின்றார்கள் என்பதும், நச்சினார்க்கினியருரை நயத்தைக் கூறக்கேட்டு மெச்சுவாரேயன்றிக் கற்க நச்சுவார் எவரும் இலர் என்பதும் நாம் அறிந்தோம். சொற்பொருளும் விளக்கவுரையும் இந்நூலுக்கு எழுதிப் பதித்தால் எளியபுலவரும் இளைஞரும் கற்று நற்பயனடைவர் என ஆய்ந்தோம். எளிய உரைநடையிற் பொருளும் விளக்கமும் எழுதிக் தரும்படி இயம்பினோம். உயர்திரு. புலவர், "அரசு" அவர்கள் சொற்பொருளும் விளக்கவுரையும் எழுதி உதவினார்கள். பெருமழைப் புலவர் உயர்திரு. பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் ஒவ்வோர் இலம்பகத்திற்கு முதலிற் கதைச் சுருக்கம் தெளிவாக வரைந்துதவினர். அன்றியும் பல பாடல்கட்குக் குறிப்புரையும் கொடுத்து உதவினார்கள். அவ்விருவர் உரைகளையும் ஆய்ந்து நன்முறையில் தொகுத்து இந்நாள் வெளியிடுகின்றோம்.
சீவக சிந்தாமணியிலுள்ள பாடல்கள் மூவாயிரத்திற்கு மேற்பட்டன. அவற்றுடன் சொற்பொருளும் விளக்கவுரையும் கூடும்போது பெரும் புத்தகமாகும். எடுத்துப் படிப்பார்க்குப் பெரும் பாரமாய்க் கைகளை வருத்தும். பலகையில் வைத்துப் படிப்பார்க்கே தகுதியுடையது. இரு கையில் வைத்துப் படிப்பார்க்கு ஏற்றதன்று என ஆய்ந்து எல்லாரும் எடுத்துப் படிக்கத்தக்க முறையில் இரு பகுதியாகப் பிரித்து அச்சிட எண்ணி, அம்முறையில் முதற் பாகம் இப்போது வெளி வந்துள்ளது. இரண்டாம் பாகமும் இனி வெளிவரும்.
இப் புத்தகத்திற் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பதிகம் ஆகிய மூன்றும், நாமகளிலம்பகம் முதல் கேமசரியாரிலம்பகம் வரை யுள்ள ஆறு இலம்பகங்களும் அடங்கியுள்ளன. பாடல்கள் மொத்தம் 1555 ஆகும். பாடல்கள் எல்லாம் புணர்ச்சி விதிப்படி வரைந்து சீர்மட்டும் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. பாக்களில் உள்ள சொற்களைத் தனித்தனி பிரித்துக் காட்டி ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் விளங்க நல்லுரை வரைந்திருப்பதனால் பாட்டிற் சொற்பிரிப்பது பயனற்றதென விடுத்தோம்.
செய்யுளைப் பிரித்தாற் சீரும் தளையும் எதுகையும் மோனையும் சந்தமும் புணர்ச்சியிலக்கணமும் கெடும் என்பதைப் புலவர்கள் உய்த்துணரவேண்டும். செய்யுள் புணர்ச்சியிலக்கணப் படி பொருந்த நிற்பதுதான் சிறந்தது என்பது எமது கருத்து.
சொற்பொருளும் விளக்கமும் வரைந்த உயர்திரு. புலவர் "அரசு" அவர்கள் நச்சினார்க்கினியர் உரையைத் தழுவியே வரைந்திருக்கின்றனர். நச்சினார்க்கினியர் மாட்டேற்றாகப் பொருத்தமின்றி உரைவரைந்த இடங்களை எடுத்துக்காட்டி நூலாசிரியர் கருத்தோடு முரண்படு மாற்றையும் நுணுகி யாய்ந்து விளக்கியிருப்பது பெரும் பயன் விளைக்கத்தக்கது. உயர்திரு. புலவர் பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் வரைந்த கதைச் சுருக்கம் கற்பவர்க்கு வழிகாட்டியாகத் துணைபுரிகின்றது. வேண்டும் இடங்கட்குக் குறிப்புரை எழுதி வேண்டா இடங்களை விடுத்துச் செல்வது மிகவும் நலம்பயப்பதாம். இலக்கணக் குறிப்பும், மேற்கோளும் எடுத்துக் காட்டியிருப்பது வித்துவான் புலவர் வகுப்புக்கட்குச் செல்லும் மாணவர்க்குப் பெரிதும் துணைபுரியும் என்பதிற் சிறிதும் ஐயமின்று. செய்யுளும் உரையும் பிழையின்றிச் சீர்திருத்தமாகத் தொகுத்துப் பதித்திருக்கும் முறையும் புத்தகம் கட்டப்பட்டிருக்கும் முறையும் கண்டோர் இதன் அருமை பெருமையையுணர்வார். இக்கால மாணவர்கட்கு ஏற்றவாறு ஆக்கியது இது.
புலவர் வகுப்பு, வித்துவான் வகுப்பு ஆகிய தேர்வுகட்குச் சிந்தாமணி பாடமாக இருந்தால் தனியே படித்துத் தேர்வுக்குச் செல்லத்தக்க துணையாகும் இது. நச்சினார்க்கினிய ருரையை எளிதில் அறிந்துகொள்ள உதவும். இன்ன சொல்லுக்கு இன்ன பொருள் என்பதை எடுத்துக் காட்டும் இவ்வுரை. இடர்ப்பாடின்றிப் பொருளை எளிதில் உணர்ந்துகொள்ளலாம். செய்யுளைப் படித்து மனப்பாடஞ் செய்வோர்க்குச் சீர் பிரித்துக் காட்டியிருப்பது பெரிதும் உதவியாம். பெரும்புலவராக வருங் குறிக்கோள் உடையவர் எவரும் சிந்தாமணியைச் சிறப்பாகக் கற்றுப் பின் மற்றை நூல்களைக் கற்பதே நன்முறையாகும்.
சிந்தாமணி என்ற இந்நூலின் பொருளை எல்லாரும் உணர்ந்து உலகவாழ்வின் உண்மை தெரிந்து அறநெறியும் மறநெறியும் கண்டு நல்வாழ் வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும். அந் நோக்கத்தால் இதற்கு முன்னும் சிந்தாமணி வசனம், சிந்தாமணிச் சுருக்கம், சிந்தாமணி யாராய்ச்சி என்ற நூல்களைப் பதித்து வெளியிட்டனர். இன்றும் இந்நூற்கு எளிய இனிய உரைநடையில் சொற்பொருள், விளக்கம், குறிப்புரை வரைந்து பெரும் புத்தகமாக வெளியிடுகின்றோம்.
தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் இந்நூலை வாங்கிக் கற்றும் கற்பித்தும் நற்பயன் எய்துவார்கள் என நம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்
-----------
அணிந்துரை
சிந்தாமணி என்பது இந்நூற்குத் தன்மையால் வந்த பெயர் என்பர் இலக்கண நூலோர். சிந்தாமணி என்பது நெஞ்சின்கண் பொதிந்து வைத்தற்குரிய சிறப்புடையவொரு மணி போல்வது என்னும் பொருட்டு. புலனுழுதுண்போராகிய நல்லிசைப் புலவர்கட்கு வேண்டும் அறிவுப் பொருள் அனைத்தும் ஒருங்கே வழங்கும் பெற்றியுடையதாதலின் இப் பெருங் காப்பியத்தைச் சிந்தாமணி என்று போற்றுவது மிகவும் பொருத்தமே. இந்நூலின் கதைத்தலைவனாகிய சீவகனுக்கு அவனுடைய நற்றாயாகிய விசயமா தேவியார் முதன் முதலாக இட்டுவிளித்த பெயர் சிந்தாமணி என்பதேயாம். சீவகன் என்னும் பெயர் பின்னர் வானொலியாகத் தோன்றிய 'சீவ' என்னும் சொற்கொண்டு கந்துக்கடன் என்னும் வணிகனால் இடப்பட்ட பெயராகும். எனவே சிந்தாமணி என்னும் பெயரை ஆசிரியர் முதன்மையாகக் கருதி இந் நூற்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயர் வழங்குவாராயினர்.
-
"செந்தா மரைக்குச் செழுநாற்றங் கொடுத்த தேங்கொள
அந்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச்
சிந்தா மணியின் சரிதம்சிதர்ந் தேன்றே ருண்டார்
நந்தா விளக்குச் சுடர்நன்மணி நாட்டப் பெற்றே"
இனி இந்நூலின்கண் சீவகன் மணந்து கொண்ட மகளிரின் வரலாறு கூறும் பகுதிகளை அவ்வவர் பெயரோடு கூட்டிக் காந்தருவதத்தையார் இலம்பகம் என்பன போன்று பெயர் கூறினாற் போன்றே சீவகன் சிறப்பிற்குக் காரணமான கலைசெல்வம் நிலம் வீடுபேறு முதலிய நலங்களையும் மகளிராகவே உருவகஞ் செய்து நாமகள் முதலிய மகளிர்களையும் சீவகன் மணந்துகொண்டதாகத் தேவர் யாண்டும் இந்நூல் திருமணகதிருமொழி காட்சியே காணும்படி நூல் செய்திருத்தலின் இந்நூலை, 'மணநூல்' என்றும் வழங்குவது முண்டு.
இனி இன்னோரன்ன நூல்களைக் காப்பியம் என்று வழங்கும் வழக்குத் தமிழ்வழக்கன்று. இவ்வழக்கு வடமொழியாளருடைய வழக்கேயாகும். பண்டைத் தமிழிலக்கண நூலோர் இன்னோரன்ன நூல்களை வனப்பு நூல்கள் என்றே வழங்கினர். ஒரு நூல் ஒரு செய்யுளாலேயே முடிவதும் உண்டு. திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாட்டுக்களும், தனித்தனியே ஒவ்வொரு செய்யுளாலேயே இயன்ற தனி நூல்களேயாகும். இனி நம் சங்க விலக்கியங்களிலே எஞ்சிய எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க்கணக்கும் பலப்பல செய்யுள்களாற் றொடர்புபட்ட வனப்பு நூல்களே என்றுணர்தல் வேண்டும். இந்த வனப்பியல் நூல்கள் எட்டுவகை வனப்புகளுள் தத்தமக்கு ஏற்கும் வனப்புகளை ஏற்பனவாம். அவ்வனப்புகள்,
-
"அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு"
இவற்றுள் நமது சிந்தாமணி தொன்மை என்னும் வனப்புப் பற்றி எழுந்த நூலாகும். தொன்மை என்பது பழையதொரு கதையைப் பொருளாகக் கொண்டு இயற்றப்படும் தொடர்நிலைச் செய்யுள் நூல் என்பர். பழைய கதை பொருளாகக் கொண்டு இயற்றப்பட்ட இவ்வகை வனப்பு நூல்கள் தொல்காப்பியத்திற்கு முன்னர்த் தமிழகத்திலே இருந்தன என்பது இந்த இலக்கணமிருத்தலாலே ஊகிக்கப்படுகின்றது. ஆனால் இந்தத் தொன்மை என்னும் இலக்கணத்திற்கு இலக்கியமாக இற்றைநாள் நமக்குக் கிடைத்துள்ள இச் சிந்தாமணி முதலிய வனப்புக்கள் எல்லாம் அவ்விலக்கணந் தோன்றியபின்னர்த் தோன்றிய நூல்களேயாம்.
இனி, இந்த எண்வகை வனப்புக்களில் சீவக சிந்தாமணி தொன்மை என்னும் வனப்பை அடிப்படையாகக்கொண்டு வேறு சில வனப்புக்களையும் உறுப்பாகக் கொண்டு திகழ்கின்றது. அவையாவன : அம்மை, அழகு, தோல் என்னும் இம்மூன்றுமாம். என்னை ? இந்நூல், சின்மென் மொழியாலே ஐந்தடியின் ஏறாது அமைதிப்பட்டு நிற்கும் செய்யுட்களை உறுப்பாகக் கொண்டு அற முதலியவற்றிற்கும் இடையிடையே இலக்கணங் காட்டித் தாவிநடத்தலாலே 'அம்மை' என்னும் வனப்பையும் , செய்யுண் மொழியாலே இரண்டு முதலிய சொற்களை இணைத்துக் கற்போர் உளத்தே என்றென்றும் நின்று நிலவும் மாண்புடைய இனிய சொற்றொடர்களை யாண்டும் தன்னகத்தே தாங்கி நிற்றலின், 'அழகு' என்னும் வனப்பையும், 'இழு' மென்னும் இனிய ஓசையமைந்த மொழியாலே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு விழுமிய பொருள்களையும் உணர்த்திச் செல்லுதலின் 'தோல்' என்னும் வனப்பையும் தன்கண் உடையதாகும் என்றுணர்க.
இந்த வனப்பினுள் வைத்தும், 'அழகு' என்னும் வனப்பிற்கு இச் சிந்தாமணிக்கு நிகர் சிந்தாமணியே யாகும். அழகு என்பது "செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல்" எனப்படும் செய்யுண்மொழி தேர்ந்து சீர்புனைந்து தொடை செய்யும் ஒரு செயற்றிறமேயாகும். 'செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல்' என்று சொல்லுக்கு அடைதேர்ந்து தொடுத்த கம்பநாடரும் சிந்தாமணியின் செஞ்சொற்றொடை நினைந்தே இங்ஙனம் இனிதே மொழிந்தனர் என்று கருத இடனிருக்கிறது. கம்பநாடர் இயற்றிய பெருங்காவியம் ஏனைக் காவியங்களினும் சிறந்திருத்தற்குக் காரணம் சிந்தாமணியிற் கண்ட இத் தீஞ்சொற் காவியநடை அவர்க்கும் கைவந்தமையே தான். எனினும் கம்பநாடர் புனையும் செஞ்சொற்றொடையின்பஙகூட இந்தச் சிந்தாமணியின் செஞ்சொற்றொடையின்பம் அளவு உயர்ந்து விடவில்லை. இவ்வகையிலே சிந்தாமணி தரும் செஞ்சொற் றமிழ்நடை யின்பத்தை வேறு எந்தக் காப்பியத்தினும் கண்டு நுகர்தல் இயலாது. அத்தகைய பேரின்பந் தருவன தேவருடைய செய்யுணடை. இவ்விடத்தில் எடுத்துக் காட்டாக இன்பமே ததும்பி வழியும் தேவர் செய்யுணடையிலே ஒரு சில எடுத்துக்காட்டி மேற்செல்வாம். சிந்தாமணியின் சிறப்பிற்குத் தலைசிறந்த காரணமும் இதுவேயாகும். உலகம் 'மூவா முதலாவுலகம்,' மழைத்தாரை 'வெள்ளிவெண் கோனிரைத் தனபோற் கொழுந் தாரைகள்,' மாந்தர் 'தேர்ந்தநூற் கல்வி சேர் மாந்தர்,' துகில், 'ஆவியன்ன பூந்துகில்,' 'நுரைகிழித்தனைய நொய்மை நுண்டுகில்,' 'பாலாராவிப் பைந்துகில், பீடு பெண்வலைப்படாதவர் பீடின் ஓங்கிய அண்ணல்,' காமம் 'வாய்ப்பறையறைந்து தூற்றி யிடுவதே யன்றிப் பின்னும் இழுக்குடைத் தம்ம காமம், ‘மெய்பெறா எழுத்துயிர்க்கும் மழலை‘ குன்றிலிட்ட விளக்கு, ‘குன்றில் கார்த்திகை விளக்கிட்டன்ன’ சொல்வன்மை ‘நாவினுள் உலகம் நடக்கும்,' போர்வை, 'சிலம்பி வலந்ததுபோற போர்வை,’ கறவை 'கன்றொளித்தகல வைத்த கறவை,' நடைவல்லார், ‘பயங்கெழுபனுவல் நுண்ணூல் நடையுளார் சொல்லிற் றெல்லாம்’. கல்வி, ‘வாமனார் வடித்த நுண்ணூல் உண்டு வைத்தனையநீ' சிறிது ‘ஆலம் வித்தனையது,' வாய்மை, ‘தப்பில் வாய்மொழி, 'நுண்பொருள், ‘நூற்படு புலவன் சொன்ன நுண்பொருள்,' உவமை, ‘ஒளிநல வுப்புக் குன்றம் ஊர்புனற் குடைந்ததே போல்; ஆடியுட் பாவைபோல்; சீருறு சிலம்பி நூலாற் சிமிழ்ப்புண்ட சிங்கம்' என்றின்னோரன்ன தீஞ்சொற் றொடைகள் இடந்தொறும் இடந்தொறுங் காணப்பட்டுக் கற்போர்க்குக் கழிபேரின்பம் நல்குவனவாம்.
இனி, சீவகசிந்தாமணியின்கண் சங்க இலக்கியங்களின் நலமெல்லாம் தகுந்த தகுந்த இடங்களிலே பொருத்தி அழகு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழருடைய ஒப்பற்ற நூலாகிய திருக்குறளைத் தகுந்த இடமறிந்து வித்தகம்படக் கையாண்டுள்ள திறத்திலே இச் சீவக சிந்தாமணியே தலைசிறந்து திகழ்கின்றது. தேவர் தமது இலக்கியத்திற்குத் திருக்குறளையே உயிராக அமைத்திருக்கின்றனர். மற்றும் பாட்டும் தொகையுமாகிய ஏனைய சங்க நூல்களினின்றும் எடுக்கப்பட்ட பொருளும் சொல்லும் சிந்தாமணியில் மிக நயமாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. இன்னும் சிந்தாமணியின்கண் பண்டைக்காலத்து இலக்கிய நெறியாகிய அகப்புறப் பொருள் நெறிகள் பெரிதும் போற்றப்பட்டிருக்கின்றன. இக்காரணத்தால் பண்டைய உரையாசிரியன்மார்க்கெல்லாம் சிந்தாமணி ஒரு சிறந்த எடுத்துக் காட்டு நூலாகவும் திகழ்வதாயிற்று.
இனி, கவிவரர் சுப்பிரமணிய பாரதியார் "திறமுடைய புலமை எனிற் பிற நாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்" என்று பாடியதற்கிணங்க நமது சிந்தாமணியை ஓதியுணர்ந்த பிறநாட்டறிஞர் அதுபற்றிக் கூறும் பாராட்டுரை ஒரு சில காட்டுதும் ; காண்மின்.
-
"திருத்தக்கத்தேவர் தமிழ்க் கவிஞருள் சிற்றரசர்."
:- வீரமாமுனிவர்
இத்தாலியப் பேராசிரியர்
-----------
"சீவகசிந்தாமணி இப்பொழுதுள்ள தலைசிறந்த தமிழிலக்கியச் சின்னமாகும்; தமிழ்ப்பொருள் காதற் காப்பியம் ; உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று."
டாக்டர் ஜி. யூ. போப்பு
----------
"சிந்தாமணி எல்லாத் தமிழ் இலக்கியங்களுள்ளும் பழைமையானது. சமணத்தை விளக்குவதற்காக இயற்றப்பட்டது. அஃது இலக்கியச் சிறப்பு மிக்கது; இச் சிறப்பின்றேல் இது பண்டே மறைந்து போயிருக்கக்கூடும். அதன் ஆசிரியர் நடை, ஒரு தனி நடையாகும். அஃது ஓர் உயரிய இலக்கிய நூலாக அமைந்துளது."
சூலியேன். வேன்சோன்.
பிரஞ்சுப் பன்மொழி யாராய்ச்சியாளர்.
---------
சிந்தாமணி ஒரு சமணக் காப்பியமட்டுமன்று ; தமிழ்ப் பெருங்காப்பியமட்டும் அன்று. அஃது உலகப் பெருங் காப்பியங்களிலே ஒன்று என்று பிற நாட்டாரானும் பாராட்டப்பட்டது நமது சீவக சிந்தாமணி என்க.
சீவக சிந்தாமணியின் கதைப்போக்கினைக் கூர்ந்துணரின் அது திருமால் சமயத்தவர் கதைகளில் ஒன்றாகிய கண்ணன் கதையையே பெரும்பாலும் ஒத்திருத்தல் காணலாம். சீவகனைக் கண்ணனாகவும் விசயையைத் தேவகியாகவும் சுநந்தையை யசோதையாகவும் சச்சந்தனை வசுதேவனாகவும் கந்துகனை நந்தகோனாகவும் கட்டியங்காரனைக் கஞ்சனாகவும் கொண்டு கதை நிகழ்ச்சிகளையும் நோக்கின் சீவகன் கதை கண்ணன் கதையையே அடியொற்றி நடத்தல் காணலாம்.
உலகத்திலே பற்றின்றியே எல்லாத் தொழிலினும் ஈடுபட்டு நல்வாழ்க்கை வாழலாம் என்பதற்குக் கண்ணன் கதை ஓர் எடுத்துக்காட்டாகும். கண்ணன் ஆயமகளிரோடு காம விளையாட்டுப் பல நிகழ்த்தினன் ; போர் செய்தான் ; அரசாட்சி செய்தான் ; அன்பர்க்கு உதவினான் ; மன்னுயிர் ஓம்பினான். இத்தனை தொழில்களும் செய்துகொண்டே அவன் பற்றின்றி மெய்வாழ்க்கை நடத்தினன் என்பதுதான் கண்ணன்பால் யாம் காணும் பெருந்தகைமை. இப்படிப்பட்டதொரு கதைத் தலைவனையுடைய கதை நமது சமயச்சார்பாக இருத்தல் நன்றென்று கருதிய ஆருகதச்சான்றோர் ஒருவரே அந்தக் கதையை அடியொற்றிச் சீவகன் கதையைப் படைத்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது. முதன் முதலாக இந்தக் கதையைப் படைத்தவர் யார் ? எக்காலத்தவர்? என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியவில்லை. மிகப் பழைய காலந்தொட்டே ஆருகத சமயச்சார்பாக இந்தக் கதை வழங்கிவந்துள்ளது என்றுமட்டும் தெரிகிறது. இந்தக் கதையைப் பொருளாகக் கொண்டு திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியை இயற்றியருளினர். சீவக சிந்தாமணி தோன்றிய பின்னர், வடமொழியிலும் இந்தக் கதை நூல்வடிவத்திலே தோன்றிற்று. வடமொழியிலே சீவகன் கதை பொருளாகத் தோன்றிய நூல்கள் சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, சீவந்தர நாடகம், சீவந்தரசம்பு என்பனவாம். மகாபுராணத்திலும், சீபுராணத்திலும் (மணிப் பிரவாள நடையில்) இக்கதை கூறப்பட்டிருக்கின்றது.
ஆராய்ச்சியாளர் சிலர் சீவக சிந்தாமணி கத்திய சிந்தாமணியின் வழிவந்தது என்று கருதி, கத்திய சிந்தாமணியின் காலமாகிய ஒன்பதாம் நூற்றாண்டை யடுத்து இந்நூல் தோன்றியிருத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர். சீவகசிந்தாமணியின் தகுதியாகாது. ஆருகத சமயத்தின் பொற்காலம் கடைச்சங்க காலத்தின் இறுதியாகிய கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னும் தேவாரகாலமாகிய ஏழாம் நூற்றாண்டின் முன்னும் ஆகிய ஏறக்குறைய நானூறு ஐந்நூறு ஆணடுகளேயாகும். இந்தக் காலத்தைக் காவியக்காலம் என்றும் கூறலாம். பெருங்கதையும் ஒப்பற்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிந்தாமணியும் பிறவுமாகிய மிகச் சிறந்த பெருங்காப்பியங்கள் இந்தக் காலத்திலே தான் தோன்றின. சமணசமயச் சான்றோராகிய கொங்குவேளிரே முதன்முதலாகக் காவியங்கட்குக் கால்கோள் விழாச் செய்தவர் ஆவர். கொங்குவேளிரும் இளங்கோவடிகளும் சீத்தலைச்சாத்தனாரும் பண்டைய அகப்புற நெறித் தமிழிலக்கிய மரபினின்றும் காவிய நெறியைக் காட்டி ஒரு புரட்சி அல்லது புதுமையைத் தோற்றுவித்தனர். இம் மூவரும் செய்யுள்நடைத் திறத்தில் பண்டைய மரபினையே பின்பற்றிக் காவியம் செய்தனர். திருத்தக்கதேவர் அந்தப் புதுமையின் மேலும் ஒரு புதுமை செய்தனர். பழைய செய்யுட் போக்கையும் மாற்றிப் புதியதொரு நெறியைப் படைத்துக் கொண்டுவிட்டனர். தேவர்க்குப் பின் இற்றைநாள்காறும் நந்தமிழன்னை தேவர் காட்டிய அப்புது நெறி பற்றியே இனிதின் நடப்பாளாயினள்.
தேவர்க்குப் பின்னர், காலப்போக்கிலே தோன்றிய நல்லிசைப் புலவர் பலரும் தேவருடைய அடிச்சுவடுபற்றியே பெரிய - சிறிய - வனப்பு நூல்களைப் படைத்தளிப்பாராயினர்; சிந்தாமணிக்குப்பின் தோன்றித் தமிழகத்திலே சிறப்புற்றுத் திகழும் இலக்கியமனைத்தினும் சீவக சிந்தாமணியின் நறுந் தமிழ்மணம் விரவியிருத்தலைக் காணலாம். தேவர் நெறிபற்றிக் காப்பியமியற்றிய நல்லிசைப் புலவர்களில் கம்பநாடரே தலைசிறந்தவர் என்னலாம். கம்பநாடரின் பெரும் புகழுக்குத் திருத்தக்கதேவர் செய்தருளிய சீவக சிந்தாமணியும் ஒரு காரணம் என்பது மிகையன்று.
இனி, திருத்தக்கதேவர் தாம் மேற்கொண்டிருந்த துறவு நெறிக்குத் தகத் தமது இளமையிலேயே இயற்றிய சிறு நூலாகிய நரிவிருத்தம் தன்னகத்தே அரிய மணிகள் பலவற்றைக்கொண்டு திகழ்கின்றது. நரி விருத்தத்திலே ஒரு பாட்டு நந்தேவர் சீவக சிந்தாமணியைச் செய்தருளியதற்குரிய காரணத்தைக் குறிப்பாகத் திறம்பட வுணர்த்துகின்றது. அது,
-
"பற்றுளம் அகல நீக்கிப் பாசிழைப் பரவை யல்குற்
பொற்றொடி மகளிர் தங்கள் புணர்முலைக் குவட்டின் வைகிச்
சுற்றத்தார் சுற்ற வாழ்தலன்றெனின் துறந்து போகி
நற்றவம் புரிவில் லாதார் நடலை நோய்க் கடலுள் ஆழ்ந்தார்."
(நரி விருத்தம் : 38)
என்பதாம். தேவர் காட்டும் ஆருகத சமயநெறி, பிற்காலத்தே காணப்பட்ட வறட்டுச் சமணநெறி போன்றதன்று, அருளுடைய திருக்குறள் நெறியையே பெரிதும் தழுவியதென்று தெரிகின்றது. பற்றுளம் அகலநீக்குதல் ஒன்றே குறிக்கோள். மனிதன் அரசனாயிருக்கலாம் ; அறநெறி பிறழாமல் போரிடலாம் ; மகளிரை மணக்கலாம் ; குறிக்கோளைமட்டும் மறந்துவிடாமே இருத்தல் வேண்டும் ; காமஞ்சான்ற கடைக்கோட்காலைத் துறந்துபோய் நற்றவம்புரிதல் சாலும் என்பது தேவர் கொள்கை என்று தெரிகிறது. இந்தக் கொள்கையையே தேவர் இம் மாபெருங் காப்பியத்திலே உலகினர்க்கு விரித்து விளம்பியிருக்கின்றனர்.
ஆயர்பாடியிலே கண்ணன் பற்றின்றியே மகளிர் பலரை மணந்து மெய்வாழ்க்கை காட்டினாற் போன்று சீவக சாமியும் எண்மர் மகளிரை மணந்தும் பகையை வென்றும் அருளாட்சி நடத்துகின்றான். கூர்த்த உணர்வுடையோன் ஆகலின் மிக விரைவிலேயே அவன் மெய்யுணர்ந்து விடுகின்றான். தவத்தின் முன்னர் இப் பேருலகம் ஒரு சிறு ஐயவித்துணையும் ஈடாகாது என்றுணர்ந்து விடுகின்றான். உணர்ந்தவுடன் படநாகம் தோலுரித்தாற் போன்று உலகத்தை உதறித்தள்ளி வீடுபேறடைகின்றனன். ஒவ்வொரு மனிதனும் இந்தச் சீவக சாமியைப் போலவே வாழ்ந்து கடைத்தேற வேண்டும் என்பதே அடிகளார் இந்தக் காப்பியத்தாலே உலகினர்க்குச் செய்யும் செவியறிவுறூஉ ஆகும் என்க.
ஒரு காப்பியம் மக்கள் உள்ளத்தை எதனாலே அள்ளிக் கொள்ள வல்லதாகின்றது என்னும் உண்மை ஒன்றனைத் திருத்தக்கதேவர். நன்குணர்ந்தவர், காவியங்களிலே அவலச் சுவைமட்டுமே மாந்தர் நெஞ்சத்தை உருக்கி வார்த்துவிடும் பண்புடையதாகும். மற்றொரு தேவராகிய தோலாமொழித் தேவருந்தாம் பெருங்காப்பியம் செய்திருக்கின்றனர். இந்த நுணுக்கத்தை அவர் சிறிதும் அறிந்திலர் என்றே தோன்றுகின்றது. சூளாமணி முழுவதையும் படித்தாலும் ஒரு துளி கண்ணீர் சுரவாது. இஃது என்னநுபவம். சிந்தாமணியிலோ தேவர் முதலிலம்பகத்திலேயே அவலச் சுவையினாலே கற்போர் நெஞ்சத்தைப் பாகாக உருக்கிவிடுகின்றார். பாவம் ! முடிமன்னன் பெருந்தேவியாருந் துணையின்றி "உண்டென வுரையிற் கேட்பார் உயிருறு பாவ மெல்லாம் கண்டினித் தெளிக" வென்று காட்டுவாள்போல ஆகி, நெருநல் வரையில் , அரண்மனையிலே தேவர் மகளிர் என மகிழ்ந்திருந்தவள் வெண்டலை பயின்ற சுடுகாட்டிலே தமியளாகிச் சீவக சாமியை ஈன்றெடுக்கும் நிகழ்ச்சிபோன்ற அவலச்சுவைக்கு உறைவிடமான பகுதியை நான் வேறெந்தக் காப்பியத்தினும் கண்டதில்லை. இந்தப் பகுதியை நினைத்தாலே என் கண்ணில் தொடுமணற் கேணியிற் சுரந்து நீர்பாய்வது அநுபவத்தாற் கண்ட வுண்மை. இந்தச் சுவையே கற்போருளத்தே காலூன்றி நின்று இந்தக் காவிய முழுதிற்கும் சுவை பயந்து நிற்கின்றது. பின்னர் யாண்டும் பெரும்பாலும் காமச்சுவையே பேசிக் களிப்பூட்டக் கருதிய தேவர் இந்த நூலின் முதலிலம்பகத்திலேயே ஒப்பற்ற அவலச் சுவையைத் தேக்கி வைத்திருப்பது அவருடைய தெய்வத்தன்மையுடைய புலமைத் திறத்தை நன்கு விளக்குகின்றது.
இனி இந்த நூலிலே காமநெறி படர்ந்து கேடுறுவார்க்கு எடுத்துக்காட்டாகக் கதைத் தலைவன் தந்தையாகிய சச்சந்தனே அமைகின்றனன். மற்றுச் சுடுகாட்டிலே பிறந்த நம்பியோ பல்வேறு மகளிர்களை மணந்தும் பற்றுள்ளம் அகல நீக்கியே வாழும் திறத்திற்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றான். சீவகன் வரலாற்றிலே அவன் செயல் பலவற்றினும் அவனுடைய இந்த மேதகவு விளங்குவதை அங்கங்கே காணலாம்.
சீவகனுடைய நல்லாசிரியராகிய அச்சணந்தி அவனுடைய மனப்பரிபாகத்தை நன்குணர்ந்தே அவனுடைய இளமைப் பருவத்திலேயே காஞ்சிப் பொருளாகிய நிலையாமையை உணர்த்தி விடுகின்றனர். மேலும், அவன் பகைவனாகிய கட்டியங்காரன்பால் ஓராண்டு முடியுந்துணையும் வெகுளல் கூடாது என்றும் வேண்டிக் கொள்கின்றனர். ஆசிரியரின் வேண்டுகோட்கிணங்கிய சீவகன் சிங்கத்தைக் குறுநரிக்குழாம் வளைந்தாற்போன்று தன்னைச் சூழ்ந்துகொண்ட கட்டியங்காரன் ஏவலர்க்கடங்கிச் செல்கின்றனன். இந் நிகழ்ச்சியால் சீவகன் வெகுளியைத் தன் அறிவின் ஆட்சிக்குள்ளே அடக்கியவன் என்பது புலனாம். மற்றும் சீவகன் ஊழ்தர உழுவலன்போடு வந்த குலமகளிர் பாலன்றி யாண்டும் காமத்தாலே நெஞ்சு நெகிழ்ந்திலன் என்பதையும் இந்நூலில் யாண்டுங் காணலாம். அவன் மிக்க இளமைப் பருவத்திலேயே தனக்குப் பரிசிலாக நந்தகோனால் வழங்கப்பட்ட பேரழகியாகிய கோவிந்தையாரை மனைவியாக ஏற்றுக்கொள்ளாமை அவன் காமத்தையும் தன் அறிவின் ஆட்சிக்குட்படுத்தியவன் என்பதை நன்கு விளக்கும். காட்டகத்தே தன்னைக் கண்டு காமுற்றுக் குறிஞ்சிப்பூங் கோதைபோலும் குங்கும முலையினாளாகிய அநங்கமாவீணை என்பாள், காமனம்பு வீசுமுன்பே கண்ணம்பை வீசியகாலத்தே அவளை நோக்கவும் நடுங்கினான் சீவகன். இஃது அவன் ஒழுக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. சீவகன் மன்னுயிரையும் தன்னுயிரென எண்ணும் அருட்கடல் என்பதற்குக் காட்டுத்தீயால் வளைப்புண்ட யானைகளைக் காப்பாற்றினதும் நாய்க்கு மறைமொழி செவியுறுத்தி நற்கதியுய்த்ததும், கட்டியங்காரன் பரிசனங்கட்குப் பரிந்து விருத்தி நல்கியதும், இன்னோரன்ன பற்பல சான்றுகள் உள்ளன. சீவகனுடைய மொழிகள் பற்பல விடங்களிலே மெய்க்காட்சிகளின் விளக்கமாக விருக்கின்றன. இவ்வாறு இச் சிந்தாமணி, பல்லாற்றானும் ஒப்புயர்வற்ற தலைவனைத் தலைவனாகக் கொண்டு கற்போருக்குக் கழிபேரின்பமும் சிறந்த உறுதிப் பொருளும் வழங்கும் ஒரு சிறந்த வனப்பு நூலாகவே திகழ்கின்றது.
இனி, இச் சீவக சிந்தாமணி தொடக்கத்திலே மழையின்றி மாநிலத்ததார்க்கில்லை என்பதுபற்றி மழைவளம் பேசத் தொடங்குகின்றது. சிந்தாமணியிலே காணப்படுகின்ற ஏமாங்கத நாடு நன்னாட்டிற்கெல்லாம் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. வளமிக்க உழவர் ஆரவாரம் எங்கெங்கும் கேட்கப்படுகிறது. "காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகினெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து, தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும் ஏமாங்கதப் பெருநாட்டின் புகழ்" திசை யெலாம் பரவுகின்றது. அந்நாட்டு மன்னனோ நாவீற்றிருந்த புலமாமகளோடு நன்பொற் பூவீற்றிருந்த திருமகள் புல்ல நாளும் பாவீற்றிருந்த கலை பாரறச்சென்ற கேள்விக் கோவாகத் திகழ்கின்றான். ‘தள்ளா விளையுளு தக்காரும் தாழ்விலாச், செல்வருஞ் சேர்வது நாடு’ என்னுந் திருக்குறட்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது ஏமாங்கதநாடு. இந்த நாடு தரும் இன்பம் எல்லையற்றதாகும். சிந்தாமணிக்குப் பின்னர்க் காப்பியஞ் செய்த நல்லிசைப்புலவர் நாட்டுகின்ற நாடுகள் எல்லாம் இந்த ஏமாங்கதத்தின் வழிவழித் தோன்றிய நாடுகளேயாம்.
நல்வாழ்க்கைக்குக் கல்வியும் செல்வமும் இன்றியமையாதன. இவற்றோடு குடிதழீஇக் கோலோச்சும் கொற்றவனும் வேண்டும் என்னும் உண்மையைச் சீவகசிந்தாமணி தொடக்கச் செய்யுள் ஒன்றிலேயே அறுதியிட்டுக் கூறுகின்றது. நாவீற்றிருந்த புலமாமகள் என்பது அறிவுச் செல்வத்தை உணர்த்துகின்றது. பொற்பூ வீற்றிருந்த திருமாமகள் என்பது செல்வத்தை உணர்த்தும். கேள்விக்கோ என்றது செங்கோன் மன்னனைக் குறிக்கும். இவ்வாறு சிந்தாமணியிலே மாந்தர் வாழ்க்கைக்குச் சிறந்த நன்னாடு மிக அழகாகப் படைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் அரசியல் நெறியும் போர்நெறியும் பிறவும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. காதல் வாழ்க்கையின் மாண்பு விரித்தோதப்பட்டிருக்கின்றது. சுருங்கக் கூறுமிடத்து நல்வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புவோர்க்கெல்லாம் இன்றியமையாத உறுதிப் பொருள் பலவற்றையும் சிந்தாமணி வழங்கும் மாண்புடையது என்னலாம். அழகாலே பன்னிற மலர்களும் மலர்ந்துள்ளதோர் அழகிய பூம்பொழிலை யொப்பது. பயனாலே பல்வேறு தீஞ்சுவைக் கனிகளும் நல்கும் பழுமரமங்கள் செறிந்ததொரு பழத்தோட்டமே இப் பெருங் காப்பியம் என்போம்.
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக ஆட்சியாளர் திருவாளர் வ. சுப்பையா பிள்ளை யவர்கள், இந்தப் பெருங் காப்பியமும் இதற்கமைந்த நச்சினார்க்கினியர் நல்லுரையும் கற்று வல்லார்க்கன்றி ஏனையோர் அறிவதற் கரியனவாயிருத்தல் கருதி நச்சினார்க்கினியர் நல்லுரையையே தழுவி யாவர்க்கும் எளிதிற் பொருள் விளங்கும்படி இப்பொழுது ஒரு புத்துரை வரைவித்து விளக்கவுரையும் கூட்டி வெளியிடுகின்றார்கள். இதற்கு ஒரு முன்னுரை வரைந்து தரும்படி எனக்குப் பணித்தார்கள். சிந்தாமணியினைப் போற்றிப் பயிலுமவர்களுள் யானும் ஒருவனே யாயினும் அஃது எனக்குத் தரும் இன்பத்தினை எழுதிக்காட்ட வல்லேன் அல்லேன். காவியவின்பம் பெரும்பாலும் காதலின்பத்தையே ஒத்திருக்கின்றது. கருத்தொத்து ஆதரவுபட்ட காதலரை நோக்கி ‘நீயிர் நுகர்ந்த இன்பம் எத்தகையது' என்று வினவினால் அவர் எங்ஙனம் சொல்லிக்காட்ட வியலும் ? சீவக சிந்தாமணியின் இலக்கிய வின்பமும் அப்படிப்பட்டதே என்பதில் ஐயமில்லை. விளங்கவில்லை என்று குறை கூறுவதற்கு இடமில்லாமல் திருவாளர் பிள்ளையவர்கள் இப்பொழுது இப்புதியவுரையினாலே செய்துவிட்டார்கள். இந்த அருமுயற்சிக்குத் தமிழுலகம் பிள்ளையவர்கட்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. இனி நாம் செய்யவேண்டியது அந்த நூலை நன்கு பயின்று அது தரும் பேரின்பத்தை நுகர வேண்டும்; அத்துணையே . அந்தப் பயிற்சி நம்மை இம்மையிலேயே வானவராக்கிவிடும்.;
வாழ்க சிந்தாமணி ! வாழ்க திருத்தக்க மாமுனி !
வாழ்க செந்தமிழ் !
மேலப்பெருமழை இங்ஙனம்,
24.11.1958 பொ. வே. சோமசுந்தரன்
-----------
நூலாசிரியர் வரலாறு
திருத்தக்கதேவர் சோழர்குலத் தோன்றல் என்று கூறப்படுகின்றார். இவர் காலம் கி. பி. இரண்டாம நூற்றாண்டிற்கும் ஏழாம் நூற்றாண்டிற்கும் இடைநிகழ்ந்த காலத்தில் ஒரு பகுதியாக விருக்கக்கூடும் என்று தெரிகிறது. இவர் அந்தக் காலத்திலே தமிழகத்திலே பெரிதும் செல்வாக்குற்றிருந்த ஆருகத சமயத்தைச் சார்ந்தவராவார். மேலும் இளமையிலேயே இவர் துறவியாகி யிருந்தவர். பல கலையும் கற்றுத் தேர்ந்து அறிவுக்கடலாகத் திகழ்ந்தவர்.
திருத்தக்கதேவர் சான்றோரிணக்கம் கருதி மதுரை மூதூரை யடைந்து ஆங்குச் சங்கப் புலவர்களோடு கூடி அளவளாவி யிருந்தனர் என்றும், அப்பொழுது ஆங்கிருந்த தமிழ்ப்புலவருட் சிலர் ஆருகத சமயத்தவர் துறவு முதலியவற்றைப் பாடுவரேயன்றிக் காமச்சுவை கெழுமிய காப்பியம் பாடவறியார் என்று கூறினர் என்றும், அது கேட்ட தேவர் தாம் அக் குறையை யகற்றக்கருதிக் காமச்சுவை மிக்க இச் சீவக சிந்தாமணியை இயற்றிப் பெரும்புகழ் எய்தினர் என்றும் ஒரு வரலாறு கேட்கப்படுகின்றது.
இன்னும் காப்பியம் செய்யக் கருதிய தேவர் தங் கருத்தினைத் தம் ஆசிரியர்க்குக் கூறியபொழுது அந்த ஆசிரியர் தேவருடைய புலமையாற்றலை அளத்தற் பொருட்டு அப்பொழுது ஆங்கே ஓடிய ஒரு நரியைச் சுட்டிக்காட்டி ‘நீர் காவியம் பாடு முன்னர் இந்த நரியைப் பொருளாகவைத்து ஒரு சிறு நூல் இயற்றிக் காட்டுக' என்று பணித்தனர் என்றும், தேவரும் அப்பொழுதே ஆசுகவியாக விரைந்தொரு சிறு நூல் பாடி அதற்கு நரி விருத்தம் என்று பெயரிட்டு ஆசிரியர்க்குக் காட்டினர் என்றும், அந்நூலின் அருமையுணர்ந்த ஆசிரியர் ‘இனி நீயிர் நினைந்தபடியே பெருங்காப்பியஞ் செய்க ! ’ என்று பணித்தனர் என்றும், அப்பணி தலைமேற்கொண்டு தேவர் அப் பெருங்காப்பியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் பாடி வழங்கும்படி ஆசிரியரை வேண்ட அவரும் ‘செம்பொன் வரைமேற் பசும்பொன்‘ என்று தொடங்கும் பாட்டைப் பாடிக் கொடுத்தனர் என்றும் ; பின்னர், தேவர் "மூவா முதலா உலகம்" என்னும் கடவுள் வாழ்த்தைப் பாடிக் காப்பியந் தொடங்கினராக இந்தச் செய்யுள் தம்முடைய செய்யுளினுங் காட்டிற் சிறந்திருத்தல் கண்ட ஆசிரியர், இதனையே முதற் செய்யுளாக அமைத்துக்கொள்ளும்படி பணித்தனர் என்றும் ஆசிரியர் பணியாகலின் அதனை மறுக்கமாட்டாராய் அங்ஙனமே தம் செய்யுளையே முதலாக வைத்துப் பாடினர் என்றுங் கூறுவர்.
இன்னும் இளமையிலேயே துறவியாகிய இவர் காமச்சுவை ததும்ப இவ்வாறு எங்ஙனம் பாடவியலும் என்று சிலர் ஐயுற்ற பொழுது தேவர் தீயிற் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பின் துண்டினைக் கையிலேந்தித் தம்முடைய நல்லொழுக்கத்தைப் பலரும் அறியச் செய்தனர் என்றும் கூறுவர். இவை யெல்லாம் தேவரைப்பற்றிக் கன்னபரம்பரையாக வழங்கிவருஞ் செய்திகளேயாம். இவற்றிற்குச் சான்றுகள் இல்லை.
திருத்தக்க தேவருடைய ஒப்பற்ற நல்லிசைப் புலமையை என்றென்றும் உலகத்தார்க்கு நன்கு விளக்கிக்கொண்டு நின்று நிலவும் நற்சான்று அப்பெரியார் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் இந்த வனப்பு நூலேயாகும். இவர் இயற்றிய இந்த நூலைக் கல்லாதார், ஒருதலையாகக் கல்லாதவரேயாவர். சிந்தாமணியின் தீஞ்சுவை தேறாதார் செந்தமிழின் தீஞ்சுவை தெரியாப் பதடிகளே.
திருத்தக்கதேவர் பொதுவாகத் தமக்கு முந்திய செந்தமிழிலக்கியங்களிலே கண்ட அறிவுச் செல்வம் பலவற்றையும் திரட்டித் தமது சிந்தாமணியிலே பொதிந்து வைத்துள்ளனர். சிறப்பாக இவர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கினும் ஆசிரியர் திருவள்ளுவனாரையே பின்பற்றித் தமது காப்பியத்தைப் படைத்தருளி யிருக்கின்றார். இவருடைய செய்யுள் சில திருக்குறட் செய்யுள் சிலவற்றிற்கு அரிய விளக்கமாகவே அமைந்திருக்கின்றன. இறைவனைப் போன்று என்றென்றும் கட்டிளமை திகழும் கன்னிமையோடு நின்று நிலவும் நம் தமிழ்த் தெய்வத்திற்கு இவர் இயற்றி யளித்த சிந்தாமணி அழகின்மேல் அழகு செய்யும் ஓர் அருங்கலம் ஆகும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க ! திருத்தக்க தேவர் மலரடிகள்!
மேலப்பெருமழை இங்ஙனம்,
24.11.1958 பொ. வே. சோமசுந்தரன்
---------------
சீவக சிந்தாமணி - பாகம் 1 (பாடல்கள் )
சித்தர் வணக்கம்
-
மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே.
விளக்கம் : ஒண்ணிதிச் செல்வன் - வீடாகிய விளங்கிய நிதியை உடைய செல்வன். குணம்: எண் குணங்கள். அவை: தாவாத இன்பம் என்பதனாற் பெறப்பட்ட வரம்பிலா இன்பம் நீங்கலாக உள்ள வரம் பிலாஅறிவு, வரம்பிலா ஆற்றல், வரம்பிலாக் காட்சி, பெயரின்மை, மரபின்மை, ஆயுவின்மை, அழியா இயல்பு என்பனவாம். இஃது அருகசரணம் சித்தசரணம் சாதுசரணம் தன்மசரணம் என்னும் நான்கனுட் சித்தசரணம். சித்த சரணம்-சித்தனை வணங்கும் வணக்கம். சித்தன்: காதி அகாதி என்னும் இருவகைக் கருமங்களையும் வென்று, அக்கினி யிந்திரனால் உடம்பைத் துறந்து, பரிநிர்வாணம் பெற்று மூவுலகத்து உச்சியில் இருப்பவன். இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்து நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆதலானும், முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி (தொல்-சிறப்பு) என்றதனால், அகத்தியத்தின் வழி நூல் தொல்காப்பிய மாதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந்நூலிற் கூறிய இலக்கணமே இதற்கிலக்கண மென்றுணர்க.
அவ்விலக்கணத்திற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பா நான் கென்றும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறுகின்றுழி, இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் (தொல்.செய்.238) என்பதனால், மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பப் பழையதொரு கதைமேற் கொச்சகத்தாற் கூறின், அதுதோல் என்று கூறினமையின், இச் செய்யுள் அங்ஙனங் கூறிய தோலா மென்றுணர்க. இச் செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம்; (தொல்-புறத்-27). இதனானே, யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது (தொல்-செய்.641) என்பதற்குத் தேவபாணியும் காமமுமே யன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.
முந்து நூல்களிற் காப்பியம் என்னும் வடமொழியால் தொடர்நிலைக்குச் செய்யுட்குப் பெயரின்மையும் இதற்குப் பிறகு கூறிய நூல்கள் இதற்கு விதியன்மையும் உணர்க. இனி, இத் தொடர்நிலைச் செய்யுளை இனம் என்ப. அந் நூல்கள் இனம் என்று சுட்டிய உதாரணங்கள்தாம் அவர் சேர்த்த அவ்வப் பாக்கட்கே இனமாகாது, ஒழிந்த பாக்கட்கும் இனமாதற்கு ஏற்றலானும், துறையை விருத்தமாகவும் தாழிசையை விருத்தமாகவும் ஓதுதற்கு அவை ஏற்றமையானும், மூவா முதலா என்னும் கவி முதலியன தாழம்பட்ட (தாழ்தல் பொருந்திய) ஓசையான் விருத்தமாயும் சீர்வரை யறையானும் மிகத்துள்ளிய ஓசையானும் துறையாயும் கிடத்தலின், இதனை விருத்தக் கலித்துறை யெனல் வேண்டும்; அது கூறவே, துறையும் விருத்தமும் எனப் பகுத்தோதிய இலக்கணம் நிரம்பாதாம் ஆகலானும் இன மென்றல் பொருத்தமின்று. இச் செய்யுட்களின் ஓசை வேற்றுமையும் மிக்கும் குறைந்தும் வருவனவும் கலிக்கே ஏற்றலிற் கொச்சகமென்றடங்கின.
யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது என்பதனால், இக்கவியும் மேலிற் கவியும் முன்னிலையன்றியும் தேவர்ப் பராயினவாம். இனி அளவியற் சந்தம், அளவழிச் சந்தம், அளவியற்றாண்டகம், அளவழித் தாண்டகம், சமசந்தத் தாண்டகம், சந்தத் தாண்டகம், தாண்டகச் சந்தமென அடக்குவார்க்கு அவற்றுள்ளும் சிலவன்றி முழுதும் அடங்காமை உணர்க. மூவா முதலா என்பது, மூத்த முதலிய என்னும் பெயரெச்சங்களின் எதிர்மறை அடுக்கு; எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா (தொல்-வினை.39) என்பதனால், உலகம் என்னும் வினைமுதற் பொருளோடு முடிந்தது; முதலா ஏன தம் பெயர் முதலும், (தொல்-மொழி-33) என்பதனான், முதலும் என்பதொரு வினை உடன்பாட்டிற்கு உளதாம். ஆசிரியர், காலம் உலகம் (தொல்-கிளவி-58) என்றும் பிறாண்டும் சூத்திரம் செய்தலின் அது வடமொழி அன்று. ஈண்டு உலகம் என்றது உயிர்க்கிழவனை, உலகம் உவப்ப (முருக-1) என்பது போல. ஒன்று+மூன்றும்: ஒரு முன்றும். ஒன்று என்பதில் உள்ள குற்றியலுகரம் மெய்யொடுங்கெட்டு, முதலீ ரெண்ணின் ஒற்று ரகரம் ஆகும், உகரம் வருதல் ஆவயினான (தொல் - குற்றியலுகரப்-33) என்னும் விதியும் பெற்று, அளந்தறி கிளவியும் (தொல் - குற்றியலுகரப்-41 என்னும் சூத்திரத்துத், தோன்றுங்காலை என்ற இலேசான் முடிந்தது. ஒரு மூன்றும் ஏத்த எய்தி என்க. உம்மை, இனைத்தென அறிந்த சினை முதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் (தொல்-கிளவி-33) வந்தது, உலகம் என்னும் பெயர் மூன்றென்னும் பெயர்ப் பயனிலை கொண்டு, அதுதான் ஏத்த என்னும் வினைப் பயனிலை கொண்டது.
வருத்தமாகிய குறிப்புணர்த்திய தா என்னும் உரிச்சொல் வினைக்கு முதனிலையாய்த், தாவாத எனப் பெயரெச்ச மறையாய் இன்பம் என்னும் பெயரொடு முடிந்தது. ஏத்தத் தாவாத என்பது, வினையெஞ்சு கிளவியும்... வல்லெழுத்து மிகுமே (தொல். உயிர்மயங்கு-2) என்பதனால் ஒற்று மிக்கது. தாவாத வின்பம் என்பது உடம்படுமெய்யாயிற்று; இன்பம் என்னும்பெயர் தலையாய தென்னும் குறிப்புப் பெயரைக் கொண்டது; இன்பந்தலையாயது என்புழி அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும் (தொல்-புள்ளி-19) என்பதனான் மகரம் நகரம் ஆயிற்று. தன்னின் எய்தி என்ற இன் காரக ஏதுப் பொருட்கண் ஐந்தாம் உருபு. தன்னில் எய்தி என்று பாடமாயின், மணியினது ஒளியும் மலரினது நாற்றமும் போலத் தன்னுள்ளே பெற்று என்க. எய்தி என நின்ற செய்தெனெச்சம் காரணகாரியப் பொருட்டாய், நின்ற என்னும் பெயரெச்ச வினையொடு முடிந்து, அது குணம் என்னும் பொருட்பெயரோடு முடிந்தது.
ஓவாது என்னும் எதிர்மறை யெச்சமும் நின்ற என்பதனோடு முடியும். குணத்து: அத்து: இரண்டா முருபின்கண் வந்த சாரியை. அத்தே வற்றே ஆயிருமொழி மேல் - ஒற்றுமெய் கெடுதல் தெற்றென்றற்றே (தொல்-புணரியல்-31) என்பதனால் மகரங்கெட்டு, அத்தின் அகரம் அகர முனையில்லை (þ-þ-23) என்பதனால் அகரம் கெட்டு முடிந்தது. குணத்தொண்ணிதி என்பதில், குற்றியலுகரமும் அற்று (þ-þ-3) என்பதனால் வருமொழியின் ஒகரம் ஏறிற்று. ஒண்ணிதி: பண்புத்தொகை. ஒண்ணிதிச் செல்வன்: இகர வீற்று வேற்றுமைச் சொல்லாதலின் வல்லெழுத்து மிக்கது. செல்வன் என்றார், அழியாத இன்பத்தை நுகர்தலின். என்ப என்னும் முற்றுச் சொல் பெரியார் என்னும் தோன்றா எழுவாய்க்குப் பயனிலையாயிற்று. தேவும் தெய்வத்துக்கு ஒரு பெயர். தேவுக்கு ஆதிதேவன் என நான்கன் உருபு விரிக்க. ஆதியாகிய தேவன் என்க. செம்மை+அடி: சேவடி, பண்பு மாத்திரையாய்க் குறைந்த சொல்லாதலின் மருவின் பாத்தியதாய் (தொல் குற்றியலுகரப்-77) நின்றது. சேவடி சேர்தும் ஒற்று இரட்டாது நின்றது இரண்டாவதற் கோதிய திரிபில் அன்னபிறவரல் (தொல்-தொகை-15). சேர்தும்: தும் ஈற்றுப் பன்மைத் தன்மை; ஈண்டு ஒருவரைக் கூறும் பன்மை. அன்று: அசை. ஏகாரம்:ஈற்றசை.
இனி, தான் மூவா முதலாக வேண்டி யென்றும், நாம் மூவா முதலாக வேண்டி யென்றும் வினையெச்சமாக்குவாருமுளர்: அதற்கு எய்தி என்பதனோடு முடிக்க. மேல்வரும் செய்யுட்களுக்கும் இவ்வாறுரைப்பின் உரை பெருகும் ஆதலின், இனி நல்லறிவுடையோர் உய்த்துணருமாறு சுருங்கவுரைப்பாம். செம்பொன் (சீவக-2) என்னுங் கவியாற் குருக்கள் அருகனை வணங்குதலின் தாம் சித்தனை வணங்கினார். குருக்கள் கூறுதலானும் அருகனை வணங்குதலானும் அதனை முன்வைக்க எனின், குருக்களே, இது நன்று; இதனை முன்னே வைக்க என்றலின் முன் வைத்தார். குருக்கள்; திருத்தக்க தேவரின் ஆசிரியர். யாமும் அவன் சேவடி சேரின் ஓவாது நின்ற குணத் தொண்ணிதிச் செல்வராய்த் தாவாத இன்பந் தலைப்படுவம் ஆதலானும், அவன் சேவடி சேர்தும் என்றார் என்றும் கொள்க. கல்விப்பயனும் அவ் வாலறிவன் நற்றாள் தொழுதலே ஆகலின் இவ்விலக்கியத்தினை ஓதுவோர்க்கு இந்நூற்பயனைக் குறிப்பாகக் கூறியவாறுமாயிற்று. இறைவர் பற்பலர் உளர் என்பாரேனும் அவ்விறைவர்க்கெல்லாம் இறைவனாயுள்ள கடவுள் ஒருவனே என்பார் தேவாதிதேவன் என்றார். அவன் திருவடி நினைத்தற்குஞ் சேர்தற்கும் இனிதாயிருக்கும் என்பார். தாவாத இன்பந்தன்னின் எய்தி ஓவாது நின்ற செல்வன் சேவடி என்றார். இச் செய்யுளில் உலகம், தலையாய இன்பம், குணத்தொண்ணிதி, செல்வன், தேவாதிதேவன், என்னும் மங்கலச் சொற்கள் வந்துள்ளன.
-----------
2. அருகர் வணக்கம்
-
செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்
அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து
வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்
அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம்.
விளக்கம் : பிதிர்வின், இன்: ஐந்தன் உருபு; உவமப்பொரு. உவமப்பொரு -ஒப்புமையுறக் கூறுதல். எழுத்திட்ட தென்றது ஒற்றுமையாகக் கிடந்தற்கும் பிதிர்வென்றது சிறியவும் பெரியவுமாகிய வடிவிற்கும் உவமை. அருகனுக்கு இரேகை நூற்றெட்டும், அடையாளங்கள் ஆயிரமும் உண்டென வடநூல்கள் கூறும். காலை யிளஞாயிறு வெப்பந் தராதேனும் நண்பகலில் வெப்பந்தரும் ஆகையால், வெம்புஞ்சுடர் என்றார். யாவரும் விரும்பும் சுடரென்று கொண்டு இளஞாயிறு என்றலுமாம். சுடரின், இன்: உறழ் பொரு-ஒன்றனால் ஒன்றை மிகுத்துக் கூறுதல். முடிமேல் என்பதன்பின் வைத்த என வருவித்து முடிமேல் வைத்த என்க.
செம் பொன்-பசும் பொன்: தொடைமுரண்: வண்ண வேறுபாடு இன்று. இஃது அருகசரணம்: திருத்தக்க தேவரின் ஆசிரியர் அளித்தது.
மாண்பமைந்த குழுவினருக்கு வணக்கம்
---------
3.
-
பல் மாண் குணங்கட்கு இடனாய்ப் பகை நண்பொடு இல்லான்
தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற
சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க
நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன்.
விளக்கம் : புனை நல்லறத்தையும் குழுவினையும் சரண் சென்று தொக்கநல்வினை உடையேன் என்றலின் சாதுசரணமும் தன்மசரணமும் கூறியதாகும் இச் செய்யுள். சாதுக்கள்: திருத்தக்க தேவரின் ஆசிரியர்களாகிய சாதுக்கள். இவர்கள் பஞ்ச பரமேட்டிகளைச் சார்ந்தவர்கள். சொல்-புகழ். ஆய்-ஆக: வினையெச்சத்திரிபு. பன்மாண்குணங்கட் கிடனாகப் புனைநல்லறம் என்று கூட்டுக. பகை நண்பொ டில்லான் (கூறிய) பன்மாண் குணங்கட்கிடனாய் என மொழிமாற்றிப் பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர். இல்லா என்பது பாடமாயின், இல்லா அறம் எனக் கூட்டுக. இறைவன் நண்பிலனாயினும் அருஞ்சுரத்தின்கண் மரம்போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு.
4. அவை அடக்கம்
-
கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்
நற்பால் அழியும் நகை வெண்மதி போல் நிறைந்த
சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப்
பொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார்.
விளக்கம் : எனவே, யான் அத் தன்மையன் அல்லன் என்பது சொல்லெச்சம்: சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை, புல்லிய கிளவி எச்சமாகும் (தொல் -செய்-206) என்றாராதலின். மறு இல்லாத மதிக்கு மறு அடுத்தாற்போலக் கலை நிறைந்த சொற்கு அடுத்த மறுவாவது வழுவமைக்குஞ் சொல். அதனைச் சங்கத்தார் ஆராய்ந்தமை கூறவே, அவை அடக்கம் உணர்த்தியதாயிற்று. மதி போல் நிறைந்தமதி யெனவும் ஆம்.
மணியும்: உம், உயர்வு சிறப்பும்மை. கழூஉவி: இன்னிசை யளபெடை.
---------
5.
-
முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும்
அந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்
இந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றே
பொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார்.
விளக்கம் : முந்நீர்: பண்பாகு பெயராய்க் கடலை உணர்த்தியது. நீர்-தன்மை. முந்நீர்: ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்னும் முத்தன்மையும் உடையது. ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் என்னும் மூவகை நீர்க் கலப்புடையது என்றுங் கூறுவர்.
பிறந்த: பலவின்பால் வினைமுற்று. எனினும் என உம்மை விரிக்க. கொள்ப : பலர்பால் வினைமுற்று. அன்று, ஏ: அசைகள்.
----------
6. பதிகம்
-
மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில்
ஆனேறு அனையான் உளன் சீவகசாமி என்பான்
வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னைத்
தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன்.
விளக்கம் : மீன் ஏறு; சுறவு. கடல் வாழ் சுறவும் ஏறெனப் படுமே (தொல்-மரபு-40) உயர்த்த - மேம்படுத்தின. சாமி : பாகதம் (வடமொழிச் சிதைவு).
-----------
புகழான் என்னும் பெயர் சொல்லுவான் குறிப்பான் அவன் என்னுஞ் சுட்டுப் பெயர் மாத்திரையாக வந்தது. நாணி நின்றோள் அணங்கருங் கடவுளன்னோள் (அகநா-16) என்று அகத்திற் கூறினாற் போல. இது, பொருளோடு புணராச் சுட்டுப் பெயராயினும் (தொல்-கிளவி-37) என்னுஞ் சூத்திர விதி. மேல் இங்ஙனம் வருவனவற்றிற்கெல்லாம் ஒக்கும். கதைக்கு நாயகன் ஆதலிற் சீவகனை முற்கூறினார். (இவ்வாறே சிலப்பதிகார ஆசிரியரும் கோவலனை முற்கூறாமற் கண்ணகியை முற்கூறினார்.) இதன்னை : இதனை: விரித்தல் என்னும் செய்யுள் விகாரம்.
இச் செய்யுளின்கண் இப் பெருங்காப்பியத் தலைவனுடைய அழகு மெய்வலிமை கொடை என்னும் மூன்று பண்புகளும் குறிப்பாற் பெற வைத்துள்ளமை காண்க. மீனேறுயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பினையுடையான் என்றது ஒப்பற்ற அவன் அழகுடைமையை உணர்த்தியவாறு. இந்நூலின்கண் சீவகனுடைய திருமணங்கள் சிறப்புறுதற்கும் இப்பண்பு காரணமாதலுணர்க. இனி ஏறனையான் என்றது அவனது பேராற்றலுடைமையை உணர்த்தியவாறு. இஃது அவன் கட்டியங்காரன் முதலிய பகைவரை வென்றுயர்தற்குக் காரணமாதல் உணர்க. வானேற நீண்டபுகழான் என்றது அவன் வள்ளன்மையை உணர்த்தியவாறு. என்னை? புகழ் என்பது கொடையானே உண்டாவதொன்றாகலான் என்க. இதனைச் சொல்லும்போது சொல்லும் எனக்கே இஃது இனிதாயிருக்கின்றது; எனவே இதனை இவ்வுலகமும் எய்துக என்னும் கருத்தால் இதனை ஓதாநின்றேன் என்பார், இதனைத் தேனூற நின்று செப்பலுற்றேன் என்றும், உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று என்பது பற்றித் தெருண்டாரவை செப்பலுற்றேன் என்றும் ஓதினர்.
-----------
7.
-
கோடாத செங்கோல் குளிர் வெண்குடைக் கோதை வெள்வேல்
ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானை
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்
வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்.
விளக்கம் : செங்கோல் பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம் (அடைமொழி) ஆயினும் கோடாத என்று அடை அடுத்தலிற் கோல் என்னும் அளவில் நின்றது. வெண்குடை : இயைபின்மை மாத்திரை நீக்கிய விசேடணம், உருமுக்குரல் போலுங் குரலையுடைய யானை. வீடாத விகாரம் (விடாத என்பது வீடாத என விகாரப்பட்டது) (2)
-----------
8
-
சேந்து ஒத்து அலர்ந்த செழுந்தாமரை அன்ன வாள் கண்
பூந்தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின்
ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்
வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே.
விளக்கம் : அமிர்தம் கண்ணுக்கினிதாகிய மென்மையும் தன்னை நுகர்ந்தார் பிறிது நுகராமல் தடுக்கும் மென்மையும் உடைமையின் அமிர்தன்ன சாயல் என்றார். சாயல் மென்மை (தொல்-உரி-27) எனப் பொதுப்படச் சூத்திரஞ் செய்தது ஐம்பொறியானும் நுகரும் மென்மையெல்லாம் அடங்குதற்கு. மயில் அன்ன சாயல் (ஏலாதி-17), சாயல் மார்பு (கலி - 65) என ஒளிக்கும் ஊற்றிற்கும் (பரிசத்திற்கும்) வந்தன. பிறவும் காண்க. சாயல்: (பண்பு) ஆகுபெயர். மறுமையிற் சென்றுபெறும் அமுதமும் இவளெனக் கொண்டு மயங்கினமை தோன்ற மீட்டும் அமுதாய் என்றார். வாட்கண் என்புழி வாள் கண் என்பதற்கு வாளா அடைமொழியாக வந்தது எனவுங் கூறலாம்.
------------
9
-
கல்லார் மணிப் பூண் அவன் காமம் கனைந்து கன்றிச்
சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும்
புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச்
செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும்,
விளக்கம் : நனி: விசேடித்து வரும் உரிச்சொல். செல் ஆறு இழுக்குதல்: வெற்றி முரசு கேட்டுக் கலங்குதல். தேவி போகி இழுக்கிச் சேர்ந்தாள் என முடிவுழி அவள் என்று கூறவேண்டாமையின், அது தேவியைச் சுட்டாமல், அங்ஙனம் அமுதாயவள் இங்ஙனம் ஆயினாள் எனத் தேவர் இரங்குதலின், முன்னைய கவியை நோக்கித் தகுதிபற்றி வந்தது. இனி, சாத்தியவள் வந்தாள் என்றாற்போலத், தேவியவள் என வினைக்கு ஒருங்கு இயன்றது என்பாரும் உளர். அது வழக்கிலது என்று மறுக்க.
------------
10
-
நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத்
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும்
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும்
வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும்,
விளக்கம் : நாள் உற்று என்பதற்கு நல்ல நாள் உற்று என்றும் பொருள் கொள்ளலாம். தோள் - கை. உற்று: உவம வாசகம் (உவம உருபு). செப்புற்ற கொங்கை (சிற் -354) என்றார் பிறரும். ஒழியாது (தொல்-தொகை-15) என்னும் இலேசால் கோனை என்னும்(இரண்டன்) உருபு தொக்கது. கதையை உட்கொண்டு அவன் என்பது கந்துக்கடனைச் சுட்டியது. அரசன் இறத்தற்கு ஏதுவாகலின் ஈண்டும் வாளுற்ற கண் என்றார். வாழ்க: வியங்கோள்: இறுதி அகரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. கூனி: விசயையின் தோழியான சண்பகமாலை. நோன்பு : வேட்கையுள்ளது.
---------
-
11. நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும்
விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும்
நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்த வாறும்,
விளக்கம் : கற்றபொழுதே பயன் கொள்ளுதல் அருமையாதலின் ஆங்கே என்றார், மறவரைக் கொல்லாது உயிர்வழங்குதலின் வள்ளல் என்றார். விஞ்சை: குணப்பண்பு. அது பண்பாகு பெயராக விஞ்சையரை உணர்த்தியது. விஞ்சையர்க்கு இறைவன் கலுழவேகன், ஒரு மகளை வென்றான் என்பது இவன் தலைமைக்கு இழிவென உன்னி அவள் செயலாகக் கூறினார். நாகர் : யவணதேவர் என அருக நூல்கள் கூறும். ஓருடம்பாதலும் நீங்கல் வன்மையும்பற்றி உவமையாயினர். நஞ்சு-நைந்து : போலி.
---------
-
12. முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்ச்
செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் தேங்கொள் சுண்ணம்
மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் தம்முள் மாறாய்
இந்நீர்ப் படியேம் இவை தோற்றனம் என்ற வாறும்,
விளக்கம் : அலற ஆர்ப்ப விளையாடும் விளையாட்டென்க. கடி - மிகுதி (உரிச்சொல்). தேன் கொள் சுண்ணம்: ஒளியாலும் நாற்றத்தாலும் ஊற்றாலும் இனிமைகொண்ட சுண்ணம் (வாசனைப்பொடி.) தோற்றனம் மோயினள் உயிர்த்த காலை (அகநா-5) என்றாற்போல வினையெச்சம் முற்றாய்த் திரிந்தது. செந்நீர் : சிவப்பாகிய நீர்: புதுநீர். இருமங்கையர்: குணமாலை, சுரமஞ்சரி.
---------
-
13. சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி
வண்ணம் நெடுங் கண் குண மாலையை வைது மாறிப்
புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்
கண் நோக்கு உடைந்து கடிமாடம் அடைந்த வாறும்,
விளக்கம் : மாறி வைது என மாறிற்று. திங்களங்கதிர் (சீவக-868) மாற்றம் ஒன்று (சீவக-866) என்னுஞ் செய்யுட்களை நோக்கி புடை-துவாரம். கண்நோக்கு : அழகு. மழை வள்ளல்: மழை இடமறிந்து பெய்யாதது போலச் சீவகனும் குணமாலையின்பாற் காதல் கொண்டான் என்று சுரமஞ்சரி கருதினாள். யாதும் என்பதனால் ஓவியமும் எனப்பட்டது. கடி - காவல்.
---------
-
14. பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடைப் புன்கண் எய்தி
நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும்
அன்றைப் பகலே குண மாலையை அச்சுறுத்த
வென்றிக் களிற்றை விரிதார் அவன் வென்ற வாறும்,
விளக்கம் : அச்சம் உறுத்த : அச்சுறுத்த: விகாரம். சீவகன் மார்பிலே தங்கிய சிறப்பினாலே அத்தார் உலகாற் புகழ்ப் பெற்றது. வென்றி-வெற்றி.
---------
-
15. தேன் ஊறு தீம் சொல் குண மாலையைச் சேர்ந்த வாறும்
கோன் ஊறு செய்வான் கருதிச் சிறை கொண்ட வாறும்
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன்
ஊன் நாறு ஒளத வேல் உரவோன் கொண்டு எழுந்த வாறும்,
விளக்கம் : செய்வான் : எதிர்கால வினையெச்சம். கருதி யென்பது கருத என நின்றது. உரற்கால்யானை ஒடித்துண்டு (குறுந்-282) என்னுஞ் செய்தென் எச்சம் பிறவினை கொண்டாற் போல. சிறை-அன்னப் பார்ப்பை (இவன் முற்பிறப்பிற்) சிறை செய்தது. ஒரு தேவன் என்பது ஓர் தேவன் என விகாரப்பட்டது; இவன் சுதஞ்சணன். மழை: சுதஞ்சணன் ஊர்தி. ஆசிரியன் மொழியை உட்கொண்டு நடத்தலின் உரவோன் என்பது அறிவுடையோன் என்னும் பொருளது.
---------
-
16. தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த
பூங் கச்சு நீக்கிப் பொறி மாண்கலம் நல்ல சேர்த்தி
நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்
பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த வாறும்,
விளக்கம் : பூங்கச்சு யாத்த கெடாத வீரர், தோளிணையையுடைய வீரர்; இவை இகழ்ச்சி (வீரர் அல்லாதவரை வீரர் என்றதனால் இகழ்ச்சி) கச்சு - சேலையின்மேற் கட்டினது. சிக்க - அகப்படக் கோல; திசைச்சொல் (குடநாட்டுச் சொல்). நீக்கி - அச்சிறையை நீக்கி. பின்னும் நினைக்க என்றது இடர்வரின் என்றதன்றி இன்ப முறுங்காலும் நினைக்க என்றவாறு. இது முற்கூறிய கவியிற் சிறைப்பாவத்தைத் தொடர்புபடுத்து எடுத்து விரியக் கூறிப் பின்பு அவற்குச் செய்த சிறப்புக்களும் கூறிற்று தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த பூங்கச்சு நீக்கி - கெடாத வீரர் (சீவகனுடைய) திரண்ட இரு தோள்களையும் அகப்படக் கட்டிய பூவேலை மிக்கதான கச்சினை நீக்கி பின்னே உணர்க.
---------
-
17. பைந் நாகப் பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு
கைந் நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி
மைந் நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணிக்
கொய்ந் நாகச் சோலைக் கொடி அந் நகர் புக்க வாறும்,
விளக்கம் : மை-முகில். கொய்ந்நாகம் - புன்னை. கொடிமாநகரும் பாடம். காந்தள் வடிவிற்கும் நிறத்திற்கும் உவமம்.
---------
-
18. அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை
முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளைப்
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்டச்
சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த வாறும்,
விளக்கம் : அத்தகிரி என்னும் வடமொழிச் சிதைவு விகாரமாயிற்று. அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு (பாண்டிக்கோவை) என்றார் பிறரும். அங்கு (பைத்து அங்கு ஓர் நாகம்) எனக் கதையை உட் கொண்டு சுட்டினார். குழையற்க: விகாரம் (குழையற்க என: குழையற் கென: அகரம் ; தொகுத்தல் விகாரம்).
---------
-
19. பொன் பூண் சுமந்த புணர் மெல் முலைக் கோடு போழ
நல் பூங் கழலான் இரு திங்கள் நயந்த வாறும்
கல் பாடு அழித்த கன மா மணித் தூண் செய் தோளான்
வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறிக் கொண்ட வாறும்.
விளக்கம் : உலகத்தின் பெருமையைக் கெடுத்த கனத்த மணித் தூணைப் போன்ற தோளான்.
---------
-
20. தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி
விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்
உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்த வாறும்
கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய வாறும்,
விளக்கம் : விள்ளா - நீங்காத: உள் - மனம். ஆவி - மணம். (கள் ஆவி) இன் : நீக்கம், (கோதை: சினையாகு பெயர்) கோதையின்: இன்: நீக்கம். தக்கநாடு: வடமொழிச் சிதைவு.
---------
-
21. இன்னீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்பப்
பொன் ஊர் கழலான் பொழி மா மழைக் காடு போகி
மின்னீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன்
கொன்னூர் கொடு வெம் சிலை கண்டு எதிர் கொண்ட வாறும்,
விளக்கம் : கண்ணினையும் என்னும் உம்மை (செய்யுள்) விகாரத்தால் தொக்கது. உருக்கிய பொன் காலின்மேற் கிடக்கும்போது நெகிழுமாதலின் ஊரும் என்றார். (கேமசரியின்) கண்ணும் (தான் செல்லும்) காடும் மழை பொழியப் போனான் என்றதனாற் காலம் கார் ஆயிற்று. மன் நீர வெள்வேல் எனவும் பாடம். சிலை: (கருவி) ஆகுபெயர், (சிலைத் தழும்பை உணர்த்தியது).
---------
-
22. திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும்
கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று
கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளைப்
புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த வாறும்,
விளக்கம் : கொண்டார் - ஏற்றார் (இரப்பவர்.) பகைவர் புண்ணைத் தாங்குதற்குக் காரணமான வேல். (தாங்கு வேல்): வினைத்தொகை; ஏதுப்பொருள் கருவிக்கண் அடங்கும்; மற்றிந்நோய் தீரும் மருந்து (கலித்தொகை: 60) என்றாற்போல. அரசன் திறலும் என்றும் பாடம்.
அரசர் திறற் சிங்கங்கள் : ஏகதேச உருவக அணி. சீவகன் தடமித்தன் புதல்வர் ஐவருக்கும் வில்லும் வாளும் கற்பித்தான். குடங்கை அளவு கண். பெரிய கண்கள் என்பதைக் குறிக்கின்றன.
---------
-
23. மதியம் கெடுத்த வய மீன் எனத் தம்பி மாழாந்து
உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆய வாறும்
நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த வாறும்
பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும்,
விளக்கம் : வயமீன்களெனத் தோழர் நிரந்த படியும் என்றும் ஆம். பதியினின்றும் நீங்கிப் பிள்ளையைப் பெற்றாளெனவே விசயையாம். பதி-இராசமாபுரமும் ஆம்; ஏமமாபுரமும் ஆம். பதி: ஏமமாபுரம் எனக்கொண்டு சீவகன் தன் தோழருடன் ஏமமாபுரத்தை விட்டுச் சென்று அன்னையை வணங்கினான் என்பதே சிறப்புடையது, தொடர்ச்சியாக வருவதால், பதி : இராசமாபுரம் என்றும் கணவன் என்றும் பொருள் கொண்டால் அகன்றவள் விசயை ஆவாள். உதிதன் : தோன்றியவன். உரோகிணி என்னும் விண்மீன் திங்களை விட்டு நீங்காமல் இருக்கும். நந்தட்டனும் தோழர்களும் பிரியாமல் இருந்தவர்கள். நந்தட்டன்: கந்துக்கடன் மகன்.
---------
-
24. கண் வாள் அறுக்கும் கமழ்தார் அவன் தாயொடு எண்ணி
விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்த வாறும்
மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஒர் கன்னிப்
பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்ட வாறும்,
விளக்கம் : மாலையைக் கண்ட கண் பிறிதொன்றிற் செல்லாமையின் கண்வாள் அறுக்கும் என்றார். விண் - தேவருலகு. மண்மேல் : (மண்ணுக்கு என நான்காம் வேற்றுமைப் பொருளில் வந்ததால்) உருபு மயக்கம். கன்னிப் பெண்ணாரமிர்தின் கன்னிப் பெண்ணாரமிர்து என்னுந் தொடர் ஒரு சொல்லாகவும் பெருவாரி என்னுந் தொடர் ஒரு சொல்லாகவும் கொண்டு இரு சொல் தொகை யென்றார். கற்சுனை ஒரு சொல் போலவும், குவளையிதழ் ஒரு சொல்லாகவும் நின்றன. பல சொற்றொகையாயினும், கற்சுனைக் குவளையிதழ் போல (தொல்-எச்ச.24. இளம் பூரணர், நச்சினார்க்கினியர் மேற்கோள்) இருசொல் தொகையாய் நின்றது.
கன்னிப்பெண் : விமலை. கண்வாள்: கண்ணொளி.
---------
-
25. துஞ்சா மணிப் பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல்
எஞ்சாத இன்பக் கொடி தாழ்த்ததும் பன்றி எய்து
நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அறக் கொன்ற வாறும்,
விளக்கம் : துகிலையும் மேகலையையும் உடைத்தாகிய அல்குலையுடைய கொடி; இன்பமாகிய கொடி. பொன் : (கருவி) ஆகுபெயர். கொடி யென்றலானும் (ஆடவரை நோக்காமை மேற்கொண்ட) விரதத்தை நீக்குதலானும் தாழ்த்தது என்றார். நாம் - அச்சம்: உரிச்சொல். நாமம் ஆயின் விகாரமாம்.
---------
-
26. புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்ட
கண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்ன
பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும், பொற்பச் செங்கோல்
தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும்,
விளக்கம் : தன் மாமனுடைய மகள், அவன் கண்போன்ற மகள் அவன் தேவி புதவியுடைய வேலெனச் சேந்து நீண்ட கண்மணியிற் பாவை அன்ன பெண்; உண்கண், மணிவாழ் பாவை (நற்றிணை-184) என்றார் பிறரும். வேல்படும்பொழுதே புண்ணும் உடனே நிகழ்தலின் புண்தோய்த் தென்றார். (மதி தோய்) தோய்: உவம உருபு. குடை: எழுவாய். குடைத் தண்ணிழலும் பாடம். மாமன் மகள் என்பதற்கு மாமன் மனைவி யென்று பொருள் கொள்ளுதலே சிறப்பாகுமென்று தோன்றுகிறது. இன்றேல் அவன் தேவி என்ற சொற்களை வருவித்து அவளுக்குப் பெண் என முடித்தல் வேண்டும். மகள் என்பதற்கு மனைவியெனச் சங்க நூல்களில் வருவதுண்டு. மனக் கினியாற்கு நீ மகளாயதூஉம் (மணி-பதி-21) என வருதல் காண்க. புதவி என்பது பிரிதிவி சுந்தரி என்பதன் சிதைவு என்பர்.
---------
-
27. திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக்
குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணிய
உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்
அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும்,
விளக்கம் : உய்ப்ப - செலுத்த. நிற்ப-கெடாது நிற்ப. குறைவின்றி: மத்திம தீபம் (இடையிலிருந்த இச்சொல் முன்னுள்ள சொற்களுக்கும் விளக்கமாக இருந்தது. எனவே, குறைவு இன்றி என்பதை யாவற்றிற்குங் கூட்டுக. மத்திமதீபம் என்பது இடைநிலை விளக்கு என்னும் அணி.) இவனது துறவு கூறவே எல்லார் துறவும் உணர்த்தியதாயிற்று. எல்லோரும் என்பது சீவகனுடைய தம்பியருந் தோழரும் தேவியரும் ஆகிய எல்லோரையுங் குறிக்கின்றது. அறிவன் - அருகப் பெருமான்.
---------
-
28. கோணைக் களிற்றுக் கொடித் தேர் இவுளிக் கடல் சூழ்
வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன் மாரும்
பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப
வீணைக் கிழவன் விருந்து ஆர் கதிச் சென்ற வாறும்,
விளக்கம் : கோணை : ஐ : அசை.
இவனை ஒழிந்தோர்க்கு வீடுபெற நல்வினையின்று. தென்புல மருங்கின் விண்டுநிறைய (மதுரைக்.202) என்றாற்போலப் புலம்நிலம் ஆம்; ஏசு பெண்ணொழித் திந்திரர்களாய்த் - தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார். (சீவக. 3121) என்று தேவியரை முற்கூறி, ஐவருந், திருவின் தோற்றம்போல் தேவராயினார் (சீவக. 3134) என்று பிற்கூறுவாராகலின், முலையாருந் தம்பியுந் தோழன்மாரும் எனல்வேண்டும். ஆயினும், ஆண்பாற்சிறப்புடைமையின் முற்கூறினார். பாட்டுக் காமத்தை விளைத்தலின் அதிற் பற்றற்று விரைய வீடு பெற்றமை தோன்ற வீணைக் கிழவன் விருந்தார்கதிச் சென்றவாறும் என்றார்.
---------
-
29. தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன்
வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான்
ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம்
ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்ற வாறே,
விளக்கம் : உமிழ்ந்த அமிர்து, நிலம் பூத்த மரம் (கலி.27) போல நின்றது. இன்ப வெள்ளத்தையும் என்று உம்மையும் உருபும் விரித்து, கல்லார் மணி (சீவக-9) என்னும் கவி முதலியவற்றின் உம்மைகளுக்கும் இரண்டாவது (வேற்றுமை உருபு) விரித்து, உரைப்பாம் என்பதனோடு முடிக்க. முற்கூறிய வீட்டை (விருந்தார் கதி, சீவக.28) உட்கொண்டு கூறி, அதிற் பயனும் கொண்டு கூறினார். வான் : இடவாகு பெயர். நலத்தார்சீவகன் மனைவியர். கேவல மடந்தை: பேரின்பமாகிய மடந்தை. ஏனோரும்-எல்லோரும். ஈனோர் - இங்குள்ளோர்.
------------
1. நாமகள் இலம்பகம் - நாட்டுவளம் (30-408)
கதைச் சுருக்கம்:
இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் நிரம்பிய இவ் வேமாங்கத நன்னாட்டை இராசமாபுரம் என்னும் சிறந்த நகரத்தின்கண்ணிருந்து சச்சந்தன் என்பான் செங்கோலோச்சினன். இம் மன்னர் மன்னன் கட்டிளமையும், பேரழகும், பேராற்றலும், நுண்ணறிவும், வண்மையும், பிறவும் ஒருங்கேயுடையனாய் விளங்கினான். இவன் அருட்குடைத் தண்ணிழலில் வையகம் மகிழ்ந்து வைகியது. இம் மன்னன் தன் மாமனாகிய விதையநாட்டரசன் மகள் விசயை என்பவளை இனிதின் மணந்தான். விசயை ஒப்பற்ற பேரழகுடையவள்; நற்குணங்கட்கு உறையுள் போன்றவள். கலங்காக் கற்புடைய காரிகை. சச்சந்தன் இவள் பெண்மை நலத்திற் பெரிதும் ஈடுபாடுடையனாய் அவளை இமைப்பொழுதும் பிரியவியலாதவனாயினன். அவளோடு உடனுறைதற்குத் தன் அரசியற் கடமைகள் இடையூறாதல் கண்டு தன் அமைச்சருள் ஒருவனாகிய கட்டியங்காரனை அழைத்து அரசாட்சியை அவன்பால் ஒப்புவித்துத் தான் உவளகத்தே விசயையோடு நொடிப் பொழுதும் பிரிவிலனாய் உறைந்தின்புற்றனன். இஃதிங்ஙனமாக, ஒருசில திங்களிலேயே விசயை கருவுற்றனள். ஒருநாள் விசயை மூன்று கனாக்கண்டு அவற்றைச் சச்சந்தனுக்குணர்த்தி அவற்றின் பயன்களைத் தனக்குணர்த்தும்டி வேண்டினாள். அக் கனவுகளுள் ஒன்று தனக்கு வரும் கேட்டினைக் குறிப்பதுணர்ந்த சச்சந்தன், தன் உள்ளுணர்வின் தூண்டுதலாலே ஒரு தச்சனை யழைத்து வான்வழிப் பறந்து செல்லுமொரு மயிற்பொறி செய்வித்தனன். அம் மயிற் பொறியினை வானத்தே செலுத்தவும் கீழிறக்கவும் விசயைக்குக் கற்பித்தனன்.
பெறலருந்திருப் பெற்றபின் யாவர்க்குஞ் சிந்தனை பிறிதாதல் இயல்பன்றோ? அரசாட்சிப் பொறுப்பனைத்தும் தன்பால் எய்தியிருக்கும் இச்செவ்வி இதனைத் தன்னுடையதாகவே ஆக்கிக்கொள்ளத் தகுந்ததொரு செவ்வியாகும் என்று கருதிய கட்டியங்காரன் அமைச்சரோடு ஆராய்ந்தனன்; அவருட் சிலர் இக் கருத்தினை எதிர்த்துக் கட்டியங்காரனைத் திருத்த முயன்றனர். கட்டியங்காரன் அவர் நல்லுரை கேளானாய்த் தான் கருதியதே முடிப்பத் துணிந்து ஆவன செய்து அரசனை அந்தப் புரத்தில் வைத்தே நால்வகைப் படைகளுடன் முற்றுகையிட்டனன். இத் தீச்செயல் உணர்ந்த சச்சந்த மன்னன் சீறினன்; என் செய்வான்! மகவின் நலங்கருதி விசயையை மயிற்பொறியிலேற்றி வானத்தின் வழியே புறம்போக்கினன். தான் ஒருவனே போர்க்கோலம் பூண்டு ஒப்பற்ற தன் தறுகண்மையாலே அப் பெரும் படைகளை ஒருங்கே எதிர்த்து நீண்டபொழுது போர்செய்து இறுதியில் கட்டியங்காரனாற் கொல்லப்பட்டனன். வெற்றி முரசொலி நங்கை விசயையின் செவியை எட்டியது. சச்சந்தன் முடிந்தமை உணர்ந்தாள்; மயங்கினள்; மயிற் பொறியைச் செலுத்த மறந்தாள்; திகைத்தாள்; மெய்ம்மறந்தாள். பாவம்; பிறிதென்செய்வாள் பேதை!
முறுக்குடைந்த மயிற்பொறி மெல்ல மெல்ல வீழ்ந்து அந்நகரத்துப் புறங்காட்டிலிறங்கிக் கால் குவித்திருந்தது. அப்பொழுதே விசயை அவ்விடத்திலேயே கருவுயிர்த்தாள்; குண கடலில் தோன்றும் இளஞாயிறுபோன்றதோர் ஆண்மகவு அவள் வயிற்றினின்றும் தோன்றியது. ஒருவாறு மயக்கந் தீர்ந்த விசயை, அவ்வருமந்த மகவின் நிலைமையையும், மன்னனுக்குற்ற கேட்டினையும், கருதிப் பெரிதும் வருந்தினள். திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பதற்கிணங்க அம் மயானத்துறையும் தெய்வமொன்று விசயையின் தோழி சண்பகமாலை என்பாளின் வடிவங்கொண்டு அவள்முன் வந்து தோன்றித் துணைசெய்வதாயிற்று. கோப்பெருந் தேவி ! இப்பொழுது இக்குழவியை எடுத்துப்போய்ப் புரப்பான் ஒருவன் ஈண்டு வருவன். ஆதலால் இதனை இங்குக் கிடத்தி யாம் சிறிது பொழுது மறைந்திருத்தல் வேண்டும் என்று விசயைக்குணர்த்த இருவரும் அயலிலே சென்று மறைந்திருந்தனர்.
அப்பொழுது அந்நகரத்திலுள்ள கந்துக்கடன் என்னும் வணிகன் ஒருவன் இறந்துபட்ட தன் மகவைப் புதைத்தற்கு அங்கு வந்தனன். விசயை மகவினைக் கண்டு வியந்தான். தன் மகவைப் புதைத்துவிட்டு இம் மகவினை ஆர்வத்துடன் எடுத்துப் போய்த் தன் மனைவி சுநந்தைக்குக் காட்டி இறந்ததாகக் கருதிய தம்மகவே உயிர்பெற்றதொகை கூறிக் கொடுத்தான். அவளும் அதனை ஏற்று உவகையுடன் வளர்த்தனள். கந்துக்கடன் மயானத்தே இக்குழவியை எடுத்தபொழுது அது தும்மிற்றாக; ஆண்டு மறைந்திருந்த தெய்வம் சீவ என்று வாழ்த்தியது. அது அவன் காதிற் பட்டபடியால் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனன். சுநந்தை பின்னர் நந்தட்டன் என்னும் ஒரு மகவினை ஈன்றாள்.
இனி, விசயையை முன்கூறப்பட்ட தெய்வம் அழைத்துப் போய்த் தண்டகாரணியத்தே சென்று ஆண்டு உறையும் துறவோருடன் கூட்டிய பின்னர் மறைந்தது. விசயை அவணிருந்து தன் மகவின் நலங்கருதி நோன்பு செய்திருந்தனள். கந்துக்கடன் சீவகன் நந்தட்டன் முதலியோரை நல்லாசிரியரிடத்துக் கலைகள் பலவும் பயிற்றுவித்தான். அச்சணந்தி என்னும் அப்பேராசிரியர் சீவகனுடைய நுண்மாணுழைபுலனை உணர்ந்து மகிழ்ந்தனர். சீவகனைத் தனியிடத்தே அழைத்துச் சென்று ஒரு கதை கூறுவார்போன்று அவனது வரலாற்றை உணர்த்தினர். பின்னரும், ஓராண்டு முடியுமளவும் நீ நின்னை வெளிப்படுத்தாதே இருத்தல்வேண்டும், என்றும் வற்புறுத்தி வரங்கொண்டனர். அச்சணந்தியாசிரியர் தம் வரலாற்றையும் சீவகனுக்குணர்த்தி அவன்பால் விடைபெற்றுப் போய்த் தவம் செய்து வீடுபெற்றுயர்ந்தனர். இராசமாபுரத்தில் சீவகன், நந்தட்டன் முதலியவரோடு வைகுவானாயினன்.
---------
-
30. நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்
பூ வீற்று இருந்த திருமாமகள் புல்ல நாளும்
பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக்
கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன்.
விளக்கம் : கேள்விக்கோ எனவே, கல்வியும் செல்வமும் பெற்றன வேனும், அவை நாடோறும் புதியவாக நிகழ்கின்றமை தோன்றப் பின்னும் புல்ல என்றார். இனி, அவர்கள் (நாமகளும் திருமகளும்) நாட்டிலே புல்ல என்றும் ஆம். வீற்றிருத்தல் - சிறப்புடனிருத்தல். வீறு - சிறப்பு. புலம் - அறிவு. பார்-தடை. கேள்வி-கற்றறிந்த பெரியோர் கூறுவதைக் கேட்டல். கற்றலிற் கேட்டலே நன்று என்பர்.
---------
-
31. காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே
விளக்கம் : வீழ என்னும் (வினை) எச்சம் காரணகாரியப் பொருட்கண் இறந்தகாலம் உணர்த்திற்று. கீறி, போழ்ந்து, சிதறி, சிந்தும் என்னும் தொழில்கள் முறையே தொடை, வருக்கை, மாங்கனி, வாழைப்பழங்கள் என்னும் செய்வதன் தொழில்கள் (தன் வினைகள்) அன்றித் தெங்கின் பழத்தின் வினையாக்கிச் செய்விப்பதன் தொழில் என்றுங் கூறலாம். ஒழிந்த எச்சம் ஈண்டுச் செய்வதன் தொழில்மேலன. பூமாண்ட தீந்தேன் தொடை - பொலிவு மாட்சிமைப்பட்ட தேன்போல இனிய நீரையுடைய தாறு; தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய் (மதுரைக்-40) என்றார் பிறரும். இனித்தேனும் தொடையும் என உம்மை விரித்தலுமாம்.வருக்கை - பொருள் ஆகுபெயர்.
இனி, வீழ அப்புறம் கீறிப்போழ்ந்து சிதறிச் சிந்தும் எனச் செய்விப்பதன் தொழிலுமாம். விண்டு (சிற்-24) என்பதுபோல. (விண்டு : சங்குத் தன்வினைக்கும் பிறவினைக்கும் பொது).
இஃது உயர்வு நவிற்சி யணி.
வேறு
---------
-
32. இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல்
கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே
விளக்கம் : கலங்கு தெண்டிரை - மறுகுகின்ற தெண்டிரை; ஆகுபெயர்; (அலையாகிய சினையின் பெயர் கடலுக்கு ஆயினமையின் சினையாகு பெயர்.) பரதேசுவர சக்கரவர்த்தி ஆதி தீர்த்தங்கரரான விருஷப சுவாமியின் மகனாரென்பர். இவருக்கு எண்பத்து நான்கிலட்சம் யானைகளுண்டென்பர்; இவர் பன்னிரண்டு மகாசக்கரவர்த்திகளில் முதல்வர் என்றுங் கூறுவர்.
---------
-
33. தேன் நிரைத்து உயர் மொய்வரைச் சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழுந் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே
விளக்கம் : வான் முகிலை யுணர்த்துவது இடவாகுபெயரால். மணந்து: நீர்த்துளி மண்ணிற் பட்டவுடன் எழும் மணத்தைப் பெற்று. சொரிந்த : பலவின்பால் வினைமுற்று. தேன் இறால் - தேன்கூடு.
---------
-
34. குழவி வெண் மதிக் கோடு உழக் கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரைச் சென்னியின்
இழியும் வெள் அருவித் திரள் யாவையும்
குழுவின் மாடத் துகில் கொடி போன்றவே.
விளக்கம் : முழவு போல அதிர்தல் இரண்டிற்கும் ஏற்றுக. வெண்டுகில் (பரி-10-80) என்றும், கோபத்தன்ன தோயாப் பூந்துகில் (முருகு-15) என்றும் கூறலின் துகில் வெண்மை செம்மை இரண்டிற்கும் பொது. தேனருவிக்குச் செந்துகில் உவமை. குழவி வெண்மதிக்கோடு உழுதலும் தேனருவி முழவென முழங்கி இழிதலும் உயர்வு நவிற்சி.
---------
-
35. இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்
விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை
நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்
கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே.
விளக்கம் : விலங்கி வீழ்தல் - பிணைத்திட்ட மாலைபோலே வீழ்தல். (விலங்கல் - குறுக்கிடல்) கவிழ்த்த: வினையாலணையும் பெயர் என்றாலே பொருத்தமுடைத்து. சிந்துதல் - உள் நிறைதலின் தெறித்தல்.
இது நீரிற்கு உவமை கூறிற்று. முற்செய்யுளில் தேனருவி நீரருவி என இருவகை அருவிகள் கூறப்பட்டன. அவற்றில் நீரருவிக்குமட்டும் ஈண்டு உவமை கூறிற்று என்கிறார் நச்சினார்க்கினியர். இனி முற்செய்யுளில் நீரருவியை மட்டுமே கொண்டு, குழவி வெண்மதிக்கோடு உழுவதால் தேன் இறால் கீண்டு, வண்டுகள் ஆரவாரிப்பது முழவென அதிர்கின்ற தென்றும் அத்தகைய மலை முடியினின்றும் இழியும் நீரருவித்திரள் யாவையும் மாடத்தின் துகிற் கொடிபோல் விளங்குகின்றன என்றும் கூறுவதே பொருத்தமாகக் காண்கிறது. தேன் - வண்டுகளில் ஒருவகை. அவ்வாறு கொள்வது ஆற்றொழுக்காகப் பொருள்படுவதையும் தேனருவி கொள்ள வேண்டின் கொண்டு கூட்டுப்பொருள் கோள் கொள்ள வேண்டி வருவதையுங் காண்க.
---------
-
36. வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக்
கொள்ளை கொண்ட கொழு நிதிக் குப்பையை
உள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்து உராய்
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே.
விளக்கம் : உய்த்து - உய்ப்ப. உராய் - பெயர்ந்து. (உள்ளம் - ஊக்கம். மாந்தரின்: இன்: ஐந்தனுருபு; ஒப்புப்பொருள்.)
---------
-
37. மையல் யானையின் மும் மதம் ஆர்ந்து தேன்
ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்ச்
செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா
நைய வாரி நடந்தது நன்று அரோ.
விளக்கம் : உண்டு பூசி அளைந்து செருக்கி நாட்டை, நோக்கி நடந்ததென்றார்; குறிப்பு (மக்கள் செய்கையை வெள்ளத்தின் செயலாக்கினமையின் குறிப்பு) ஐய: உரிச்சொல் ஈறு திரிந்தது (ஐ என்னும் உரிச்சொல் ஐய எனத் திரிந்தது, ஐ வியப்பாகும் தொல் - உரி. 87) நன்று பெரிதாகும் (தொல் - உரி-45). (அரோ:அசை).
---------
-
38. வீடு இல் பட்டினம் வவ்விய வேந்து எனக்
காடு கையரிக் கொண்டு கவர்ந்து போய்
மோடு கொள் புனல் மூரி நெடுங் கடல்
நாடு முற்றியதோ என நண்ணிற்றே.
விளக்கம் : வீடு: விகாரம்: விடுதல் என்னும் தொழிற்பெயர் தல் விகுதி கெட்டு முதல்நீண்டு வீடு எனத்திரிந்தது; முதனிலை திரிந்த தொழிற்பெயர். அரி: அரித்தல், முதனிலைத் தொழிற்பெயர். மூரி, மோடு: பெருமை என்னும் பொருளன.
---------
-
39. திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல்
நுரை எனும் மாலையை நுகரச் சூட்டுவான்
சரை எனும் பெயர் உடைத் தடம் கொள் வெம் முலைக்
குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே.
விளக்கம் : சரை யென்னும் பெயரினையும் தடமாகிய விரும்பிய முலையினையும் உடைய புனலாகிய கன்னி; தடம் முலைபோற் சுரத்தலின் முலையாம். கொள் கன்னி: வினைத்தொகை. கன்னி என்னும் விசேடிக்கப்படுஞ் சொல்லை நீர் விசேடித்து அஃறிணையாக்குதலின், இழிந்ததென்றார். என்ப : அசை; இது புறனடையாற் கொள்க. (தொல் - இடை - 48.) இவ்விதி மேலும் கொள்க.
சூட்டுவான் : எதிர்கால வினையெச்சம். தடம்கொள் என்னுந் தொடரிலுள்ள கொள் என்னுஞ் சொல்லைக் கன்னியுடன் இயைத்துக் கொள்கன்னி சரவெனும் எனக்கூட்டிக்கொள் என்பதற்குச் செயப்படுபொருளாக முற்செய்யுளிற் கூறிய காட்டுப்பொருள்களை வருவித்துக் கூறினார். செல்வன் சென்னிமேல் சூட்டுவான் என அமைந்த தொடரிலிருந்த சென்னிமேல் என்பதைக் குரைபுனற் கன்னி சென்னிமேல் என மாற்றிக் கூறினார். இவ்வாறு கூறாமற் செல்வன் சென்னிமேற் சூட்டுவான் நுரையெனும் மாலையைக் கொண்டு சென்றதாகக் கூறினும் பொருள் கெடுமாறில்லை.
---------
-
40. பழம் கொள் தெங்கு இலை எனப் பரந்து பாய் புனல்
வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய்த் தலை
தழம் குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்
முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே.
விளக்கம் : பழம் கொள் தெங்கு - காய்ந்த தெங்கு. இலை நெருக்கத்திற்கு (உவமை). தெங்கோலை எனற்பாலது தெங்கிலை எனப்படுதல் மரபு வழுவமைதியாகக் கொள்க. இலையெனப் பாய்புனல் பரந்து வழங்கும்படி நீர் வரத்தறிந்து முன்னே படுத்த வாய்த்தலை. தழங்கு குரல் (தழங்குரல் என ஆனது) விகாரம்.
---------
-
41. வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு எனத்
தலைத் தலை அவர் கதம் தவிர்ப்பத் தாழ்ந்து போய்க்
குலத் தலை மகளிர் தம் கற்பின் கோட்டகம்
நிலைப் படா நிறைந்தன பிறவும் என்பவே.
விளக்கம் : குஞ்சரத்திற்கு வாய்க்கால் உவமிக்கும் பொருள். கோட்டகம் - பயிருடைத்தான நீர் நிலை. பிற - ஏரி முதலாயின.
---------
-
42. கவ்வையும் கடும் புனல் ஒலியும் காப்பவர்
செவ்வன் நூறு ஆயிரம் சிலைக்கும் பம்பையும்
எவ் எலாத் திசைகளும் ஈண்டிக் காரொடு
பவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே.
விளக்கம் : செவ்வன் - நேரே. காப்பவர் கவ்வையும் எனக்கூட்டுக. கவ்வை, சிலை, இயம்பல் என்பவை பல வேறுவகை ஒலிகள். கடும்புனல் - விரையும் புனல். கடி என்னும் உரிச்சொல் திரிந்தது.
---------
-
43. மாமனும் மருகனும் போலும் அன்பின
காமனும் சாமனும் கலந்த காட்சிய;
பூமனும் அரிசிப் புல் ஆர்ந்த மோட்டின
தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே.
விளக்கம் : இதற்கு நின்றன என ஒருசொல் வருவிக்க. ஒன்றுக்கொன்று பிற்படின் வருந்தும் என்று அன்புகூறினார். சாமன்-காமன் தம்பி. ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே (தொல்.எச் - 36) என்பதனால் மோட்டின என்பதன் பின் ஆக்கம் வருவிக்க.
மோடு - வயிறு.
---------
-
44. நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம்
செறி மருப்பு ஏற்று இனம் சிலம்பப் பண்உறீஇப்
பொறி வரி வராலினம் இரியப் புக்கு உடன்
வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே.
விளக்கம் : சிலம்ப - முழங்க. பொறி - விளக்கம்.
ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும் (தொல் - மரபு. 37) என்பதனால் ஒருத்தல் என்றார்.
---------
-
45. சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை
வீறொடு விளைக எனத் தொழுது வித்துவார்;
நாறு இது பதம் எனப் பறித்து நாள் செய்வார்;
கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார்.
விளக்கம் : இத்துணை நிலத்திற்கு இத்துணைக் கடைசியர் என்று கூறிய என்றும் ஆம்.
---------
-
46. முலைத் தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர்
குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல்
புலத்து இடைக் கவரி கன்று ஊட்டப் போந்த பால்
நிலத்து இடைப் பாய்ந்து அவை பிறழும் நீரவே.
விளக்கம் : மற்று: வினைமாற்று. குறிஞ்சி நிலத்தே கவரி தன் கன்றை ஊட்டுதலான் அதற்கு மிக்குச் சொரிந்த பால் மறைந்த நிலத்திடை என்க. (மருதநிலத்துக் கயல் குறிஞ்சி நிலத்திலே வீழ்தலின் திணைமயக்கம் கூறியவாறு) கவரியும் கராமும் நிகரவற் றுள்ளே (தொல்.மரபு-17) என்றதனால், கன்று என்றார்.
---------
-
47. பால் சுவை அறிந்து அவை பழனத் தாமரை
மேல் செலப் பாய்தலின் வெரீஇய வண்டு இனம்
கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
ஏற்றிய மாலைத் தேன் இரியப் பாய்ந்தவே.
விளக்கம் : பாற்சுவை தெரிந்தன எனவும் பாடம்.
இச் செய்யுளும் குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் மூவகை நிலங்களும் மயங்கக் கூறலின் திணைமயக்கம் கூறியபடியாம். நுளைச்சியர் : நெய்தல் நிலமகளிர்.
---------
-
48. இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர
முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின்
அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம்
விருந்து எதிர் கொண்ம் எனத் தழுவி வீழ்ந்தவே.
விளக்கம் : கொண்மின் : (கொண்ம் என) விகாரம். இவற்றால் நில மயக்கங் கூறினார். இச் செய்யுளிற் கொண்டு கூட்டுப் பொருள் கோள் மிகுதி கொங்கு - தேன். ஞிமிறு, தேன் : வண்டின் இனங்கள்.
---------
-
49. வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை
இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின்
அளமரு குயிலினம் அழுங்கிப் பூம் பொழில்
உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே.
விளக்கம் : கம்பலை - ஆரவாரம். ஏங்கல் - ஆரவாரித்தல்.
அளமரு : அலமரு : ளகர லகரப் போலி. குயில்: கார்காலத்தில் ஒடுங்கியிருக்கும்; வேனிலே இதற்குரியது. மயிலுக்குக் கார்காலமே விருப்பமூட்டும்.
---------
-
50. வளைக் கையால் கடைசியர் மட்டு வாக்கலின்
திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக்
களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையைத்
திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே.
விளக்கம் : மீண்டும் நடவுத்தொழில் முதலாகக் கூறுகிறார் (45-ஆம் செய்யுளில் முன் கூறினார்.) திளையா வரும் அருவி (சிற் - 294) என்றார் பிறரும். பெடையென்றும் மயிலென்றும் பிரிக்க. நீர் கள்ளுண்டு இதுபோல மயங்கன் மின் என்று தெருட்டிற்று. இனி, மயிலைக் கண்டாற் கள்ளின் களிப்புத் தீரும் என்றலின் அது தெருட்டிற் றென்றுமாம். தேங்கு உழி-தேங்கிய இடம். களித்தல் - கள்ளுண்டு மயங்குதல்.
---------
-
51. கண் எனக் குவளையும் கட்டல் ஓம்பினார்
வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார்
பண் எழுத்து இயல் படப் பரப்பி இட்டனர்
தண் வயல் உழவர் தம் தன்மை இன்னதே.
விளக்கம் : குவளையும்: உம்மை (இழிவு) சிறப்பும்மை. ஓம்பினார்: வினையெச்சமுற்று (வினை முற்று வினையெச்சப் பொருளில் வந்தது) உள் புகார்: தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்) தாமரையைக், கடவு ளொண்பூ அடைத லோம்பி (பெரும்பாண்-290) எனக் கூறுதலானும் அவர் பறியாரயிற்று. மரையினுள், என்னும் மரை என இருப்பின் செஞ்சொல் ஆகும். உருபும் இருப்பதாற் செஞ்சொலன்று. எஞ்சு பொருட் கிளவியான செஞ்சொல் அன்மை உணர்க; (தொல்-இடை-36) முகமும் கண்ணும் காதன்மையைத் தோற்றுவித்தலின் அதற்கேற்கப் பாடினாரென்க.
---------
-
52. நித்திலப் பந்துடன் ஈன்று பாதிரி
ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால்
தத்து நீர் நாரை மேல் எறியத் தண் கடல்
பைத்து எழு திரை எனப் பறவை ஆலுமே.
விளக்கம் : நித்திலப் பந்து உவமத்தொகையில் வந்த ஆகுபெயர்; கந்தருவ வழக்கம் (இறை-1) என்றாற்போல. ஈன்று (நாவினை) உடைய என்க. இது வேண்டிய அளவிலே நீர் பாய்கின்றமை கூறிற்று.
---------
-
53. சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார்
செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல்
கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.
விளக்கம் : சொல்-நெல். அரு- சூலுண்டென்று சொல்லுதற்கரிய. மெல்ல-ஒழுக. தேர்ந்த -மெய்ப்பொருளை ஆராய்ந்த. தாறுபடுநெல் என்றார்போல, காய்த்த என்றார். செல்வமுடைய மேலலார்போல் தலைநிறுவி என்னவேண்டிய உவமையை மேலலார் செல்வமேபோல் தலைநிறுவி என்றது, உடையார் தொழில் உடைமைமேல் ஏற்றப்பட்டதோர் உபசார வழக்கு என்க.
---------
-
54. மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால்
தேன் கணக் கரும்பு இயல் காடும் செந் நெலின்
வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும்
ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே.
விளக்கம் : முன் விளைவு கூறி, இதனால் முற்றினபடி கூறினார். மீன்கண் மிகவும் உருட்சியுடைமையின் இடங்குறித்தல் அரிது. (காடு-கழனி. 55ஆம் செய்யுளை நோக்குக.)
இதன்கண் களிறுமாய் கழனி என்றதனோடு களிறு மாய்க்கும் கதிர்க்கழனி எனவரும் மதுரைக்காஞ்சியினை (247)யும் நினைக. இத் தொடர்க் கருத்தை களிறு மாய்க்குஞ் செந்நெல் அங்குலை என்றும் (நைடதம்: சுயம்வர -138), யானை மறையக் கதிர்த்தலைச் சாலிநீடி என்றும் (பிரபுலிங். மாயையுற்-11) களிறுமாய்ப்பக் கதழ்ந்தெழு பூம் பயிர் என்றும் (தணிகை. நாட்-114) பிற்றைநாட் புலவர் பலரும் எடுத்தாள்வாராயினர்.
---------
-
55. ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்
வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர்
ஆய் செந் நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே.
விளக்கம் : குவளையை ஈண்டுக் களிப்பாற் பறித்துச் சூடினார். காடு பெருமை கூறிற்று. எறிகுற்றாரும் பாடம். விருத்துவண்டு, வன்றொடர் மொழியும் (தொல். எழுத்-குற்றியலுகரப்,9) என்னுஞ் சூத்திரத்தில், வல்லெழுத்திடை மிகும் என்னாது, ஒற்று என்ற மிகுதியான் இயல்பு கணத்துக்கண்ணும் மெல்லொற்றுத் திரிந்தது.
இச் செய்யுளின்கண் தேவர் உழவர்க்கியல்பாக அமைந்த விருந்தோம்பற் பண்பினை நினைந்து ஆய்பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு என்ற நுணுக்கம் உணர்க. விருந்தூட்டியுண்டல் சிறந்த தமிழர் பண்பு. அப் பண்பு உழவர்க்கே உரியதுமாம். இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் என்ற வள்ளுவர் பொன் மொழியும் (குறள். 1035) நினைக.
---------
-
56. வலியுடைக் கைகளால் மலர்ந்த தாமரை
மெலிவு எய்தக் குவளைகள் வாடக்கம் பலம்
பொலிவு எய்தப் பூம் பொய்கை சிலம்பிப் பார்ப்பு எழ
மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார்.
விளக்கம் : கம்பலம் : உரிச்சொல் திரிவு (கம்பலை). பொய்கை. பார்ப்பெழ என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. பட:உவமவுருபு.
முன்களை பறியாதவற்றை ஈண்டுக் களிப்பினால் அரிந்தார். உழவர் கையே உலகெலாந் தாங்கும் கை என்பது கருதி வலியுடைக்கைகளான் என்று தேவர் அடைபுணர்த்தனர் என்றல் சிறப்பு. என்னை? உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம், விட்டே மென்பார்க்கு நிலை என்பது பொய்யாமொழியன்றோ?
---------
-
57. வாளையின் இனம் தலை இரிய வண்டு அலர்
தாள் உடைத் தாமரை கிழிய வண் சுமை
கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில்
பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே.
விளக்கம் : தலை - இடம் வண்டு அலர் - வண்டு துகைத்து அலர்ந்த பாளைவாய் கமுகு - மடற் கமுகு. கோள் - ஆற்றல். இச் செய்யுளின்கண்,
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
என்பதுபற்றி அந்நாட்டின்கண் மக்கள் வருந்தாமற் பெறாநின்ற வளம் கூறப்படுகின்றது. மேல்வரும் 58-60-61. 62-63-ஆம் செய்யுள்களும் இன்ன.
---------
-
58. சோர் புயல் முகில் தலை விலங்கித் தூ நிலம்
மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளை
ஆர்புறு பலாப் பழம் அழிந்த நீள் களம்
போர்பினால் மலிந்து உடன் பொலிந்த நீரவே.
விளக்கம் : புயல் - நீர். விலங்கி: விகாரம்; விலங்க என்க. பழம்: களத்திற்கு அடை. நிலத்திற்குக் களம் சினையாம்.
இனி, நிலத்திலே முகிலை விலக்கிப் பழைய கூடுகள் நிறைந்திருப்பதனால் அங்ஙனம் அவை நிறைந்த நிலம் இப்பொழுது இடுகின்ற போரைப் பொறேன் என்று வாய்விடும்படி என்றுமாம். ஆர்பு கொண்டெனவே கூடுகள் பெற்றாம். முதலில் கூறிய பொருளுக்கு மார்பு எனவும், இரண்டாம் பொருளுக்கு ஆர்பு எனவும் பிரிக்க. ஆர்பு கொண்டு என்பதற்குக் கூடுகள் தோன்றா எழுவாய்.
-
59. ஈடு சால் போர் பழித்து எருமைப் போத்தினால்
மாடு உறத் தெளித்து வை களைந்து கால் உறீஇச்
சேடு உறக் கூப்பிய செந்நெல் குப்பைகள்
கோடு உயர் கொழும் பொனின் குன்றம் ஒத்தவே.
விளக்கம் : ஈடு-இடுதலுமாம். பெற்றம் எருமை புலி மரை புல்வாய் - மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே (தொல்.மரபு-41.) (30)
-
60. கரும்பு கண் உடைப்பவர் ஆலை தோறெலாம்
விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சிய
திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம் புகை
பரந்து விண் புகுதலின் பருதி சேந்ததே.
விளக்கம் : இனிக், கரும்பின் செய்தி கூறுகின்றார். எல்லாம் என்பது இருதிணைக்கும் பொது. பருகுதலின் திருந்திற்று. இனி இங்ஙனம் ஒன்று சேர்த்த பண்டங்களைக் கொண்டுபோகின்றமை கூறுகின்றார். (கண்-கணு.)
-
61. கிணை நிலைப் பொருநர் தம் செல்லல் கீழ்ப் படப்
பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும்
கணை நிலைக் கரும்பினில் கவரும் பண்டியும்
மண நிலை மலர் பெய்து மறுகும் பண்டியும்.
விளக்கம் : இதுமுதல் மூன்று கவியும் ஒரு தொடர். பண்ணை-பணை என ஆனது விகாரம். நிலை - நிலைபெறுதல். கணை- திரட்சி. செல்லல் - துன்பம். கிணைப்பொருநர் : வேளாளரைப் புகழ்ந்து பாடுவோர். கிணை: தடாரி என்னும் ஒருவகைப் பறை. இவர்கள் ஏர்க்களம் பாடும் பொருநர். கவரும் - ஏற்கும். பண்டி - வண்டி.
-
62. மல்லல் அம் தெங்கு இள நீர் பெய் பண்டியும்
மெல் இலைப் பண்டியும் கமுகின் மேதகு
பல் பழுக்காய்க் குலை பெய்த பண்டியும்
ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும்.
விளக்கம் : மெல்லிலை: வினைத்தொகை. பழுக்காய் - பாக்கு.
-
63. கருங் கடல் வளம் தரக் கரையும் பண்டியும்
நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும்
பெருங் கலிப் பண்டிகள் பிறவும் செற்றுபு
திருந்தி எத் திசைகளும் செறிந்த என்பவே.
விளக்கம் : கடல்வளமாவன: ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம் - நீர்ப்படும் உப்பினோ டைந்து. நெருங்குபு: நிகழ்காலம் உணர்த்தும். பிறவும்: உம்மை (பண்டிகளும் என) மாறுக. செற்றுபு என்னும் எச்சம் ஒலியை உடைய என்னும் விரியொடு கூடும்.
நகர்க் கரையும் பாடமாயின், கரைதல் திசைச் சொல்லாய்க், கொண்டுபோம் என்னும் பொருள் பயக்கும். முதிரை - அவரை துவரை முதலியன.
-
64. கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா
வள வயல் வைகலும் இன்னது என்ப தேன்
துளியொடு மதுத் துளி அறாத சோலை சூழ்
ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே.
விளக்கம் : கேடு, விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு; நட்டம் பெரும்பெயல் கால் எட்டு. என்ப:அசை. தேன். (தேனீக்கள் கொண்டுவந்து) வைத்த தேன். மது- பூவின் மது. மிக்க பெயலோடு, பெய லின்மையெலி விட்டில்கிளி - அக்கணர சண்மையோ டாறு என்பர் பரிமேலழகர்; (திருக்குறள் : 732-பரிமேலழகர்).
-
65. சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப் பூக்
காவில் கூடு எடுக்கிய கவ்விக் கொண்டு இருந்தன
தாவில் பொன் விளக்கமாத் தண் குயில் முழவமாத்
தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பிக் கொம்பரோ.
விளக்கம் : எடுக்கிய - எடுத்தற்கு: (எதிர்கால வினையெச்சம்). தா-வலி. தூவி-பீலி. மணம் - பூவின் மணமும் கலியாணமும்.
தாமரையானும் குயிலோசையானும் இளவேனில் என்று கருதி மயில் பூம்பொதுபரின் மறைதலின் கொம்பு புகுத்தும் என்றார்; பேடும் தோகை மயிலும் சேரஇருந்தன (மணம் புகுத்தற்கு) என்றார். இனி, மயில் அன்னம் விளக்காகக் குயில் முழவமாகத் தும்பியைக் கொம்பிடத்தே மணம் புகுத்தும் என்றுமாம். கொம்பு லுலாவுமயில், விளக்காலும் முழவாலும் அக்கொம்பினின்றும் போந்து ஆடுதலின், அம் கொம்பிற் பூவின் மணத்தே தும்பியைப் புகுதவிட்டதாயிற்று. மெல்லிய ஓசையன்மையின் குயிலோசையை முழவமாகக் கருதிற்று. இதற்கு இக்கருத்து நிகழ்தல் ஆடமைக் குயின்ற (82) என்னும் அகப்பாட்டிற் காண்க.
-
66. கூடினார் கண் அம்மலர்க் குவளை அம் குழி இடை
வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏறப் பாய்வன
பாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்பப் போந்து
ஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே.
விளக்கம் : குவளைக் குழியில் (வள்ளைக் கொடிபடர) நாட்டின கழையும் அதிற்படர்ந்த கொடியும், அதிற் பாய்கின்ற மீனும், கழாயும் அதன்கீழ் இழிந்து ஆடுங் கயிறும் கூத்தியும் போன்றன; வடிவும் தொழிலும் உவமம். காண்ப: அகரவீற்றுப் பலவறி சொல்: தொழிற் பெயராய் (வினையாலணையும் பெயராய்) நின்றது. (கழாய், கழை; மூங்கில். பாடு-பக்கம். ஒத்த; பலவின்பால் வினைமுற்று).
வள்ளைக் கொடியின்மேல் வாளைமீன் பாய்தல் கயிற்றிற் பாய்ந்து ஆடாநின்ற கூத்தியின் கூத்துப் போன்றிருந்தது; கரைக்கண் கூடியிருந்த நாரைக் குழாம் கூத்தாடல் காண்பாரை ஒத்திருந்தது என்பதாம்.
-
67. காவி அன்ன கண்ணினார் கயம் தலைக் குடைதலின்
ஆவி அன்ன பூந்துகில் அணிந்த அல்குல் பல் கலை
கோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின்
வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே.
விளக்கம் : கயந்தலை : விகாரம் (கயத்தலை எனல் வேண்டும்.) பொன் : (கருவி) ஆகுபெயர். மேகலைக்கு உறுப்பானவை அற்று வீழ்ந்தன. கலை-மேகலை என்னும் அணிகலன். கொள்ளுநீரர் இன்மையின் என்றது பிறர் வீழ்த்த பொருளைத் தானும் எடுத்துக்கொள்ளாத நற்பண்புடையோர் அந்நாட்டு மக்கள் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. எனவே, அந்நாட்டிற் கள்வாரிலாமை கூற வேண்டாதாயிற்று என்றபடி. இதனோடு.
-
மண்ணு நீராட்டின் மலைந்தன ராகி
வண்ண மணியும் வயிரமும் முத்தும்
இட்டன கொள்ளும் முட்டின ராதலின்
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
-
68. பாசவல் இடிப்பவர் உலக்கை வாழைப் பல் பழம்
ஆசினி வருக்கை மா தடிந்து தேம் கனி உதிர்த்து
ஊசல் ஆடும் பைங் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ
வாசத் தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே.
விளக்கம் : எனவே, ஏனையவும் பயன்தரும் என நிலநன்மை கூறினார். இத்துணையும் சோலைகளும் அவற்றிற்கு அங்கமான வாவிகளும் கூறினார். பசுமை+அவல்: பாசவல். பசுமை-புதுமை. ஆசினியும் வருக்கையும் பலாவின் வகைகள் இச் செய்யுள் உயர்வு நவிற்சியணி.
-
69. மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால்
நின்ற தாரையால் நிலம் நனைப்ப ஏகி நீள் மனைக்
கன்று அருத்தி மங்கையர் கலம் நிறை பொழிதர
நின்ற மேதியால் பொலிந்த நீர மாட மாலையே.
விளக்கம் : இலஞ்சி - மடு: இடவாகு பெயர். நிறை -சால்; பீரிவர்வு பரந்தநீரறு நிறைமுதல் (பதிற்-15) என்றார் பிறரும். மாலை-ஒழுங்கு. அந்நாட்டில் கன்றுயிர் ஓய்ந்துகக் கறந்துபாலுண்ணும் கொடுமையில்லை என்பார், கன்றருத்தி மேதி கலம்நிறை பொழிதரும் என்றார். இக்கருத்தினைக் கறவை கன்றார்த்திக் கலநிறைபொழியும் எனவரும் மணிமேகலையினுங் (12:93) காண்க.
இலஞ்சி மேய்ந்து என்றது அங்ஙனம் அம்மேதிகள் பால்மிக்கனவாதற்குக் குறிப்பேது என்க.
-
70. வெள்ளிப் போழ் விலங்க வைத்து அனைய வாய் மணித் தலை
கொள் பவளம் கோத்த அனைய கால குன்றிச் செங்கண
ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணிப் புறாக்
கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே.
விளக்கம் : மா - கருமை நிறம். மணி - அழகு.
கொள்ளுதல்-அறுத்துக் கொள்ளுதல். நடுவு பல வரை உண்மையின், கோத்தனைய என்றார். ஒள்ளகில்; ஒண்மை, அகிற்கு அடை. சிலர் பாடப் பிள்ளைகள் பாலுண்டார் என்பதும் (தொனிப் பொருளாகத்) தோன்றிற்று. இச்செய்யுளின்கண் சொற்கிடந்தவாறே உவமைகளைப் புறவிற்கே கொள்ளுதலே சிறப்பாம். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அவையிற்றில் சிலவற்றை வாளா பூவைக் கேற்றுகின்றார். புறவினுக்கே ஏற்றுங்கால் அஃதொரு சொல்லோவியமாகும் அருமை உணர்க.
-
71. காடி உண்ட பூந் துகில் கழும ஊட்டும் பூம் புகை
மாட மாலை மேல் நலார் மணிக் குழலின் மூழ்கலின்
கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞைதம் சிறகு
ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்த வண்ணம் அன்னரே.
விளக்கம் : காடி - கஞ்சி, சுட்டு (அக்குழல்) வருவிக்க. அன்னது என்ற பாடத்திற்கு மூழ்குதல் வண்ணம் என்னது அன்னது என்க. மங்கையர் கூந்தலுக்கும் காடி உண்டபூந்துகிலினுக்கும் அகிற்புகை ஊட்டுகின்றனர். கூந்தலுக்குக் கலாபம் உவமை.
-
72. கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு என
உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர்
வண்ண மேகலைகளைப் பற்ற அற்று உதிர்ந்தன
எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே.
விளக்கம் : இமையாது நோக்கலின் இங்ஙனம் ஊடினார். யாவை யீங்களிப்பன தேவர்கோன் (மணி. 14-48) என்னுமிடத்தும் ஈங்கு தன்மையிடத்தை உணர்த்தியது. தன்மையை உணர்த்துதல், செலவினும் வரவினும் (தொல்.கிளவி. 28) சூத்திரத்திற் கூறினாம். பொன்னுக்கும் நீலமணிக்கும் தழலும் கரியும் உவமை. இச்செய்யுள் வள்ளுவர் ஊடல் நுணுக்கத்தே கூறுவனபோன்றதோர் ஊடல் நுணுக்கமாதலுணர்க. மகளிர் தம்மை இமையாது நோக்கும் ஆடவர் கண்ணிலே தம்முருவந் தோன்றக்கண்டு நுங்காதலர் நுங்கண்ணுள்ளே உள்ளனர் என்று ஊடினர் என்பது கருத்து.
-
73. கோட்டு இளந் தகர்களும் கொய் மலர தோன்றி போல்
சூட்டு உடைய சேவலும் தோணிக் கோழி ஆதியா
வேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர்க் கொளீஇக்
காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே.
விளக்கம் : இங்ஙனமாகிய ஆரவாரமேயன்றித் துன்ப முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரம் இல்லை என்பது குறிப்பு. கடியும் கவ்வையும் என்னல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
-
74. இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய
நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன
சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம்
இறை கொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே.
விளக்கம் : நாகுபுன்னை வேற்றுமைத்தொகையாய், ஒற்றிடையின் மிகாமொழியும் (தொல்.குற்றியலுகரப் - 7) என்னுஞ் சூத்திரத்தான், ஒற்று அடாது நின்றது. சொல்லிய மரபின் (தொல்மரபு - 26) என்னுஞ் சூத்திரத்தில், சொல்லுங்காலை என்றதனால், நாகு பெண்மையேயன்றி, இளமையும் உணர்த்திற்று. நாகுமுதிர் நுணவம் (சிறுபாண்.51) என்றார் பிறரும். இறை -தங்குதல்.
மகளிரின் உதைத்தல் முதலிய செயல்களால் மலரும் மரங்களைச் சேர்ந்தவை புன்னையும் வாழையும் எனவே, அவர் கொப்புளித்தலால் அவை மலர்ந்தன என்றவாறு.
-
75. விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் முப் பழச் சுனைத்
தலைத் தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலைத் தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம் பொறி
நிலத் தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே.
விளக்கம் : நோயறுத்தற்கு கடுநெல்லி தான்றி சூழ வளர்ப்பார்கள். தலைய: இரண்டிடத்தும் வினைக்குறிப்பு. இவை அரசன் அறம்.
-
76. அடிசில் வைகல் ஆயிரம் அறப் புறமும் ஆயிரம்
கொடி அனார் செய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம்
மடிவு இல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம்
ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே.
விளக்கம் : இல்லையும் வேறாயிரமும் (இலை, வெறாயிரம் என வந்தன.) விகாரம். அறப்புறம் என்பதற்கு ஓதுவிக்குஞ் சாலையென்பதும் ஒன்று. ஒடிவு-தவிர்வு: ஒடியா விழவு (அகநா.149) என்றார் பிறரும். இறையிலி - வரியில்லாத நிலங்கள். இவை முற்றூட்டெனவும் படும்.
-
77. நல்தவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம்
நல் பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃது இடம்
பெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து என
மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு அரோ.
விளக்கம் : உம்மை இரண்டும் (தவஞ் செய்வார்க்கும் பொருள் செய்வார்க்கும் என்பவற்றிலுள்ளவை) இழிவு சிறப்பு. வெற்றம் - வெற்றி. வீழ்ந்ததென: விகாரம். ஊருரைக்க நின்ற (சீவக. 64) என்ற கவி முதலாக முடித்த வினைகளைச் சேர்த்து, அவற்றையுடைய நாடு விண் வீழ்ந்தெனவைகும்; அஃது இவை செய்வார்க்கிடம் என்க. விழைவிப்பான் : எதிர்கால வினையெச்சம். துறவியாகையால் வீடு பெறுந் தவத்தை நற்றவம் என்றார். அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று என்று திருவள்ளுவர் உரைப்பது காண்க. நற்றவம் என்றும் தவம் என்றும் அடையடுத்தும் அடாதும் வந்த சொற்களுக்கு முன்னையது வீடுபெறுதற்குரியது என்றும், பின்னையது இல்லறம் என்றும், நற்பொருள் பொருள் என்று வருவனவற்றில் முன்னது கல்வி என்றும், பின்னது நென்மணி முதலிய பொருள் என்றும் நுண்ணிதின் உரை வகுக்கும் நச்சினார்க்கினியர் உரைநயம் உணர்ந்தின்புறற்பாற்று.
நகர் வளம் - புடை நகர்
வேறு
-
78. கண் வலைக் காமுகர் என்னும் மாபடுத்து
ஒள் நிதித் தசை தழீஇ உடலம் விட்டிடும்
பெண் வலைப் படாதவர் பீடின் ஓங்கிய
அண்ணல் அம் கடிநகர் அமைதி செப்புவாம்.
விளக்கம் : அம் : சாரியை. மா-விலங்கு. தழீஇ : சொல்லிசை அளபெடை. பீடின் : இன்: ஐந்தனுருபு. கடி : உரிச்சொல். இனி, இச்செய்யுளைப் பெண்வலைப்படாத சான்றோர் பெருமையோடு மிக்குள்ள அண்ணலங் கடிநகர் எனக் கோடலுமாம். என்னை? ஒரு நாட்டின் சிறப்பிற்கு அதன்கண் சான்றோர் நிரம்பியிருத்தலே சிறந்த சான்றாம் என்ப. இக்கருத்தை எவ்வழி நல்லவர் ஆடவர், அவ் வழி நல்லை வாழிய நிலனே எனவரும் அவ்வை மெய்ம்மொழியினும், பொதியிலாயினும் இமயமாயினும் ....... புகாரேயாயினும் நடுக்கின்றி நிலைஇய என்பதல்லதை ஒடுக்கங்கூறார் உயர்ந்தோர் உண்மையின் எனவரும் இளங்கோவடிகளார் கூற்றினும் காண்க. இனி, இச் சிந்தாமணிச் செய்யுட்கு இப்பொருளே கொண்டு கம்ப நாடர் தமது காப்பியத்தின்கண் தொடக்கத்திலேயே இக் கருத்தினை,
-
ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண்ணெனும்
பூசலம்பும் நெறியின் புறஞ்செலாக்
கோசலம்புனை யாற்றணி கூறுவாம்.
-
79. விண்புகு வியன் சினை மெலியப் பூத்தன
சண்பகத்து அணிமலர் குடைந்து தாது உக
வண் சிறைக் குயிலொடு மயில்கண் மாறு கூஉய்க்
கண் சிறைப் படுநிழல் காவு சூழ்ந்தவே.
விளக்கம் : மெலிய - வளைய. கார்காலத்து மயிலின் களிப்பைத் தான் உட்கோடலின் மாறு என்றார். மயிலொடென மாறுக. செய்தென் எச்ச அடுக்கு, அம்முக்கிளவியும் (தொல்.வினை-34) என்னுஞ் சூத்திரத்திற் பிறவினை கொள்ளும் என்றதனால், பிறவினையாகிய உடைய (நிழலையுடைய) என்னுங் குறிப்பினைக் கொண்டது. (கூவி என்னும்) இகர ஈறு (கூய் எனத்) திரிந்தது. இனி மேலிற் கவிக்கும் (கண்வலை) பொருந்த மயிலை உவமையாகு பெயர் வந்த ஆகுபெயரென்று மகளிராக்கி மகளிர் குயிலொடு மாறு கூவினார் என்றுரைப்பதும் ஒரு பொருள். இனிச், சண்பகத்தின் தேன் துளித்தலின் காரென்று இப்பொருளே சிறப்புடையது. மயிலொடு மயிலும், வேனிலாதலிற் குயிலொடு குயிலும் கூவிற்றென்றுமாம். சிறுபான்மையில் கூவிற்றென்றலும் மரபு.
-
80. கை புனை சாந்தமும் கடி செய் மாலையும்
மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய
நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால்
பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே.
விளக்கம் : மேவிய நெய்-பூசின புழுகு. குங்குமம் - குங்குமமும். இவை குளிப்பார் அணிந்தன. இனிப், பிறர் மாசுபட்டதென்னும் நாணினாலே பூவாகிய படாம் போர்த்ததுவுமாம்.
-
81. கடி நலக் கரும்பொடு காய் நெல் கற்றையின்
பிடி நலம் தழீஇ வரும் பெருங் கைக் குஞ்சரம்
அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில்
புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே.
விளக்கம் : பெருங்கையாவது : நிலந்தோய் துதிக்கை. வாரி - யானைக்கூடம். இவை மதிலின் உட்புறத்தே அமைந்துள்ளன. எழு-கணைய மரம். யானையுண்ணும் உணவு கவளம். மதிள்: மதில் என்பதன் போலி.
-
82. சல சல மும் மதம் சொரியத் தம் தம்முள்
கொலை மருப்பு இரட்டைகள் குளிப்பப் பாய்ந்து இரு
மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர்
குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்தவே.
-
83. முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய் கொளப்
பத்தியில் குயிற்றிய மருங்கில் பல்வினைச்
சித்திரக் கிம்புரி வைரம் சேர்த்துநர்
ஒத்துஇயல் இடங்களும் ஒழுங்கு நீண்டவே.
விளக்கம் : (பத்தியின்): இன்: அசை. இனி, கிம்புரி வைரம்-கோளகையுமாம்: ஆகுபெயர். கோளகை - யானைத் தந்தப்பூண்.
-
84. ஓடு தேர்ச் சாரிகை உகு பொன் பூமியும்
ஆடகம் ஆற்றும் தார்ப் புரவி வட்டமும்
கேடக வாள் தொழில் இடமும் கேடு இலாக்
கோடு வெம் சிலைத் தொழில் இடமும் கூடின்றே.
விளக்கம் : ஆடகத்தார்: வேற்றுமைத்தொகை. கோடு சிலை: வினைத்தொகை. கூடின்று: ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று.
இடைநகர்
-
85. புடை நகர்த் தொழில் இடம் கடந்து புக்க பின்
இடை நகர்ப் புறம் பணை இயம்பும் ஓசை ஓர்
கடல் உடைந்தது எனக் கலந்தது அக் கடல்
மடை அடைத்து அனையது அம் மாக்கள் ஈட்டமே.
விளக்கம் : ஆதலால் என்னாற் கூறுதல் அரிது. கடந்து என்றார் கூறுதல் அருமை பற்றி. புகுதல் - சொல்லப்புகுதல். அடைத்தனையது: (அடைக்குந் தன்மையது என்று பொருள்படுவதால்) கால மயக்கம். இனி, புடைநகரிலே தொழில் செய்யும் இடத்தைக் கடந்து உள்ளே சென்றால்... அடைத்தனையது என அந்நகரைக் காண் போருக்குக் கூறுதல்போலப் பொருள்கொள்வதே சிறப்புடையதாதலைக் காண்க.
-
86. சிந்துரப் பொடிகளும் செம் பொன் சுண்ணமும்
சந்தன நீரோடு கலந்து தையலார்
பந்தொடு சிவிறியில் சிதறப் பார் மிசை
இந்திர வில் எனக் கிடந்த வீதியே
-
87. பாத்தரும் பசும் பொன்னின் மாடத்து உச்சி மேல்
தூத் திரள் மணிக் குடம் நிரைத்துத் தோன்றுவ
பூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்து
ஏத்தரும் மயில் குழாம் இருந்த போன்றவே.
விளக்கம் : ஏக்கழுத்தம் (சீவக.496) என்றார் பின்னும். பூத்தன வேங்கை : பூத்தன : வினைமுற்றுப் பெயரெச்சமாயிற்று பூத்த வேங்கை வியன்சினையேறி மயிலினம் அகவும் நாடன் (யாப் பருங்கலவிருத்தி, 50 உரை மேற்கோள்.)
-
88. நெடுங் கொடி நிழல் மதி நெற்றி தைவர
உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின்
நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில்
அடங்கி வீழ்ந்து அருவியின் அழுவ போன்றவே.
விளக்கம் : சிலர் கோபத்திற்கஞ்சிச் செருக்கடங்கி அழுதனர் என்பது போதரும் (குறிப்புப் பொருள்).
-
89. பொன் சிறு தேர் மிசைப் பைம் பொன் போதகம்
நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ
உற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழை
மற்று அத் தேர் உருள் கொடா வளமை சான்றவே.
விளக்கம் : விரீகி என்பது விரீஇ என ஆயிற்று. மற்று: அசை. விரீஇ - நெல். குழைகொண்டு கோழி யெறியும் வாழ்க்கையர் (தொல். சொல்.452. இளம் - உரை மேற்கொள்.) இச் செய்யுளோடு,
-
நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்கால் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்.
-
90. மாலையும் பசும் பொ(ன்)னும் மயங்கி வார் கணைக்
கோல் எயும் குனி சிலை நுதலினாரொடு
வேல் இயல் ஆடவர் விரவி விண்ணவர்
ஆலயம் இது என ஐயம் செய்யுமே.
விளக்கம் : கணை-அலகு. பசும்பொன், கருவியாகு பெயராகப் பூண்களை உணர்த்தியது.
-
91. கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால்
நல் சுணப் பட்டு உடை பற்ற நாணினால்
பொன் சுணத்தால் விளக்கு அவிப்பப் பொங்கிய
பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே.
விளக்கம் : கல்-உலம் (தூண்). சுண்ணப்பட்டு-சுண்ணம் அளைந்த பட்டு. காதலார் என்றும் பாடம். நான்கிடத்தும் சுண்ணம் சுணம் என நின்றது. இது தொகுக்கும் வழித்தொகுத்தலாம். பொற்சுணத்தால் என்புழி ஆலுருபு ஐயுருபாகவும் அதன்பொருள் ஆகிய கருவி செயப்படுபொருளாயும் வந்தன. இதற்கு விதி உருபினும் பொருளினும் மெய்தடுமாறி இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம் திரிபிடன் இலவே தெரியு மோர்க்கே (தொல். வேற்றுமை மயங்கியல், 18) என்பதாம்.
-
92. நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர்
உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம்
நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்க்
கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே.
விளக்கம் : நலத்தகு : வியத்தகு என்றாற்போல நின்றது. நானம்: ஆகுபெயர், அதிலே நனைத்திடித்தலின். (நானம்-புழுகு. இதன் பெயர் இதனில் நனைத்து இடிக்குஞ் சுண்ணத்திற்கு ஆயினமையின் சினையாகுபெயர்.) புகாரினது ஆழத்தால் நகரளவும் கலம் வந்தது; அரசன் விளையாடுதற்குச் சமைத்தனவும் ஆம். புகார் : துறைமுகம்.
-
93. இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய
முட்டு இலா மூவறு பாடை மாக்களால்
புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய
மட்டு இலா வள நகர் வண்ணம் இன்னதே.
விளக்கம் : மிலேச்சராதலின் ஐயறிவிற்குரிய மாக்கள் என்னும் பெயராற் கூறினர். இதனானே நெருக்கமும் ஓசை வேறுபாடும் பயன்கோடலும் கூறினர். கடிநகர் அமைதி செப்புவாம் (சீவக.78) என்றது முதலாக நடுவுகூறிய வினைகளைப், புடைநகர்த் தொழிலிடங் கடந்து (சீவக.85) என்பதனோடு முடித்து, அதுமுதல் இடைகளிற் கூறிய வினைகளை, இன்னது என்பதனோடு முடிக்க.
அகழியின் தோற்றம்
-
94. தங்கு ஒளி நித்திலத் தாமம் சூடிய
வெம் களி இள முலை வேல் கண் மாதரார்
பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும்
கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம்.
விளக்கம் : சூடிய என்றார், முலைமுடி சூடிற்று என்றாற்போல. வெம்மை - விருப்பம். மேல், தாமரை கூறுதலின் பார்ப்பு அன்னப் பார்ப்பு. (பார்ப்பு - பறவைக் குஞ்சு).
-
95. கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள்
ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வன
மோட்டு இறா பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து
ஈட்டறாப் புள் இனம் இரற்றும் என்பவே.
விளக்கம் : முன்னே கழியணைந்தமை (92-ஆஞ் செய்யுள்) பெறுதலின் சுறவு கூறினார். (கழி :உப்பங்கழி.) கரையில் அஞ்சி ஆழத்திற் சென்றால் ஆளைக் கொல்லுதல் அவற்றிற்குத் தொழில்.
-
96. சிறை அனப் பெடையினோடு ஊடிச் சேவல் போய்
அறு பத வண்டு இனம் ஆர்ப்பத் தாமரை
உறைவது குழுவின் நீங்கி யோகொடு
கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே.
விளக்கம் : யோகம்: யோகு எனத் திரிந்தது. கறை - மும்மலம், எழுந்த வண்டு புகைக்கும், பூ நெருப்பிற்கும் உவமம். மும்மலம்: காமம், வெகுளி, மயக்கம். இதன்கண் வண்டினம் ஆர்ப்பத் தாமரை என்று வந்தமையால் தீயிடைநின்று என்று பொருள் கூறி, மேலும் வண்டு புகைக்கும் பூ நெருப்பிற்கும் உவமம் என்று விளக்குதல் போற்றத்தக்கதாம்.
-
97. அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது
கருங் கலம் தோய்விலாக் காமர் பூந் துறை
குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்
விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே.
விளக்கம் : பொன் முதலிய காரணப் பெயர் அவற்றான் இயன்ற காரியத்தின்மேல் நின்ற (காரண) ஆகுபெயர். வெறி - மணம். காமம் மரு என்னும் சொல் காமர் எனக் குறைந்தது. கருங்கலம் வனைந்து சுடப்படுதலாற் கருநிறமுடைய மட்கலம் என்பதுபட நின்றது.
-
98. பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல்
அட்டு ஒளி அரத்தம்வாய்க் கணிகை அல்லது
மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்
கட்டு உடைக் காவலின் காமர் கன்னியே.
விளக்கம் : அட்டு ஒளி அரத்தம் - உருக்கி ஒளியையுடைய அரக்கு. மட்டு-காம பானம். கட்டு-கற்பித்தல் (பெற்றோரால்). அகழி தப்பலானே கணிகையை ஒக்கும், மலர்களையுடைமையால் புது மணமகளை ஒக்கும்; காவலில் கன்னியை ஒக்கும் என்க. தப்புதல்-கொல்லுதல்.
-
99. நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்
விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்
குரை மதுக் குவளைகள் கிடங்கில் பூத்தவும்
உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே.
விளக்கம் : குரைமது: வினைத்தொகை. உரை - புகழ். புகழால் எங்கும் உலாவி. யோசனை : சைனர் கொள்கைப்படி நாற்காதம்.
மதிலின் தோற்றம்
-
100. தாய் முலை தழுவிய குழவி போலவும்
மா மலை தழுவிய மஞ்சு போலவும்
ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய
சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே.
விளக்கம் : குழவி தழுவிய தாய்முலை போலவும், மஞ்சு தழுவிய மாமலை போலவும் என மாறிக் கூட்டுக. ஆய்முகில் - இளைத்த மேகம். அசும்பு - நீர்த்துளி.
வேறு
-
101. மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும்
தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்
கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா
விளக்கம் : பற்றின் என்பதைத் தெவ்வர் தலைபனிப்பத் திருந்தும் என (104ஆம் செய்யுளில் உள்ள தொடருடன்) முடிக்க. இதுமுதல் நான்கு பாட்டுகள் குளகம். நூற்றுவரைக் கொல்லி - சதக்கினி; நூறுபேரை ஒருகாற் கொல்வதொரு பொறி. நூக்குதல் - தள்ளுதல். எறிதல் - அடித்தல். பேய் - ஒரு பொறி. துற்றுதல்-விழுங்குதல். கோண்மா - கொலை செய்யும் விலங்குகள்.
-
102. வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்
கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செந் தீக்
கொல் புனை செய் கொள்ளி பெருங் கொக்கு எழில் செய் கூகை
நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே
விளக்கம் : எழில்செய் கூகை: இகழ்ச்சிக் குறிப்பு. விற்பொறி - தானே அம்பெய்யும் இயந்திர வில். குதிரை - ஒரு பொறி. கற்பொறி-கல்லை வீசும் பொறி. இதனை இடங்கணி என்றும் கூறுப. பாவை முதலியனவும் பொறிகள். மாடம் - நாடகசாலைபோன்று தோன்றித் தன்பாற் புக்காரைக் கொல்லுமொரு பொறி. நெருக்கு மரம் - ஐயவித்துலாம்.
-
103. செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்
வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெந் நெய் முகத்து உமிழ்வ
அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித்
தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே.
விளக்கம் : ஆகி - ஆக. புலம் - அறிவு. யவனர் - யவனநாட்டிலிருந்து வந்துள்ள தச்சர். இவர்கள் பொறிகள் இயற்றுவதில் திறமுடையோர்கள். பெருங்கதையின்கண் யவனத் தச்சன் ஒருவன் யூகிக்குப் பொறித்தேர் கொடுத்தமை இலாவாண காண்டத்துக்குக் காணப்படுகின்றது.
-
104. கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம்
குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண்நூல்
பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்
திருந்து மதி தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே
விளக்கம் : மதில் இன்னதும் இன்னதும் திருந்திற்றெனச் சினைவினை முதலொடு முடிந்தது. பற்றிற் பனிப்ப என்க. இத் தொடர்நிலையில் சொற்களைத் துணித்துப் பலவிடத்தினும் எடுத்துக் கூட்டியது. (பற்றிப் பனிப்ப என்பனபோல) செய்யுளுறுப்பு இருபத்தாறினும் மாட்டென்பது ஓருறுப்பாதலின்; அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் -இயன்று பொருள் முடியத் தந்தனருரைத்தல்-மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் (தொல்.செய்.210) என்றும், மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி - உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே (தொல்.செய்.211) என்றும் தொல்காப்பியனார் கூறினார். இதனால் நாடு முதலிய கவிகளில் மாட்டின்றி வந்தனவுங் கொள்க. இவ்விதி மேல்வருவனவற்றிற்குங் கொள்க என்பர் நச்சினார்க்கினியர்.
-
105. வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்
வயிர மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக
வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல்
வயிரக் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே
விளக்கம் : வரைகள் கண்விழிப்பன போன்று கதவையுடைய என வினைக்குறிப்பொடு முடிந்தது. மழை உகளும் வாயில் எனவே கோபுரமாம். ஞாயில்: புழையின் வழியே பகைவர்மேல் அம்பை எய்து மறையும் சூட்டு என்னும் உறுப்பு. (கன்னி கவினது என மாறுக; அஃது இடப்பொருளுணர்த்திற்று என்பர் நச்சினார்க்கினியர்.) இனி, ஆக என்பதை எங்குங் கூட்டி, மதில் இன்னது இன்னதாகக் கவினிடத்தது என்றும் ஆம். மதிலில் இன்னது ஆகையினாலே அம்மதிற் கன்னியதாயிருக்கும் அழகு என்றுமாம்.
அகநகர்த் தோற்றம்
-
106. செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப்
பைம் பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி
அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான்
உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம்
விளக்கம் : ஆர்த்தி : ஆர்த்ததால் எனத் திரிக்க. இச் செய்யுள் மிக மிக ஆழ்ந்த கருத்துடையது. தாம் வருந்தி ஈட்டிப் பிறர்க்கு ஊட்டுவோராகிய அறக்குடிகளே நிறைந்த நகரம் என்பார், தீவின்நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி என்றார். இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் நினைவோடு ஆர்த்துவார் அல்லர் ஆயினும் காரணம் காரியத்தைப் பயந்தேவிடுதல் ஒரு தலையாகலின், அம்பொனிலத்தே ஏகு குடி நகரம் என்றார். அந்நகரத்தே உறைவோர் உம்பருலகத்தை விரும்பவும் வேண்டா என்பார், அதுதான் உம்பருல கொப்பது என்றார். வள்ளன்மையான் உம்பர் உலகிதனை ஒவ்வாது இந்நகர் நுகர்ச்சியால் அதனை ஒக்கும் என்பது கருத்து. அத்தகையதாகலின் முற்றக்கூறவியலாது என்பார் சிறிதுரைப்பாம் என்றார்.
பரத்தையர் சேரியின் தோற்றம்
-
107. துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின்
ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறாச்
செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவின்றி விற்கும்
உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே
விளக்கம் : தொண்டை : வாய்க்கு அடை. நலம் வரைவு இன்றி - அன்பு நிலைபெறுதல் இன்றி, உப்புடைய முந்நீர் (சீவக.280) என்றார் உவர்ப்பிற்கு. உப்பு இனிமையும் ஆம். இனி உவமைத் தொகையாக்கி, இதற்கு இஃது அளவென்று உப்பிடுமாறுபோலக் கொடுக்கும் பொருளளவான அன்பென்றும் உரைப்ப. துப்பை யொக்கும் தொண்டை போலும் செவ்வாய் என இரண்டு உவமையும் செவ்வாயை நோக்குதலின், அடுத்து வரலுவமையன்று.
உப்பமை காமம் உவர்ப்பில்லாத காமம் என்ற பொருளுக்கு அமைதல் நீங்கி நிற்றல். துப்பு - நுகர்ச்சி. கணிகையர்க்குக் கொடுக்கும் பொருளின் அளவினை ஒன்று முதலாக ஓரெட்டிறுத்த ஆயிரங்காறும் என ஆத்த பரிசம் (பெருங். 135: 83-4) என்றும், நூறுபத்தடுக்கி யெட்டுக் கடைநிறுத்த வீறுயர் பசும்பொன் (சிலப்.3-164) என்றும் பிற சான்றோரும் கூறுதல் அறிக.
-
108. குங்குமம் மெழுகிச் சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால்
தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி
எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப்
பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே
விளக்கம் : விண் ஆகுபெயரால் தேவரைக் குறித்து நின்றது. தேவமகளிரை நுகரும் தேவரும் அவரை வெறுத்து இவரை விரும்பப் பண்ணும் இடம் என்றவாறு. அவிநயத்தானும் மெய்ப்பாட்டானும் காமக்குறிப்புத் தோன்ற வரையப்பட்ட நாடகம் என்க. நாடகம் எழுதி என்றதனால் ஓவியம் என்பது பெற்றாம்.
-
109. தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த
காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்
வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்
ஆசைப் பட்டு அரசு வைக அருங் கடி கமழும் அன்றே
-
110. அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கைப்
பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ்வாய்
அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை
துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்க லாதே
விளக்கம் : செவ்வாயை முன்னும் பின்னும் பண் என்பதனோடும் குழல் என்பதனோடும் கூட்டுக.
-
111. தேன் உலாம் மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட
வான் உலாம் சுடர்கண் மூடி மா நகர் இரவு செய்யப்
பால் நிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே
விளக்கம் : ஏகாரம்: தேற்றம். இரவும் பகலும் இன்மையின் துறக்கம் ஒத்தது, இனி பால்-பகுதி, நிலா-ஒளி என்றும் உரைப்ப; நிலாத்தலைத் திகழும் பைம்பூண் (சீவக.195.) பணிநிலா வீசும் பைம்பொற்கொடி (சீவக.2531) என்றாற்போல.
கடை வீதிகள்
-
112. இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப்
பட்டமும் பசும் பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்
அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன்.
விளக்கம் : பண்டைக்காலத்தே நகரங்களில் தெருக்களை நூல் பிடித்து ஒழுங்குற அமைக்கும் வழக்க முண்மை உணர்க. ஆவணம் அங்காடி; கடைத்தெரு.
-
113. மணி புனை செம் பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலைக்
கணி புனை பவழத் திண் காழ் கம்பலக் கிடுகின் ஊன்றி
அணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்
திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே.
விளக்கம் : கணி - நூல் தேர்ந்தவன். அவன் புனைந்த காழ். திணி நிலம் - உறுதி செய்த நிலம். தேம்கொள் ஐயவி - தெய்வங்கள் இனிதாகக்கொண்ட வெண்சிறு கடுகு. வம்ப-கச்சு. கொட்டை - உருண்டை வடிவமானது. காழ் - காம்பு. கிடுகு - சட்டம். முத்தமாலை புனைந்த கிடுகு எனக் கூட்டுக.
-
114. பொன் சொரி கதவு தாழில் திறந்து பொன் யவனப் பேழை
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும்
மன் பெரும் பவழக் குப்பை வால் அணிகலம் செய் குப்பை
நண் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே.
விளக்கம் : நன்பகல் - நடும்பகல்.
-
115. விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா
ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா
பழக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும்
எழில் பொலி மணியினாலும் கடை தொறும் இயற்றினாரே.
-
116. மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகாப்
பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி
மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே.
விளக்கம் : யாங்கும் : உம்; சிறப்பு. ஓரோசையும் பாடம். பூசி-பூச. நான்கு சாதியும் அநுலோமப் பிரதிலோமரும் சங்கர சாதியும் பற்றி எழுவர் என்றார் என்பர் நச்சினார்க்னியர். எழுவர் என்றது பன்மை பற்றி வந்ததென்பதே தக்கது.
-
117. மெய்யணி பசும் பொன் சுண்ணம் மேதகு நான நீரின்
ஐது பட்டு ஒழுகி யானை அழிமதம் கலந்து சேறாய்ச்
செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி
வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன்.
விளக்கம் : அணி சுண்ணம்: உண்ட (பின் மிகுந்த) சோறு போல் நின்றது; மிச்சில் கவிழ்த்தல் மரபு மாலையினும் கலத்தினும் தீண்டுதற்கு அடி நாணிற்று, தமது நலத்தான். இவை பீடிகைத் தெருவொழிந்தன.
தெருக்களின் தோற்றம்
-
118. முழவு அணி முது நகர் முரசொடு வளை விம
விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை
இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை
மழை என மறையின பொலிவினது ஒருபால்.
விளக்கம் : கதிரவன் ஒளியிருப்பின் இழைஒளி தோன்றாது. விம- வீம்ம; ஒலிப்ப. இச் செய்யுளின்கண் முகில் மின்னலோடு இடியும் உடையதாய் வந்து ஞாயிற்றை மறைப்பதுபோல புகை முழவு முதலியவற்றின் ஒலியோடு அணிகலன் மின்ன ஞாயிற்றை மறைத்த தென்றமையுணர்க.
-
119. குடையொடு குடை பல களிறொடு நெரி தர
உடை கடல் ஒலியினொடு உறுவார் பலி செல
முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர்
கொடியுடை மழை மினின் குலவியது ஒரு பால்.
விளக்கம் : இது செல்வமுண்டாதற்குப் பலி நடக்கும் என்றார். இனிப், பலி நடத்தலிற் குடை முதலியன நெரிதர முடிநெருங்கிற்றென்றுமாம்.
-
120. பூத்தலை வாரணப் போர்த் தொழில் இளையவர்
நாத் தலை மடி விளிக் கூத்தொடு குயில் தரக்
காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ்
பூத்துகள் கழுமிய பொலிவினது ஒரு பால்.
விளக்கம் : விளியெனினும் சீழ்க்கையெனினும் வீளையெனினும் ஒக்கும். காய்த்துறு - காய்ச்சலுற்ற.
-
121. மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர்
அம் துகில் பற்றலின் காசரிந்து அணி கிளர்
சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின் அணிந்து
இந்திர திருவிலின் எழிலினது ஒருபால்.
விளக்கம் : நிலமிசை என்பதனை நிலம் விசை என்று நச்சினார்க்கினியர் பாடம் கொண்டனர் என்பது அவருரையான் விளங்கும்.
-
122. வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம்
அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை
விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையுமின்
உள அணி கலம் எனும் உரையினது ஒருபால்.
விளக்கம் : தயிரொடு: ஓடு; எண்ணுப்பொருளில் வந்த ஓடுவும் ஆம். வாலவிழும் என்றும் பாடம். அந்நகரத்து மக்கள் தம்மனையில் விருந்துண்போர்க்குக் கூலியும் கொடுக்கும் மாண்பினர் என்பது போதர உள அணிகலனும் என்றார்.
-
123. வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன
புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர்
விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு
குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால்.
விளக்கம் : அருவிபோல் வீழ்கின்ற மதமென்பாரும் உளர். மிசை என்றும் பாடம்.
-
124. வரி வளை அரவமும் மணி முழவு அரவமும்
அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும்
புரி வளர் குழலொடு பொலி மலி கவினிய
திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம்.
விளக்கம் : புரிவளர் குழல் - நரம்பிடத்து இசை வளர்தற்குக் காரணமாகிய குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர் - முழவியம்பலாமந் திரிகை (கூத்தநூல்) புரி - விருப்பமுமாம். இஃது அரசற்குரியவர் இருப்பு.
தெருக்களிலுள்ள மனைகளைப் பற்றிக் கூறுதல்
-
125. பாவை அன்னவர் பந்து புடைத்தலில்
தூவி அன்னம் வெரீஇத் துணை என்று போய்க்
கோவை நித்தில மாடக் குழாம் மிசை
மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே.
விளக்கம் : (மதி இயங்குந்தோறும் தானும் இயங்கிற்று என்பது குறிப்பு.)
-
126. திருவ நீள் நகர்ச் செம் பொனின் நீடிய
உருவ ஒண்கொடி ஊழின் நுடங்குவ
பரவை வெம் கதிர்ச் செல்வன பன்மயிர்ப்
புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே.
விளக்கம் : பரவை - பரத்தல். இதனால் அந்நகரத்து மாந்தர்போன்று அந்நகரமும் தன்பால் வந்த விருந்தினை உபசரிக்கும் பண்பு உடைத்தாதல் கூறப்பட்டது. இது தற்குறிப்பேற்றம்.
-
127. இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார்
விழைய ஊட்டிய மேதகு தீம் புகை
குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர்
மழையுள் மா மதி போன்ம் எனத் தோன்றுமே.
விளக்கம் : உலர்த்துவார்: தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்.) புகைசூழ் முகம் மழையுள் மாமதிபோலத் தோன்றும் என்க.
-
128. செம் பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும்
அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும்
தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும்
வம்பு உண் கோதையர் மாற்றும் அயல் அரோ
விளக்கம் : ஏவற் சிலதியர் என்பது தோன்ற வம்புஉண்கோதையர் என்றார். வம்பு -புதுமை. புதுமையை நுகர்ந்து கழித்த மாலையையுடையவர் என்பது கருத்து. எனவே, சிலதியர் என்பதாயிற்று. இதனோடு, கொடுப்போர் வீழ்த்த குங்குமக் குழையலும், தொடுப்போர் வீழ்த்த தூவெள்ளலரும், .... வேள்விச் சமிதையும்.... வாசச்சுண்ணமும் .... கலவைச் சாந்தமும்.... புதுப் பூமாலையும்..... சிறாஅர்வீழ்த்த செம்பொற் கண்ணியும்... காட்டு (மயல்) எனக் கமர்ந்து கூட்டுநர் (2 2: 92-102) எனவரும் பெருங்கதைப் பகுதியை ஒப்புக் காண்க. கண்டுகை விட்ட மயல் (நாலடி.43) என்றார் பிறரும்.
-
129. வேரிஇன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து
ஆரி ஆக அம் சாந்தம் தளித்தபின்
வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு
சேரி தோறு இது செல்வத்து இயற்கையே.
விளக்கம் : அரி - ஐம்மை; அரி ஆரி என்றாயது விகாரம். ஆரி - அழகென்றுமாம். ஆரியாக - மேலாக என்றுமாம். மேலும், தளித்த சுண்ணம் (சீவக.1330) என்ப. வேரி - இருவேரி; வெட்டிவேர்.
-
130. கருனை வாசமும் கார் இருள் கூந்தலார்
அருமை சான்ற அகில் புகை வாசமும்
செருமிச் சேர்ந்து கண்ணீர் வரத் தேம் பொழில்
உரிமை கொண்டன ஒண்புறவு என்பவே.
விளக்கம் : கூந்தலில் ஆர்புகை: வினைத்தொகை. கூந்தலார்: பெயருமாம். கருனை - பொரிக்கறி வாசம் மணம். இஃது ஆகுபெயராய் மணமுடைய புகையைக் குறித்தது. அகிற்புகை வாசமும் என்புழி அகில் வாசப்புகையும் என மாறுக. மாடத்தைவிட்டுத் தேம்பொழில் உரிமை கொண்டன என்பது கருத்து.
-
131. நறையும் நானமும் நாறும் நறும் புகை
விறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம்
நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது
உறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே.
விளக்கம் : விறகு - சந்தனம் முதலியன. விருந்தோடுண்டலே அழகு ஆதலின் மாந்தர் விருந்தொடும் உண்பவே என்றார். எனவே, தம்மில்லிருந்து தாமே உண்டு தம் விலாப் புடைக்கும் புன்செல்வர் ஆண்டிலர் என்பது குறிப்பு ஆயிற்று.
-
132. பாளை மென் கமுகின் பழம் மெல் இலை
நீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம்நலார்
ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம்
நாள் செய் மாலை நகை முடிப் பெய்பவே.
விளக்கம் : ஆளி மொய்ம்பர் அணிந்திருந்த சண்பயமாலையை வாங்கி நாட்கால மன்றாயினும் வேட்கை மிகுதியால் தமது முடியிலே பெய்வர். இனி, நாட்காலத்தே செய்த சண்பகமாலை அணிந்த முடியிலே அக்காலத்திற்குரிய பூக்களைப் பெய்வர் என்றுமாம் என்று கூறுவர் நச்சினார்க்கினியர். மணம் மெல்லிய பாளை. வெள்ளிலை பாடமாயின், கொம்பிலே வெளுத்ததாம். நகைமுடி - முத்தமாலை சூடிய முடி.
-
133. எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார்
மெழுகு குங்கும மார்பு இடை வெம் முலை
உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை
முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே.
விளக்கம் : திளைப்பன : (கலவிக்) கரணங்கள்.
-
134. குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டு உணும்
அஞ்சில் ஓதியர் அம் மலர்ச் சீறடி
மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம்
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே.
விளக்கம் : கோபத்தாலும் கரணத்தாலும் நடுங்கிற்றென ஊடலும் கூடலும் உணர்த்திற்று; கொல்புனல் தளரின் நடுங்குவனள் நின்று (பதிற்.52) என்றார் பிறரும். நகராதலின் ஊடற்குக் காரணங் கூறாராயினார் -(நகரிற் பரத்தையர் சேரி உளதாதலின் ஊடல் தோன்றியது. மருத நிலத்தின் உரிப்பொருள் ஊடல்.) எஞ்சு பொருட்கிளவி செஞ்சொல் ஆயின் - பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல் (தொல்.இடை-36) என்பதனாற் குஞ்சிமேலும் என உம்மை கொடாராயினார்.
-
135. தூமமே கமழும் துகில் சேக்கை மேல்
காமமே நுகர்வார் தம் காதலால்
யாமமும் பகலும் அறியாமையால்
பூமி மா நகர் பொன் உலகு ஒத்ததே.
விளக்கம் : தூமமே: ஏகாரம். தேற்றம். காமமே: ஏகாரம், பிரிநிலை. யாமத்தும் எல்லையும் (கலி.139) என்றார் பிறரும். பூமியின் பூமென்மாநகர் என்றும் பாடம். பூ-வடமொழி.
-
136. அரவு கான்றிட்ட அம்கதிர் மா மணி
உரவு நீர் முத்தும் உள் உறுத்து உள்ளன
இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர்
புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே.
விளக்கம் : இரவலரும் இல்லை; கொடுப்பவரும் இல்லை என்பது குறிப்பு. இஃது இகழ்ச்சி. ஏகாரம்: எதிர்மறை. இனி, இன்னவை இரவல் மாந்தர்க்கும் உள்ளனவாய் இருத்தலிற் பின் மாந்தரே புரவு பூண்டார் என்றது உயிர் உறுப்பு முதலியன கொடுத்தற்குத் துணிந்தார் இவரே என்றுமாம்; ஏகாரம் தேற்றம். இச் செய்யுட்கு, பொருள்களுள் வைத்துக் கிடைத்தற்கரிய அரவு மணியையும் மிக வருந்திக் கொள்வதாகிய நீர்முத்தினையும்கூட இந்நகர மாந்தர் இரவலர்க்கு வழங்குவர் என்பது கருத்தாகக்கோடல் அமைவதாம்.
-
137. முல்லை அம் குழலார் முலைச் செல்வமும்
மல்லல் மா நகர்ச் செல்வமும் வார் கழல்
செல்வர் செல்வமும் காணிய என்பர் போல்
எல்லியும் இமையார் இமையாததே.
விளக்கம் : என்பவே என்பது பாடமாயின், இமையார், நீயிர் இவை காண்டற்கு யாங்கள் இமையாதிருந்தது என்று கண்ணிற்குக் கூறுவாரென்க. ஏகாரம்: ஈற்றசை. (இமையாதிருத்தல் இமையவர்க்கியல்பு.) மூலைச்செல்வம் என்றதனைப் போகம் என்றும் நகர்ச்செல்வம் என்றதனை நென்மணி முதலிய பொருள் என்றும், கழற்செல்வம் என்றதனை வீரமும் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுவது இனிமை பயக்கின்றது.
-
138. முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ
விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால்
புகழலாம் படித்து அன்று இது பொன்னகர்
அகழ்தல் மாக் கடல் அன்னது ஓர் சும்மைத்தே.
விளக்கம் : வேள்வி - சிறப்புறு நாட்களிலே நிகழ்வன. வேள்வி என்பது வேள்வு என ஈறு திரிந்தது.
-
139. திங்கள் முக்குடையான் திரு மாநகர்
எங்கும் எங்கும் இடம் தொறும் உண்மையால்
அம் கண் மா நகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்
சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே.
விளக்கம் : இனி, மாநகருண்மையால் நகர்க்கு ஆக்கம் அறாது; அவ் வாக்கம் ஒரு சங்க நிதியாலே தளிர்க்கின்றது என்றுமாம். சங்கநிதி - அரசன்.
-
140. தேன்தலைத் துவலை மாலை பைந்துகில் செம் பொன் பூத்து
ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை
கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கும்
ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமா புரம் அதாமே.
விளக்கம் : இனி, தான் சுரந்த அருளாலே யாவர்க்கும் மறுமையிற் கற்பகச்சோலையை யீன்று, அச்சோலையிற் செல்வத்தைத் தன்னிடத்தேயுடையது இராசமாபுரம் என்றுமாம்; என்றது, இதில் வாழ் வாரருளைக் கண்டு பிறர்க்கும் அருள்பிறந்து, சுவர்க்கம் எய்துவர் என்றவாறு. இத்துணையும் நகரின் சிறப்புக் கூறினார்.
அரண்மனையின் சிறப்பு
-
141. வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல்
மாகம் நீள் மணிமுடி மாரி வண்கை மாசு இல் சீர்
ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன்
நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம்.
விளக்கம் : தானை என்றது ஒழிந்த மூன்று படையை, தேவர் புகழும் முடி என்று குலநன்மை கூறினார். சீர்-மிக்க புகழ், ஏக ஆணை பொதுவற ஆளுதல். இதன்கண் அரசற்குரிய அளியும் தெறலும் நிரலே ஐயகோல், மாரிவண்கை, வெண்குடை என்பவற்றானும், வேகயானை, மீளிவேல், வெய்யதானை, ஏகவாணை என்பவற்றானும் உணர்த்தப்பட்டன. நாகம் - வானுலகு, நாகருலகுமாம். நகர் என்றது அரண்மனையை
-
142. நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச்
சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர்
கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே.
விளக்கம் : சுறவு என்பது ஈறு கெட்டுச் சுற என வருதல் புறனடையால் (தொல் உயிர்மயங்கு-82) கொள்க. சுருங்கை - கரந்த கற்படை; நகரத்தின் வெளியகழிக்கும் அரசன் அரண்மனை சூழ்ந்த அகழிக்கும் உள்ள வழி.
-
143. இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்
மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும்
அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்
குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒத்ததே.
விளக்கம் : குஞ்சி - கொடிநாட்டுங் குழி; மூங்கிலுமாம். இதன்கண் இந்திரனுடைய முகில் அவன் நாட்டிற் புகும் மதில், ஆகிய பகைவனைச் சந்து செய்வித்தது என்றலும், அப்பகைவனாகிய மதில் தன்னை வந்து காணும்படி இந்திரனைப்பணித்தது என்றலும் இனிய கற்பனையாதல் உணர்க.
-
144. முத்து மாலை முப்புரி மூரி மா மணிக் கதவு
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன்
தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே.
விளக்கம் : போன்றவும் பாடம். முப்புரியாகிய முத்தமாலையை யுடைய கதவுமாம்.
-
145. சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக்
கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து
இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம்
செங் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னதே.
விளக்கம் : செல்வம்: ஆகுபெயர்; சோலையை உணர்த்தியதால்
-
146. வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம் பொனால்
துள்ளும் மான் ஒருத்தலும் செம் பொன் அம் பொன் மான்பிணை
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர்
பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே.
விளக்கம் : இனி வெள்ளியாலே யானையும் பிடியும் செய்த என்றுமாம். இப்பொருள் ஆற்றொழுக்கானது.
-
147. கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய
மாழையம் திரள் கனி மா மணி மரகதம்
சூழ் குலைப் பசுங்கமுகு சூலு பாளை வெண் பொனால்
ஊழ் திரள் மணிக் கயிறு ஊசல் ஆட விட்டதே.
விளக்கம் : கூந்தற் கமுகு: கூந்தற் பனைபோலக் கமுகில் ஒருவகை: கோழ் - கொழுவிய. மணிமடல்: மணி-நீலமணி. மணிக்கயிறு: மணி: ஈண்டு முத்து.
-
148. மென் தினைப் பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும்
குன்று அயல் மணிச் சுனைக் குவளை கண் விழிப்பவும்
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன்
கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே.
விளக்கம் : காமர் காமபூமி - காமனுக்கு விருப்பஞ் செய்யும் பூமி, காமரை வென்ற கண்ணோன் (சிற். 164) போல. பிறங்கல் - திரள். இவற்றைச் சித்திரம் எனிற் கோயிற்கு அங்கமாகிய செய்குன்று கூறிற்றிலராவர்.
-
149. தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே.
விளக்கம் : ஊழ் : ஊழியெனத் திரிந்தது ; முறைமைப்பட அலர்ந்து நாறும், இளஃகும்; இளகும். செய்யுள் விகாரம்.
-
150. முத்தம் வாய் புரித்தன மொய் கதிர்ப் பசும் பொனால்
சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி
பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன
இத்திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே.
-
151. வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும்
கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும்
இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே.
-
152. கூற்றம் அன்ன கூர் நுதிக் குருதி வான் மருப்பு இடைச்
சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன
ஊற்று இருந்த மும் மதத்து ஓடை யானை பீடுசால்
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே.
விளக்கம் : கூற்றம் யானைக்குவமை. முற்செய்யுளில் மகளிர் பந்தாடுதலின்பம் கூறிய ஆசிரியர் அந்நினைவினாலே இதன்கண்ணும் ஊற்றிருந்த மும்மதத் தோடையானை கூற்றமன்ன கூர்நுதிக் குருதிவான் மருப்பிடைச் சீற்றமுற்ற மன்னர்தஞ்சென்னி பந்தடிப்பன என்றார். இவை அரசன் ஏறுவன ஆதலின் உள்நிற்றல் இயல்பு.
-
153. கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும்
தெவ்வர் தந்த நீள் நிதி செம் பொன் மாடமும்
மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய் மாடமும்
இவ் வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே.
விளக்கம் : கருவி -தொகுதி; ஈண்டு ஆகுபெயர்; வீரர்களை உணர்த்தியதால். இனி, பகைவர்க்குக் கவ்வையைச் செய்தலையுடைய ஆயுதங்கள் சூழ்ந்து நோக்கினார் கண்ணை அகப்படுத்தும் ஆயுதசாலை என்னும் இப்பொருளே சிறப்புடையது. கவ்வை - துன்பம்.
-
154. பூத் கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும்
காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார்
கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர்
ஏத்தல் சான்ற கோயிலும் இடைப் படுத்து இயன்றவே.
விளக்கம் : தமது கண்ணானது இளையோர் மெய்யை வெவ்விதாக்கி அவர் நெஞ்சிலே சுடும் மாதரார் எனச் சினைவினை முதலொடு முடிந்ததென்க. இதனால் (கூத்தறாத பள்ளியும் கோயிலும் ஆகிய) இரண்டும் தம்மில் இடைவிட்டிருக்கு மென்றார்; மேலே வண்புகழ் மாலடி வந்தனை செய்தாள் (சீவக.220) என்ப. ஈண்டு மன்ன மங்கையர் என்பதற்கு நச்சினார்க்கினியர் காவன்மகளிர் என்றார். அங்ஙனம் கூறியதன் கருத்தினை அவர் பட்டினப் பாலையில் கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலர்அணி மெழுக்கம், என்பதற்குப் பகைவர் மனையோராய்ப் பிடித்து வந்த மகளிர் பலரும் நீருண்ணுந் துறையிலே சென்று முழுகி மெழுகும் மெழுக்கம் என்று வரைந்த வுரையான் நன்கு விளங்கும். இதனால் பண்டைக்காலத்து மன்னர் பகைமன்னர் மகளிர்பால் நடந்துகொண்ட பெருந்தன்மை இனிது விளங்கும். காய்த்து : காய்ந்து; வலித்தல் விகாரம்.
-
155. கந்து மா மணித்திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச்
சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால்
இந்திரன் திரு நகர் உரிமையோடு இவ்வழி
வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே.
விளக்கம் : ஏகாரம் : தேற்றம்.
-
156. ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உணப்
பாடலின் அரவமும் பணை முழவு அரவமும்
கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும்
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே.
விளக்கம் : கொட்டி - ஒக்கடித்து (சேரக் கொட்டி.) இனி, வைகவாயின், ஓசையோடு செல்ல நாளும் கழியா நின்றது என்க. (அண்ணல் என்ற சொல் முன்பாட்டிலிருந்து வருவிக்கப்பட்டது.) கோயிலின் சிறப்புக் கூறினார்.
சச்சந்தன் வரலாறு
-
157. நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்
அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்
கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய
சச்சந்தன் எனும் தாமரைச் செங் கணான்.
விளக்கம் : (பாம்பின் சீற்றம் நஞ்சு உயிரைப் போக்கும் அளவும் இருந்து பிறகு நீங்கும்). இச் செய்யுளினும் வேந்தற்குரிய அளியும் தெறலும் கூறப்பட்டன. அளியினும் வேந்தற்குத் தெறலே சிறத்தலின் முதற்கண் நச்சு நாகத்தின் ஆரழற் சீற்றத்தன் என்றார். அச்சம் உற்றடைந்தார்க்கு என்றமையான் செருக்குற்றுப் பகைத்தார்க்கு நாகச் சீற்றத்தன் என்று வருவித்தோதுக. ஆரழற்சீற்றத்தன் என்றதனால் அவன் பேராண்மை விதந்தோதப்பட்டது. அடைந்தார்க் கமிர்தன்னவன் என்றதனால் அதன் எஃகாகிய ஊராண்மை விதந்தோதப்பட்டது. என்னை?
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு
என்பவாகலான் என்க.
-
158. வண் கையால் கலி மாற்றி வை வேலினால்
திண் திறல் தெவ்வர் தேர்த் தொகை மாற்றினான்
நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள்
கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே.
நுண்கலை என்றது, இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம் என்னும் ஐந்தனையும். இவை கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணர்வனவாகலின் நுண்கலை எனப்பட்டன.
-
159. கோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை
ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்
தாதையே அவன் தாள் நிழல் தங்கிய
காதலால் களிக்கின்றது இவ் வையமே.
விளக்கம் : கோதை நித்திலம்: உம்மைத் தொகை. ஒப்ப - எல்லார்க்கும் ஒப்ப. தங்கிய: செய்யிய என்னும் எதிர்கால வினையெச்சம். இனி, தாணிழற்றங்கிய வையம், அவன் உலகில் வைத்த காதலாலே களிக்கின்ற தென்றுமாம். இவற்றால் (மூன்று செய்யுட்களாலும்) தெறலும் அளியும் அழகும் கொடையும் வீரமும் கல்வியும் முறை செய்தலும் கூறினார். ஈண்டுத் தேவர் தாதையே எனச் சச்சந்தனுக் கோதியதனையே கம்பநாடர் சிறிது மாற்றித் தயரதன் தாயொக்கும் அன்பின் (4.அரசிய-4) என்று தங்காப்பியத்து அமைத்துக் கொண்டார்.
-
160. தருமன் தண் அளியால் தனது ஈகையால்
வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
அருமையால் அழகின் கணை ஐந்து உடைத்
திருமகன் திரு மா நில மன்னனே.
விளக்கம் : இங்ஙனம் உவமை கூறுதற்குக் கொண்டு கூறினார். எனவே, கூறியது கூறல் அன்றென்க.
-
161. ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்
தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்
தேனை மாரி அன்னான் திசை காவலன்
வானம் தோய் புகழான் மலிவு எய்தினான்.
விளக்கம் : தேனை : ஐ : அசை.
விசயையின் தோற்றம்
-
162. செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல்
மல்கு நீர் விதையத்து அரசன் மகள்
அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்
வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள்.
விளக்கம் : அல்லி : அகவிதழ்; சினையாகு பெயராகத் தாமரை மலரை உணர்த்தியது. புனலினது வளப்பம் பொருந்திய நீர்மையையுடைய விதையம்; தண்ணீரும் விளைவிக்கும் நீருமாம். திருவிற்கு ஒரு திருவன்னவள்; இல்பொருள் (உவமை.) சச்சந்தன் உயிர்நீத்தமைக்குக் காரணமாதல்பற்றி வில்லின் நீள்புருவத்து எறிவேற் கணாள் என்று கொல்படைகளை உவமை ஓதினர்.
-
163. உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு
அரிய ஆயினும் அவ் வளைத் தோளிகண்
பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு
அரிய தேவரும் ஏத்து அரு நீரளே.
விளக்கம் : அதுமேற் கூறுகின்றார். உருவுஞ் சாயலுமாகிய காரிகை என்க. அவை கண்ணானும் மனத்தானும் நுகரப்படுவனவேயன்றிச் சொல்லாற் கூறும் எளிமையுடையனவல்ல வென்பார் உரைப்பதற்கு அரிய வாயினும் என்றும், அங்ஙனமாயினும் எம்மாலியன்ற வளவிற் கூறுவேம் என்பார் பேசுவல் என்றும் கூறினார். அக்குறை மக்கட் பிறப்பினையுடைய எமக்கே உரியது மன்றென்பார் தேவரும் ஏத்தரும் நீரள் என்றார்.
-
164. எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு
ஒண்ணறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்
கண் இருண்டு நெறி மல்கிக் கடைகுழன்ற கருங் குழல்கள்
வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே.
விளக்கம் : இருண்டு - இருள. குழல், மயிர் மாத்திரையாய் ஐவகையையும் உணர்த்தலிற் பன்மை கூறினார். கண் - இடமாக்கி, கருங்குழல் - கொடிய குழல் என்றும் ஆம். குழன்றும் பாடம்.
-
165. குழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
அழகுகொள் சிறுநுதலும் அணி வட்ட மதி முகமும்
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய்த் தூமுறுவல்
ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே.
விளக்கம் : இளமை - ஈண்டுக் குழவிப்பருவம் ஒழிந்ததன் மேற்று. இளமையுந் தருவதோ? (கலி.15) மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் - பசுவெண்டிங்கள் தோன்றி யாங்குக் - கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் (குறுந். 129) என்றார் பிறரும். உருக்குதல் : நுகர்தற்கு அவளும் ஆண்பாலாக விரும்புதல். தொழுதாற்கு என்றதற்கு நச்சினார்க்கினியர் தான் தொழப்பட்ட கணவனுக்கு என வேண்டாது உரைவிரித்தார். ஊடிய காலத்தே தன்னைத் தொழுகின்ற கணவன் வேண்டுகின்ற கூடலைத் தூமுறுவலே உடன்பாடுணர்த்துமாற்றான் அளித்தலின் தொழுதாற்கு வரங்கொடுக்குந் தூமுறுவல் என்றார். தொழுவோன் வேண்டுவதெல்லாம் வரமே ஆகலின் வரம் என்றார்.
-
166. வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா
நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க்
கண் கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல்
பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே.
விளக்கம் : வனப்பிகந்து வார்ந்தொழுக என்பதூஉம் பாடம்.
-
167. சேல் அனைய சில்லரிய கடை சிவந்து கரு மணி அம்
பால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும்
மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே
போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே.
விளக்கம் : (சேல் உவமையாகவும் கயல் அடைமொழியளவேயாகவும் நின்றன. கருமணி, பால்: உவமையாகு பெயர்கள்.) கன்னியாதலின் மாலுறுப்ப என்றார், மகிழ்செய்வ-கணவனுக்கு மகிழ்செய்வ. இச் செய்யுளில் கருமணி அம்பாலகத்துப் பதித்தன்ன படியவாய் என்ற தொடர்க்கு நீலமணியைப் பாலின் அகத்தே பதித்துவைத்தாற் போன்ற தன்மையவாய் என்று உரைகூறல் எளிதாயிருப்பவும் தாம் அங்ஙனம் கூறாமைக்குக் காரணம் கூறுவார். கருமணியைப் பாலிற் பதித்தால் பால்நிறங் கெடுமென் றுணர்க என்று கூறினர். இதனால் அவ்வுரையாசிரியரின் நுண்மாணுழைபுலம் உணரப்படும். பத்தினிப் பெண்டிர் பிறர்நெஞ்சு புகார் என்பது கருதி கன்னியாதலின் மாலுறுப்ப என்றார் என்று கூறும் நயமும் உணர்க.
-
168. மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு
உயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உரு அமைந்த
செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும்
வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே.
விளக்கம் : வாட்டு ஆயின், வாட்டின காது என்க. காதும் என்ற உம்மை இறந்தது தழீஇயிற்று.
குண்டலமும் என்ற உம்மையால் தோடு கொள்ளப்பட்டது.
செகுத்து என்னும் வினைக்கேற்ப அழகினை உயிர் என்றார்.
-
169. ஈனாத இளங் கமுகின் மரகத மணிக் கண்ணும்
ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததூஉம்
தான் ஆகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன
கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே.
விளக்கம் : கோட்புகாத (குலையீனாத) கன்னிக் கமுகுவரையிற்கும் நெய்ப்பிற்கும், மணி திரட்சிக்கும், நிறத்திற்கும் உவமம். உதயகிரியிற் சிந்துர அருவி வீழ்ந்த சிந்தூராகரத்திற் பதினாறு சதுர்யுகம் சிவப்பேறின முழு மாணிக்கம் இருளைக் கெடுத்தலின், இருள்பருகு மணி என்றார். இருளும் தாமரையும் மயிர்க்கும் முகத்திற்கும் உவமம். கான் - மணம்.
-
170. மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு
அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமைத் தோள்
துணிகதிர் வளை முன் கைத் தொகுவிரல் செங் காந்தள்
மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே.
விளக்கம் : பஞ்சணை மென்மைக்கும் நிறத்திற்கும் உவமம். அமை திரட்சிக்கும் நெய்ப்பிற்கும் உவமம். துணிதல் - தெளிதல். போழ்ந்தவும் வான் முத்தமும் பாடம்.
-
171. தாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல
மா மணி தாபித்தன போல் மனம் பருகு கருங் கண்ண
ஏம் உற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
ஆம் அணங்கு குடி இருந்து அஞ் சுணங்கு பரந்தனவே.
விளக்கம் : தாமச் செப்பிணை எனவே முலையாம். இனி, பூஞ் செப்பாக்கின் சினையிற் கூறும் முதலறி கிளவியும் ஆம் (சினையாகு பெயர்; பூமாலைக்கு ஆயினதால்) ஆம்அணங்கு - மேல் ஆகக்கடவ வருத்தமுமாம், (கதையை யுட்கொண்டு)
-
172. அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்
கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை
உண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே.
விளக்கம் : கங்கை - குலந்தூய்மைக்குக் கூறினார்.
இவ்வழகிய செய்யுளின் கருத்தைக் கம்பநாடர் தங்காவியத்தே,
பல்லியல் நெறியிற் பார்க்கும் பரம்பொரு ளென்ன யார்க்கும்
இல்லையுண் டென்ன நின்ற இடையினுக் கிடுக்கண் செய்தார் (கம்ப.கோலங்.12)
-
173. மன்நாக இணைப் படமும் தேர்த் தட்டு மதி மயக்கிப்
பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்
கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று
இன் அரத்தப் பட்டசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே.
விளக்கம் : கொன் - விடியற்காலம். கொன்வரல் வாழ்க்கை (புறநா.379-11) போல. இந்திரற்கும்: உம்: உயர்வு சிறப்பு.
-
174. வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னி
வாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சி
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து
மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே.
விளக்கம் : வெருட்டி: (துடைகளை உணர்த்தியதாற்) பெயர். மற்று: வினைமாற்று. செம்பஞ்சி: பஞ்சி மாத்திரை; அரக்கு உண் என நிறங்கூறினதால். பொன் தன்னிடத்தே அடக்கின மணி. மகரம்: உவமையாகுபெயர். (குறங்கு செறி: ஓர் அணிகலன்.) திரண்ட என்பது பாடமாயின் பெயராம்.
-
175. பக்கத்தால் கவிழிய வாய் மேல் பிறங்காப் பாண்டிலா
ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந் தாளும்
மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே.
விளக்கம் : (நிகர் அமைந்த என்பதற்கு உவமையில்லாத என்பது வலிந்துகொள்ளும் பொருளாகும்.)
-
176. ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று
நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச்
சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்
வாடாத காம்பே போல் கணைக் காலின் வனப்பினவே.
விளக்கம் : தேவி நிறத்திற்கு உவமை பதுமராகமாயினும், மயிர்கள் பெருகியதனால், காம்பு உவமையாயிற்று. இனி, கணைக்காலின் வனப்பு இன்ன என்றுமாம் (இன்னஎன வருவித்தல் வேண்டும்). அகன்று - பெருகி. நிகரமைந்த - சமமாகவுள்ள. சேடு - பெருமை. ஆவநாழிகை - அம்புக்கூடு (அம்பறாத்தூணி) வாடாத காம்பு - பச்சை மூங்கில்.
-
177. பசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப
நயந்து எரி பொன் சிலம்பு முத்தரி பெய்து அகம் நக
இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்
அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே.
விளக்கம் : பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை, தவழ்பவை தாமும் அவற்றுஓ ரன்ன (தொல்.மரபு.4.5.) என்றார். பாடலைப்ப என்பதனைப் பரடலைப்ப என்று கோடலே பொருந்தும். கிண்கிணியும் பாடகமும் அழகுக்கிட்டனவாகவும் அலைத்தல் கண்டு நயந்தெரி சிலம்பு (அவற்றை இகழ்ந்து) அகநக என்றமை உணர்ந்தின்புறுக.
-
178. அரக்கு இயல் செங் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப்
பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு
ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித்
திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே.
விளக்கம் : குலிகம் ஊட்டின அகவிதழ் செம்பஞ் சூட்டியதற்கு உவமம்.
-
179. என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி
இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி
ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்
மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே.
விளக்கம் : ஏழடியென்றல் மரபாயிருக்க ஒன்பதின்சாண் என்றது ஒரு காதம் என்னும் (மோனை) எழுத்தை நோக்கி. தம்மிடம் வந்த பெரியோர்க்கு வழிவிடுதற்குச் செல்லுங் குறைந்த தொலைவுஏழடி யென்பர். இதனால் சப்தபரமஸ்தானம்பெறுவரென்பது சைன நூற்கொள்கை.
சச்சந்தன் விசயையை மணத்தல்
-
180. இவ் உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து
அவ் உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்துக்
கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்துக் காதல் நீர்
செவ்விதில் தெளித்து ஆனாக் காமப் பூச் சிதறினான்.
விளக்கம் : இவன் எழுதிப் பிரதிட்டித்தான். இலக்கு - குறித்துப் பார்த்தல். இருந்து இலேகித்து என்றும் பாடம். இலேகித்து - எழுதி. இத்தகைய அழகியாகிய விசயையை (162) (நல்லூழ் நடத்தலாலே) சச்சந்தன் நெஞ்சு பொருந்தக் காதலிப்பானாயினன் என்பது கருத்து.
-
181. மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல்
தையலாள் நெடுந் தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்தன்
ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான்
மொய் அறாக் களியானை முழங்கித் தேன் இமிர் தாரான்.
விளக்கம் : மழலை - எக்காலத்திற்குங் கூறுப.
-
182. வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம்
உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள்
பெண்டிர் தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே.
விளக்கம் : பெயர் பேரென மருவிற்று (களிற்றுழவன் - களிற்றால் (போர்த்) தொழில் செய்வோன்.) விசயை - வெற்றியுடையோள். பெண்மையானும் அழகானும் உலகிலுள்ள மகளிரை எல்லாம் வென்றவள் என்பதுபற்றி விசயை என்னும் பெயர் பெற்றனள் என்பது கருத்து.
-
183. அரு மணி மரகதத்து அங் கண் நாறிய
எரி நிறப் பொன் இதழ் ஏந்து தாமரைத்
திருமகள் இவள் எனத் திலக வெண் குடைப்
பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே.
விளக்கம் : திலகம் - மேலாதல். திருஉவமம், வடிவிற்கும் நல்வினையுடையோனிடத்து ஏகுந்துணையும் பொதுவாய் இருத்தற்கும். இமவானில் மரகதப் பாறையில் பதுமை என்னும் கயத்தில் பொற்றாமரை மலரின்கண் திருமகள் தோன்றினள் என்பது ஆருகதர் கொள்கை. அங்கண்: உலகறி சுட்டு, நாறுதல் - தோன்றுதல். பெருமகன் என்றது விதைய மன்னனை.
-
184. கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர்
சிலம்புரி திருந்து அடி பரவச் செல்பவள்
வலம்புரி சலஞ்சலம் வளை இயது ஒத்தனள்
குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள்.
விளக்கம் : சிலம்பு புரி என்பது சிலம்புரி என விகாரப்பட்டது. (சலஞ்சலம்: ஆயிரம் வலம்புரிச்சங்குகள் சூழ இருக்கும் சங்கு.) கலம் - ஈண்டு மேகலை. தவ்வையர் என்றது - செவிலியர் மக்களாகிய தமக்கைமார்களை. இவர்க்கு வலம்புரிச் சங்கங்கள் உவமை. சலஞ்சலம்: விசயைக்கு உவமை.
-
185. இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ங் குழல்
மென் மலர்க் கோதை தன் முலைகள் வீங்கலின்
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே
கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே.
விளக்கம் : மின் நடுக்குறும் என்றும் பாடம். என்ப : அசை.
-
186. முந்து நாம் கூறிய மூரித் தானை அக்
கந்து கொல் கடாக் களி யானை மன்னவன்
பைந்தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல்
தந்தை மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே.
-
187. மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும்
அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில்
பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே.
விளக்கம் : ஆக்கம் கிளவியாக்கம் என்புழிப்போல (அமைத்துக் கொள்ளுதல் என்னும் பொருளில்) நின்றது; அவள் முதிர்ச்சியும் ஆம். கருமம் - விசயையின் தமையனாகிய கோவிந்தனுக்குச் சச்சந்தன் துணையாதல். பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே (தொல் களவு-14) என்பதனான் ஒப்பும் பெருந்திணைப் பாற்படும் கந்தருவமாமாறு பெரும்பொருளான் உணர்க (பெரும்பொருள் என்பது நூலாக இருக்கலாம்.)
சச்சந்தனும் விசயையும் இன்பந்துய்த்தல்
-
188. பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடுங் குன்று அனானும்
அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்
சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே.
விளக்கம் : கொடி என்றார், குன்று மறையப் படர்ந்து கேடுபிறப்பித்தலின், அழுத்த இலக்கமாய். காட்சியும் நிலையும் முயக்கமும் கூறி அவற்றிற்கு உவமை மேற் கூறுகின்றார். (அமிர்தனாளும் குன்றனானும் என்றது காட்சி: அனங்கனுக்கிலக்கமாகி என்றது நிலை; இயைந்தனர் என்றது முயக்கம்.) இலக்கம் - வில்வித்தை கற்கும் மாணவர் அம்பைக் குறிபார்த்துத் தைத்தற்பொருட்டு நடப்படுவதொரு நார்மரம். அவர்கள் மணம்நிகழ்வதற்கு முன்னர் மிகமிகக் காமவேகத்தாலே துன்புற்றனர் என்பது அனங்கனுக்கு அம்புகொண்டழுத்த இலக்கமாகி என்றதன் கருத்தென்க.
-
189. காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார்
மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்
ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும்
தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார்.
விளக்கம் : காதல் - எல்லாப் பொருளையும் நுகர்தற்குச் செல்லும் வேட்கை. காமபூமிதானப்பயனாற்பெறும் போகபூமி, உம்மை (உயர்வு) சிறப்பு. ஆதரம் பெருகும் அன்பாவது புணர்வதன் முன்னும் பின்னும் ஒருதன்மைத்தாய்ச் செயற்கையால் மிகும் அன்பு, அன்னம்: புணர்ச்சியால் மெய்யுருகும் மென்மைக்கு உவமம். பலரும், துணைபுணர் அன்னத்தின்தூவி (கலி. 72,சிலப்.3-66) என்று, புணர்ச்சியால் தூவிக்கு மென்மை பிறக்கும் என்றார். ஒத்தும் என்பதனை முன்னும் பின்னும் கூட்டுக. இவ்வெச்சத்தைத் தீதிலாரில் தீதின்மையோடு முடிக்க. தீதிலாத் திளைப்பிற் பாடமாயின் ஆமானை யொத்தும் தீதிலா மாதராரும் களிறனானும் என்க. ஆமான் நக்குங்காற் பிறக்கும் இனிமையே ஈண்டு உவமம். ஏகாரம் (செல்வமே) தேற்றம். ஆமான் செல்வம் என்பதற்கு ஆமானின் திளைப்புச் செல்வம் எனப்பொருள் கொண்டு ஆற்றொழுக்காகப் பொருள்கோடலாலும் இங்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் கிடைத்தலை உணர்க.
-
190. தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில்
பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகியிட்டான்
மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்ட
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள்.
விளக்கம் : வாங்கிப்பருகல் - அவன் காட்டக்கண்டு பருகியிடுதல்: ஒருசொல். இதனால் அதர பானமும் அல்குற் பானமும் கூறி மேல் இவற்றிற்கு உவமை கூறுகின்றார்.
-
191. பவழவாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்
கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்
தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூ அது ஆக
உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான்.
விளக்கம் : இவை என்றது கரும்பையும் தாமரைப் பூவையும்; கரும்புவமை நெருக்கி நீர் நுகர்தற்கு. பூவதாக - பூவினது தன்மை எக்காலமும் உண்டாக - இது வேறுபாடின்மையின் வேறுபடவந்த உவமமாயிற்று; எனவே சீவக. 218. உரை. வேலினானும் என்றது களிறுபோல வன்மையுடையோனும் என்றவாறு. உம்மை: உயர்வு சிறப்பு. செவ்வி குலையாதிருக்க நுகர்வதொரு வண்டு: இல்பொருளுவமை.
-
192. பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல்
களிக் கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள்
ஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள்
அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான்.
விளக்கம் : பளிக்குப் பாறையை அடுத்த பவழப்பாவை இவளது தன்மை யெனத் திகழும் சாயல். ஈண்டு ஒளியது மென்மை; இது செயற்கை நலம். இதற்கு அடுத்தது காட்டும் பளிங்கைப் (குறள்,70) பவழம் தன் தன்மையாக்கினாற்போல, அடுத்த மகளிர் தன்மையனாம் அரசனை இவளும் தன் தன்மையே ஆக்கிக்கொண்டாளெனக் கதை கருதிய நயமுமுண்டு.பொருவபோன்று பொருவதென விரிக்க. கொண்ட கனி. அயிறல் - உண்டல். உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலும் மரபே (தொல்.பொருளியல் 19) தோணலமுண்டு துறக்கப்பட்டோர் (கலி.23) என்றார் பிறரும். பழமும் வாவலும் வடுப்பட நுகர்தற்குவமை.
-
193. துறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும்
அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
பெறு நிலம் பிணித்திடப் பெரியர் வைகினார்.
விளக்கம் : அமிர்தம் - அடிசிலும் பானமும் முதலியன. இனி, அறு நிலத்தமிர்தம் - அறுசுவையுமாம்; ஆறுகாலத்திற்கு (இளவேனில் முதலியன) உரிய பானமும் ஆம்.
-
194. துடித்தலைக் கருங் குழல் சுரும்பு உண் கோதை தன்
அடித்தலைச் சிலம்பினோடு அரவ மேகலை
வடித்தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமோடு
அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே.
விளக்கம் : அவன் ஊறில் இன்பம் என்றும் பாடம். துடி - ஏலம். வடித்தலைக்கண் - ஒப்பினால் வடுவகிரிடத்தே நிற்குங் கண்.
-
195. இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத்
தழை வளர் மது மலர் தயங்கு பூஞ்சிகைக்
குழை முகக் கொடியொடு குருதி வேலினான்
மழை முகில் மாரியின் வைகும் என்பவே.
விளக்கம் : முலை முதலியவற்றையுடைய கொடி: இல்பொருளுவமை.
-
196. படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும்
கொடிவளர் குவி முலைத் தடத்துள் வைகியும்
இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே.
விளக்கம் : மாந்துதல் - பருகுதல். இடி - கூலங்களை இடித்த மா. கொடியினும் என்புழி கொடி நூலிற்கொடி. மணக்கிழமை என்றது, புணர்ச்சியின்பப்பேற்றினை.
-
197. கப்புரப் பசுந்திரை கதிர் செய் மா மணிச்
செப்பொடு சிலதியர் ஏந்தத் தீவிய
துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும்
ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே.
விளக்கம் : கப்புரம் : பாகதம் (கருப்பூரம் என்னும் வடமொழிச் சிதைவு.) காமவல்லியும்: உம்: உயர்வு சிறப்பு. வேறு கருத்துச் செல்லாமல் தன்னையே கருதுவித்தலின் பாவை என்றார். இதற்கு முன்பு உலகியல் மணங் கூறிக் காமமிகுதியாற் கெடுகின்றமை மேற்கூறுகின்றார். பசுந்திரை - பசிய வெற்றிலைச் சுருள். சுருட்டப்படுதலால் (திரைக்கப் படுதலால்) திரை என்பது அதற்குப் பெயராயிற்று. சிலதியர் - பணி மகளிர். தீவிய-இனிய, துப்பு - நுகர்வன. கற்பகமரத்தே படர்தற்கு அலமருகின்ற காமவல்லி போல்வாள் என்பது கருத்து. பாவை - கொல்லிப்பாவை. இது தன்னைக் கண்டாரை அப்பாற் போகவிடாமல் கவர்ந்து மயக்குதல்பற்றி உவமையாக எடுத்தார் என்பார் நச்சினார்க்கினியர். வேறு கருத்துட் செல்லாமல் தன்னையே கருதுவித்தலின் பாவையென்றார் என்றார்.
-
198. மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்
பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்
விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி
ஒளி நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே.
விளக்கம் : காவலின்: இன்: (ஐந்தனுருபு) நீக்கப்பொருட்டு. உரோணி: உரோகிணி: விகாரம்: அவ்வுரோகிணி காரணத்தின் இருடி சபிக்க மதிதேய்ந்ததொரு கதை. பேரருள் என்றது அளவிறந்த கண்ணோட்டத்தை. உவமைக்குக் கூறிய இருள்கொள என்பதை மண்ணகம் இருள் கொள என்றுங் கூட்டுக.
-
199. குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணி னாளும்
தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள்
திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்குற்ற வண்ணம்
பைங் கதிர் மதியில் தெள்ளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே.
விளக்கம் : இதன் கருத்து: இச்செய்யுட்கு அங்கமாகிய (நாடு, நகர் கோயிற் சிறப்பு முதலிய) வருணனைகள் கூறி அதற்குரிய தலைவனை நாட்டுகின்றார், இத்துணையும் அவன் தோன்றற்குக் காரணங் கூறி அவற்கு முற்பிறப்பில் அன்னப் பார்ப்பைப் பிரித்த தீவினை வந்து குரவரைப் பிரித்தலுங் கூறவேண்டுதலின், திரு இழுக்குற்றமை முற்கூறுகின்றாரென்றுணர்க. திருஇழுக்குறுதலாவது கட்டியங்காரற்கு அரசளித்தலும் அமைச்சர்சொற் கேளாமையும். (சீவகன் முற்பிறப்பு வரலாறு இந்நூலின் 1856 ஆஞ்செய்யுள் முதலியவற்றால் உணர்க). பைங்கதிர் மதியின் திருவிழுக் குற்ற என மாறுக. மதி - தேய் பருவத்துத் திங்கள். இனி, பைங்கதிர் மதிஎன்பதற்கு அறிவுஎன்றே பொருள் கோடல் அமையும். ஆசிரியர் பரிமேலழகர் இப்பொருளே கொண்டனர். இதனை அவர் ஒளிதிகழ் உத்தி உருகெழுநாகம் (12-4) எனவரும் பரிபாடல் அடிக்கு வாளா நாகம் மரம் என்றே பொருள் கூறி, நெட்டிலை வஞ்சிக்கோ பழம் பாடல் என்புழியும் புல்லிலைவஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை (புறநா.387) என்புழியும் மரவிசேடத்திற்குள்ளன அதன் பெயர்த்தாய ஊரின்கண்ணும் திங்கள் வெண்குடையினாற்குத் திருவிழுக்குற்ற வண்ணம்பைங்கதிர்மதியிற் றெள்ளிப்பகர்ந்தெடுத்துரைத்தும் என்புழிச் சந்திரற்குள்ளது அவன் பெயர்த்தாய அறிவின்கண்ணும் ஏற்றப்பட்டாற் போல் என்று கூறுதலான் உணர்க.
சச்சந்தன், கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு விசயையோடு இன்புறல்
-
200. களிறு அனான் அமைச்சர் தம்முள் கட்டியங் காரன் என்பான்
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள்
பிளிறு வார் முரசின் சாற்றிப் பெரும் சிறப்பு இயற்றி வேந்தன்
வெளிறு இலாக் கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான்.
விளக்கம் : (நச்சினார்க்கினியர் ஒளிறுவாள் தடக்கையான் கட்டியங்காரனாகவும், வெளிறிலாக் கேள்வியான் நிமித்தகன்என்னும் அமைச்சனாகவுங் கொண்டு மாட்டேற்றிப் பொருள் கூறுவர்.) அவர் கூறுவது: கோதனான் (சீவக 240) என்றும் கரிமாலை நெஞ்சினான் (சீவக 294) என்றும் கல்லா மந்திரி (சீவக. 345) என்றும் மேற்கூறலின், கட்டியங்காரனை, வெளிறிலாக் கேள்வியான் எனலாகாது; இனி இகழ்ச்சிக்குறிப்பு என்பாருமுளர் என்பது. இக்கூற்றால் வெளிறிலாக் கேள்வியானைக் கட்டியங்காரன் எனவே இவருக்கு முந்திய உரையாசிரியர்கள் கூறினர் என்றும் அது இகழ்ச்சிக் குறிப்பு என்று கருதினர் என்றும் அறியலாம். நிமித்திகன் என்ற பெயருடைய மந்திரி யொருவனைப் பின்னர் ஓர் நிமித்திகன் (சீவக 204) எனக் கூறுதலானும், இங்குப்பெயர்கூறாமையானும், ஆற்றொழுக்காகப் பொருள் கோடற் கியலாவழியே மாட்டேறுவேண்டுமாதலானும் கட்டியங்காரனெனக் கோடலே தக்கது.) மதச்செருக்காற் பாகன்தோட்டியை நீவுமாறு போலக்காமக்களிப் பால்தன் அமைச்சர் கூற்றைக் கடத்தல்நோக்கிக், களிறனான் என்றார். நிமித்திகன் கருமமே கூறுதலும் கட்டியங்காரன் அரசன் கருத்திற்கேற்ப ஒழுகுதலும் இரண்டற்குங் காரணம்.
-
201. அசைவு இலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி
வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள்
விசையையைப் பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம்
இசை படக் காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான்.
விளக்கம் : அரிஞ்சயன்: விசயை பாட்டன். வசையிலாள்: வினையெச்சமுற்று. வேண்டும் என்பது உம்மீற்றான் வந்ததோர் ஏவல் கண்ணிய வியங்கோள்: வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் (புறநா.367) என்றார் பிறரும்.
-
202. அண்ணல் தான் உரைப்பக் கேட்டே அடுகளிற்று எருத்தின் இட்ட
வண்ணப் பூந் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு எனக் கமழும் கண்ணி
மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான்.
விளக்கம் : தவிசு - கழுத்து மெத்தை. மண் எழுவனைய தோள் பாடமாயின், மண்ணிய எழு ஆம்; ஆவுதி மண்ணி (மதுரைக். 494) என்றாற்போல, தோளாய் என்பதும் பாடம். இச் செய்யுட்குநச்சினார்க்கினியர், தன் தலைவன்பால் ஒப்பற்ற அன்புடையதாய் அவனால் செயப்படுந் துன்பத்தையும் பொருட்படுத்தாமல் எறிந்த வேல் மெய்யதா வால்குழைக்கும் நாயினையே தனக்கு உவமை கூறிக்கொண்டான் கட்டியங்காரன்; சச்சந்தன் தன்னை ஐயுறாமைப் பொருட்டென்பது பட வேறோரூர்தி கூறாது ஞமலியைக் கூறினான். அவன் அயிராது தருதற்கு என்று கூறியது ஆற்றவும் இன்பமுடைத்து.
-
203. எழுதரு பருதி மார்பன் இற்றென இசைத்த லோடும்
தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய்
கழி பெரும் காதலாள்கண் கழி நலம் பெறுக வையம்
பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான்.
விளக்கம் : தன் நினைவை அவன் காரியம்போற் கூறினான். மார்பன்: சச்சந்தன். இற்று - இத்தன்மைத்து. வையம் இசைபடக் காத்தல் வேண்டும் (201) என்ற மன்னனுக்கு வையம் பழிபடா வகையிற் காக்கும் படுநுகம் பூண்பல் என்றதன்கண் கட்டியங்காரன் தன்னடக்கமும் நின்பெருட்டே இச் சுமையைப் பூண யான் இசையா நின்றேன் என்பதுந் தோன்றுதல் உணர்க.
-
204. வலம் புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகிக்
கலந்தனன் சேனை காவல் கட்டியங் காரன் என்ன
உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான்.
விளக்கம் : (நச்சினார்க்கினியர் ஓர் என்பதற்கு நீயே ஆராய்ந்து பார் என்று பொருள் கூறுவர். அதற்கு முடிபு, என்று ஓர் என்பதனை ஓர் என்று என மாற்ற வேண்டும். பொறித்த எனப் பிறவினையாற் கூறினார், அயன் படைத்தல் நோக்கி. மத: (வலியை) விசேடித்த உரிச்சொல். உலம் வளர்க்குந் தோள். அரசற்குரிய அங்கம் ஆறனுள் படையே தலைசிறந்தது ஆதல்பற்றி அரசன் ஏவல் பெற்றவுடன் கட்டியங்காரன் படைஞரை வயப்படுத்து தற்றொழிலையே முதற்கண் மேற்கொண்டான் என்பது போதரத்தேவர் மதவலி விடுப்ப ஏகிக் கலந்தனன் சேனை காவல் கட்டியங்காரன் என்றோதுதல் உணர்க. மதவலி: அன்மொழித்தொகை; சச்சந்தன். நீ என்றது அரசுரிமையுடைய நீ என்பதும் ஒருவன் என்றது ஏதிலான் ஒருவன் என்பதும்பட நின்றமை நினைக.
-
205. எனக்கு உயிர் என்னப் பட்டான் என் அலால் பிறரை இல்லான்
முனைத் திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான்
தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும்
மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான்.
விளக்கம் : என்னலாற் பிறரை யில்லான்: இன்மை உடைமைக்கு மறுதலை. வென்றான் எனவே நடத்துதற்குரியவன் என்றான். நன்மையுந் தீமையும் கருதிச் செய்வ எனப் பன்மையாற் கூறினார்.
-
206. காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளிக் கேண்மோ
நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா
பூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும்
பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான்.
விளக்கம் : நாவலர் - அமைச்சர்; கழுமி - மயங்கி. அமைச்சர் சொற்கேட்டால் அரசனுக்குத் தீங்கு வாராதென்பது. இஃது உலகியலாற் கூறினான். மேற்கூறுவன வெல்லாம் போகத்தையே நோக்குதலின், இதுவென ஒருமையாற் கூறினான்.
-
207. பெரும் பெயர்ப் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான்
அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற
விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றித்
திருந்தினாற்கு இன்று காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே.
விளக்கம் : பெயர் - புகழ். அன்றே; ஏவினா. முறைசெய்யாமையின் தன்னிலை யிழந்தான். தோற்றி என்றும் பாடம். நான்முகம் தோன்றியது. பிரமனுக்கு அரம்பையரிடத்துக் காமம் உண்டாயிற்று. அவர்கள் இணங்காமையால், அவர்களை அடைதற்குரிய இந்திர பதவியை வேட்டுத் தவம் புரிந்தான். மூன்றரைக் கோடி ஆண்டுகள் கடந்தன. இந்திரன் தன் பதவிக்கு வேறொருவன் வர விருப்ப மில்லாமையாற் பிரமன் தவத்தை அழிக்கத் திலோத்தமை என்னும் அரம்பையை அனுப்பினான். அவள் பிரமன் எதிரில் வந்து ஆடல் பாடலால் ஒருபுறம் நின்று மயக்கினாள். பிரமன் விழித்துப் பார்த்தான். இவள் மற்றொரு புறம் சென்று ஆடினாள். அப்புறம் திரும்பினாற் பிறதவமுனிவர்கள் இகழ்வார்கள் என்று நினைத்துத் தன் ஒரு கோடி ஆண்டின் தவச்சிறப்பால் அவளிருந்த பக்கம் ஒரு முகம் உண்டாக்கி நோக்கினான். அவள் மறுபுறம் சென்றாள். அங்கும், மற்றொரு புறத்திலும் அவ்வாறே மற்றும் இரண்டு கோடி ஆண்டின் தவச்சிறப்பால் இரு முகமும் உண்டாக்கிக்கொண்டு இயற்கையான ஒரு முகத்துடன் நான் முகனாகி அவள் சென்ற திசையெலாம் நோக்கினான். அவள் வானிலே நின்று ஆடினாள். அரைக்கோடி ஆண்டின் தவச்சிறப்பால் மேனோக்கிய முகமொன்றும் அமைத்துக்கொண்டான். அவள் மறைந்தாள். காமத்தை அடக்கவியலாத பிரமன் ஐம்முகங்களுடன் வானவழியே செல்லும் தெய்வ மங்கையரை வலிதிற் பற்றித் துன்புறுத்தினான். வானவர் வேண்டுகோளாற் சதாசிவமூர்த்தி பிரமனுடைய மேனோக்கிய தலையைக் கிள்ளியெறிய, நான்முகனாகிய அவன் எல்லோராலும் பழிக்கப்பட்டுத் தன் பதவியையும் இழந்தான். இவ்வாறு தர்ம பரீட்சை என்னும் சைன நூலில் மூன்றாம் படலத்திற் கூறப்படுவதாக டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களின் பதிப்பிற் கூறப்படுகிறது. சைவ நூல்களில் இதற்கு வேறான கதைகள் கூறப்படுகின்றன.
-
208. கைம் மலர்க் காந்தள் வேலிக் கண மலை அரையன் மங்கை
மைம் மலர்க் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆகக்
கொய்ம் மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்குப்
பெய்ம் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே.
விளக்கம் : மைம்மலர்க் கோதை - நீலமலராற் செய்த கோதை; இறைவி: ஆகுபெயர். மாலை - அடையாளப்பூ. கண்ணி - சூடும்பூ. கண்ணி கார்நறுங் கொன்றை காமர்-வண்ண மார்பிற் றாருங் கொன்றை (புறநா.கடவுள் வாழ்த்து.) கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே (தொல். மரபு.79) என்றார். மலையரையன் மங்கை: மேனை. மலர்க்கோதை: பார்ப்பதி. மதிக்கண்ணியான்: சிவன்
-
209. நீல் நிற வண்ணன் அன்று நெடுந் துகில் கவர்ந்து தம் முன்
பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்
வேல் நிறத் தானை வேந்தே விரிபுனல் தொழுனை ஆற்றுள்
கோல் நிற வளையினார்க்குக் குருந்து அவன் ஒசித்தது என்றான்.
விளக்கம் : வேனிறம் - வேலினது விளக்கம். கோல் - திரட்சி. ஒசித்தது: மறைந்தது என்றுங் கூறுவர். நீலநிறம் - நீல்நிறம் என நின்றது. நீனிறவண்ணன்: கண்ணன். பானிறவண்ணன் - பலதேவன்.
-
210. காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே
வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து
ஈமம் சேர் மாலை போல இழித்திடப் பட்டது அன்றே
நாம வேல் தடக்கை வேந்தே நாம் இது தெரியின் என்றான்.
விளக்கம் : காமமே: ஏகாரம், பிரிநிலை. என்று - என்ன. வாமனார்: புத்தன். ஆர் விகுதி, இகழ்ச்சிக் குறிப்பு. வருந்தினீர் - வினா. ஈமம் - சுடுகாடு. நாமம் - அச்சம்.
-
211. படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற
வடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப் பறை அறைந்து தூற்றி
இடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம்
நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான்.
விளக்கம் : போலும்: ஒப்பில் போலி. (ஓம்பலே நல்லது என மாறுக.) பஞ்சவர்: ஐவர், பாண்டவர். அன்று: பண்டறி சுட்டு.
-
212. ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங் கணனானும்
கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும்
பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும்
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திர தத்தன் என்பான்.
விளக்கம் : அவலம் : அரசன் கொலை செய்யப்படல். (நிமித்திகன் கூறியவற்றை அரசன் கேளாமையின் உருத்திரதத்தன் இங்ஙனம் உரைத்தான்.) ஆர் அறிவு - நிரம்பிய அறிவு. கூர்அறிவு - கூர்த்த அறிவு. நீயும் என்புழி உம்மை சிறப்பு. பிணையனாள் - பெண்மான் போன்ற விசயை. ஓர் அறிவு என்றது காமமே கன்றிநின்ற இவ்வோரறிவே என்பதுபட நின்றது.
-
213. அளந்து தாம் கொண்டு காத்த அருந் தவம் உடைய நீரார்க்கு
அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான்
விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான்.
விளக்கம் : போகமும் என்னும் உம்மை கூறிற்றிலர், செஞ்சொலாய் முற்படக் கிடத்தலின். நிலம்திரு நீங்கும் (204) என நிமித்திகன் கூறிய செல்வ நிலையாமையையும், உருத்திரதத்தன் கூறிய யாக்கை நிலையாமையையும் நிலையாமை என ஒருமையாக்கி, அது என ஒருமையாற் கூறினான். உரையல் என்றான் நிமித்திகனை நோக்கி, அவன் உரியன் ஆதலின்.
-
214. மூரித் தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கிப்
பாரித்தேன் தரும நுண்நூல் வழக்கு அது ஆதல் கண்டே
வேரித் தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம்
பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான்.
விளக்கம் : மூரி பண்பு மாத்திரம் உணர்த்தாது பெயராதலின், வேற்றுமைத் தொகை. முனியினும் என்பது எதிர்காலம் உணர்த்தும் எச்சம்; உம்மை ஐயம். இளைய கொங்கை என்று இளமை நிலையாமை கூறினான். அரசன் போவென்னாமல் தானே போவேன் என்றல் நீதியன்மையின், துறவு உட்கோள் ஆயிற்று. இதனால் வெளிறிலாக் கேள்வியான் நிமித்திகனென நச்சினார்க்கினியர் கருதியது முற்கூறப்பட்டது. களிறனான் (சீவக.27) முதல் இத்துணையும் ஒரு தொடர். பாரித்தல் - மிக மிக விரித்துப் பேசுதல். தரும நுண்ணூல் என்றது திருக்குறளை. அதன்கண் கூறப்படுவது,
அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
என்பது.
-
215. இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான்
முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்
புனமா மலர் வேய் நறும் பூங் குழலாள்
மனமாம் நெறி ஓடிய மன்னவனே.
விளக்கம் : குழலாள் மனமாம் மன்னவன், நெறியோடிய மன்னவன் என இயைக்க. இனம் என்றது யான் முற்கூறிய தேவர் காமத்திற்கு இனம் என்றவாறு. எணான் - எண்ணான். பான்மை - ஊழ். ஈண்டுப் போகூழ். இச்செய்யுள் நூலாசிரியர் சச்சந்தனுக்கு இரங்கிக் கூறியது.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
என்றிரங்கினவாறு. நெறி - தனக்குரிய அரசியனெறி.
-
216. கலையார் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்
முலையார் தடமும் முனியாது படிந்து
உலையாத் திருவின் அமிர்து உண்டு ஒளிசேர்
மலையார் மணி மார்பன் மகிழ்ந்தனனே.
விளக்கம் : மலையார் : ஆர் : ஒத்த.
-
217. விரி மா மணி மாலை விளங்கு முடித்
திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய்
எரி மா மணி மார்பனும் ஏந்திழையும்
அரு மா மணி நாகரின் ஆயினரே.
விளக்கம் : காமவின்ப நுகர்ச்சியில் நாகர் சிறந்தவர் என்பதுபற்றி நாகரின் ஆயினர் என்றார். நாகநீள் நகரொடு போகம் மன்னும் புகார் (1.21-22) என்றார் இளங்கோவடிகளாரும்.
கருவுறுதலும், கனவு காணுதலும்
-
218. நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய்
உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன்
அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள்
கறை வேல் கணினாள் கனவு உற்றனளே.
விளக்கம் : தேன் நிறைதலும் மிக்க இளமையும் மாறாத தாமரை எனவே பதுமயோனியாம். உறவோன் உற - பிள்ளையார் (சீவகன்) அவதரிக்க. அறவு : தொழிற்பெயர். நாகிளந் தாமரை : ஒருபொருட் பன்மொழி. கணினாள் - கண்ணினாள். இருள் : இரவிற்கு ஆகுபெயர். கனா - குறியதன்கீழ் ஆக்குறுகி உகரமேற்றுக் கனவு என்றாயிற்று.
-
219. பஞ்சி அடிப் பவளத் துவர் வாய் அவள்
துஞ்சும் இடைக் கனவு மூன்று அவை தோன்றலின்
அஞ்சி நடுங்கினள் ஆய் இழை ஆயிடை
வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே.
விளக்கம் : எனவே (வைகறையிற் கண்டதால்) கடிதிற் பயக்குமாறாயின. இவை பிற்பயக்கும் கனவாதலின் பின்னும் நெஞ்சில் தோன்றின. கனா - ஈற்றாகாரம் குறுகிக் கன என நின்றது. விடிந்ததை: ஐ: சாரியை; வினைத்திரி சொல் என்பர் நச்சினார்க்கினியர் (சீவக. 223) ஆயிடை: சுட்டு நீண்டது.
விசயை, அருகப் பெருமானை வணங்குதல்
-
220. பண் கெழு மெல் விரலால் பணைத் தோளி தன்
கண் கழூஉச் செய்து கலை நலந் தாங்கி
விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய
வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள்.
விளக்கம் : பண்: (யாழ் நரம்புக்கு) காரிய ஆகுபெயர்; யாழொடு பயின்ற விரலும் (வந்தனை செய்தாள் என வருதலாற் கையை உணர்த்தியது கொண்டு) சினை ஆகுபெயர்.கழூஉச் செய்து, நல்ல, மரூஉச் செய்து (நாலடி. 246) என்பதுபோல நின்றது. விண்: (இட) ஆகுபெயர். தீவினையை வெல்லும் அறவாழி. தெய்வம் அஞ்சல் (தொல்-மெய்ப்.24) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரம், தன்குல தெய்வத்தை வணங்குதற்கு விதியாமாறு உணர்க. (தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழு தெழுவாள் என்பது தமிழ் மறையாதலின் இவ்வாறு நச்சினார்க்கினியர் விளங்கக் கூறினார்.)
விசயை சச்சந்தனை வணங்கி, தான் கண்ட மூன்று கனவுகளைக் கூறுதல்
-
221. இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு
எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி
வெம் பரி மான் நெடுந் தேர் மிகு தானை அத்
தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே.
விளக்கம் : எய்துக என்று: எய்து கென்று: அகரம் தொகுத்தல் விகாரம். பரிமான் - குதிரை. மான்: ன்: சாரியை. அ: உலகறி பொருண் மேற்று (உலகறி சுட்டு)
-
222. தான் அமர் காதலி தன்னொடு மா வலி
வானவர் போல் மகிழ்வு உற்ற பின் வார் நறும்
தேன் எனப் பால் எனச் சில் அமிர்து ஊற்று எனக்
கான் அமர் கோதை கனா மொழிகின்றாள்.
விளக்கம் : கனவு மூன்றுக்கும் தேன் முதலிய மூன்றும் உவமம்: பிண்டி.....வீழ்ந்தது (சீவக. 223) என்னும் மொழி, இவள் கூறுதலின் இனிதாய்ப் பின் தீங்கு விளைத்தலின் தேனுவமம்; ஆர்ந்தோர் வாயிற் றேனும் புளிக்கும் (குறுந்.354) என்றார் பிறரும். எண், முத்தணி மாலை (சீவக.223) என்ற சொல் குலந்தூய்மை கூறுதலிற் பாலுவமம். இவன் (சீவகன்) ஆக்கத்திற்கு ஊறும் அமிர்து உவமம்; இவன் ஆக்கம் அமுதுபோல் உயிர்களைக் காத்தலின்.
-
223. தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே.
விளக்கம் : முத்தணி மாலை - மாலையொத்த மாலை; அணி; மின்னணி நுண்ணிடை (சிற்.342) என்றாற்போல் உவமவுருபு, என்றது வெள்ளிய மாலையை, இது குலந்தூய்மை கூறிற்று; வெண்டாமரை மலர்த் தடங்கள் போலு, நங்குடி (சீவக.547) என்பர் மேலும்; முத்தமாலை யெனின், மேல், நறுமாலை (சீவக. 225), எண் கோதைத் தொகை (சீவக. 2607) என்றல் பொருந்தாது. வளர்ந்ததை: வினைத்திரி சொல்; உரைத்ததை (கலி.76) போல. மேலே, துளும்பு நலத்தாரோடு, (சீவக. 2889) என்றலின், முத்தணி மாலையைக் கனவிற் கண்டாள்; அது காரணம். இதனாற் சுற்றங் கெட்டபடியும் அரசன் கெட்டபடியுங் கூறினார். அது கதையிற் காண்க.
சச்சந்தன் கனவின் பயனைக் கூறத் தொடங்குதல்
-
224. வார் குழை வில் இட மா முடி தூக்குபு
கார் கெழு குன்று அனையான் கனவின் இயல்
பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து
ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான்.
விளக்கம் : அஃது அசோகு முறிந்தது கூறாமல் மாலையையும் முடியையும் இரண்டு கனவாகப் பிரித்தது.
-
225. நன்முடி நின் மகனாம் நறு மாலைகள்
அன்னவனால் அமரப்படும் தேவியர்
நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் எனப்
பின்னதனால் பயன் பேசலன் விட்டான்.
விளக்கம் : குருதிக் கோட்டுக் குஞ்சர நகரம் (சீவக. 2182) (அத்தினபுரம்) போல், முத்த மாலையை மாலையென்னும் பெயர் கருதி நறுமாலை என்றல் ஆகாமை யுணர்க; மாலையென்னும் பெயர் பொதுவாகலின்.
அசோகமரம் வீழ்ந்ததன் பயனைச் சச்சந்தன் கூற, விசயை துன்பம் கொள்ள, சச்சந்தன் ஆறுதல் கூறுதல்
-
226. இற்று அதனால் பயன் என் என ஏந்திழை
உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்
மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து
அற்றது ஓர் கோதையின் பொன் தொடி சோர்ந்தாள்.
விளக்கம் : உற்றதென இறந்த காலத்தாற் கூறினான், தெளிவு பற்றி; இல்லை, கனா முந்துறாத வினை (பழ.2) என்றலின், இன்னே, உதாசீனம் போல (விருப்பு வெறுப்பின்றிக் கூறியதுபோல) நின்றது.
-
227. காவி கடந்த கண்ணீரொடு காரிகை
ஆவி நடந்தது போன்று அணி மாழ்கப்
பாவி என் ஆவி வருத்துதியோ எனத்
தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான்.
விளக்கம் : தேவியை மெய்யை என இரண்டடித்தும் ஐயுருபு வருதல் (தொல் - வேற்றுமை மயங்-5) தெள்ளிது என்றதனான் முடியும்.
-
228. தண் மலர் மார்பு உறவே தழீஇயினான் அவள்
கண் மலர்த் தாள் கனவின் இயல் மெய் எனும்
பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு எனப்
பண் உரையால் பரவித் துயர் தீர்த்தான்.
விளக்கம் : ஏகாரம் : ஈற்றசை. ஓ : வியப்பு. (பண் உரை - கற்பனை மொழி.) மார்புறவே என்பதும் பாடம்.
-
229. காதலன் காதலினால் களித்து ஆய் மலர்க்
கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழத்
தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய
போது உகு மெல் அணைப் பூ மகள் சேர்ந்தாள்.
விசயை தாய்மையுறுதல்
-
230. பண் கனியப் பருகிப் பயன் நாடகம்
கண் கனியக் கவர்ந்து உண்டு சின்னாள் செல
விண் கனியக் கவின் வித்திய வேல் கணி
மண் கனிப்பான் வளரத் தளர் கின்றாள்.
விளக்கம் : விண்: ஆகுபெயர். வித்திய - பரவிய. குழவிப் பருவத்தாலும் அரசியலாலும் வீடுபேற்றாலும் மண்ணை உருக்குமவன்.
-
231. கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ்வாய் விளர்த்துக்
கண் பசலை பூத்த காமம்
விரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள்
பெய்து இருந்த பொன் செப்பே போல்
அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று
ஆய்ந்த அனிச்ச மாலை
பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல்
நங்கை நலம் தொலைந்ததே.
விளக்கம் : நுசுப்பு : உம் : சிறப்பும்மை.
சச்சந்தன் கவலையுறுதல்
-
232. தூம்பு உடை நெடுங் கை வேழம்
துற்றிய வெள்ளிலே போல்
தேம்புடை அலங்கல் மார்பில்
திருமகன் தமியன் ஆக
ஓம்படை ஒன்றும் செப்பாள்
திருமகள் ஒளித்து நீங்க
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு
அறிவு எனும் அமைச்சன் சொன்னான்.
விளக்கம் : வேழம் : விளவிற்கு வருவதொரு நோய்; குருதிக் கோட்டுக் குஞ்சர நகரம் (சீவக. 2182) போல வேழத்திற்குக் கை அடை. தேம்புதலுடைய திருமகன்; தேம்புதல் - கெடுதல்; தேம்பு - முதல் நிலைத்தொழிற் பெயர். புள்தேம்பப் புயல்மாறி (பட்.4) என்றார் பிறரும். தமியனாக - அரச வுரிமையை நீங்க. ஓம்படை ஒன்றும் செப்பாள். தான் பரிகாரம் சிறிதும் கூறாளாய். ஒளித்து நீங்க என்றார். ஆம்புடை: பிள்ளையார் (சீவகன்) பிழைப்பதொரு கூறுபாடு.
எந்திர ஊர்தியைச் செய்க என அறிவு என்னும் அமைச்சன் கூறல்
-
233. காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப் பட்ட
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்.
விளக்கம் : இவ்விரண்டு செய்யுளும் தேவிக்கும் அவள் கருவிற்கும் உய்தியை அளிக்கும் காரணமாக அவர்களின் ஊழ் சச்சந்தன் உள்ளத்தினூடே தூண்டி எழுப்பிய அவனுடைய நினைவுகள். இவற்றை ஆசிரியர் அவன் அறிவினை அமைச்சனாக உருவகித்துக் கூறும் அழகு ஆற்றவும் இனிது.
சச்சந்தன் தொழில் திறமிக்க ஒருவனை விசைப் பொறி ஒன்றைச் செய்க என அவனும் செய்தல்
-
234. அந்தரத்தார் மயனே என ஐயுறும்
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்
வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர்
எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான்.
விளக்கம் : இயற்றுமின் : ஒருமை பன்மை மயக்கம். ஊர்தி - ஏறப்படுவது. அந்தரத்தார் - தேவர். தந்திரம் - தொழில். தம: ஆறாவதன் பன்மையுருபு. நூல் - ஈண்டுச் சிற்ப நூல். வெந்திறலான் என்பதனைச் சச்சந்தன் எனினுமாம்.
-
235. பல் கிழியும் பயினும் துகில் நூலொடு
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே.
விளக்கம் : கிழி - சீலை. பயின் - பற்றுதற்குரியன. துகில்நூல் - வெள்ளை நூல்.
-
236. பீலி நல் மாமயிலும் பிறிது ஆக்கிய
கோல நல் மாமயிலும் கொடு சென்றவன்
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான்.
விளக்கம் : மயிற்பொறி என்பது தோன்ற ஆக்கிய கோல நன்மயில் என்றார். பீலியை இரண்டற்கும் ஏற்றுக.
-
237. நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என
மின் நெறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர்
பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன்.
விளக்கம் : மின்எறி - ஒளி வீசும் என்றும் ஆம். நன்று நன்றென்னும் அடுக்கு வியப்பாற் றோன்றியது. இது நன்னெறி நூல்நயம் தான் என மாறுக. கொல்நெறி - கொல்லுத் தொழில்.
மயிலாகிய வானவூர்தியை இயக்க சச்சந்தன் கற்றுத்தர விசயை கற்றுக் கொள்ளுதல்
-
238. ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்
பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள்.
விளக்கம் : பாட்டு ஆரோசையாலே மெல்ல மெல்ல உயர்ந்து செல்லுமாறுபோல என்க. இதனால் அமரோசைபோல மெல்ல இறக்கி என்பதும் கொள்க.
-
239. பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய
புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை
கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே.
விளக்கம் : கால் பரப்பிற் கெடும். பண் : யாழ் நரம்பிற்கு ஆகுபெயர். பாவை : விசயை.
சச்சந்தனைக் கொல்லக் கட்டியக்காரன் எண்ணிக் கூறுதல்
-
240. காதி வேல் வல கட்டியங் காரனும்
நீதியால் நிலம் கொண்டபின் நீதி நூல்
ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான்
கோது செய் குணக் கோதினுள் கோது அனான்.
விளக்கம் : (கட்டிங்காரனும்) : உம்மை இழிவு சிறப்பு. கோது செய் குணக்கோது - நூல்கள் பயனின்றாகக் கூறிய குணங்களிற்கோது; அஃதாவது செய்ந்நன்றிக்கேடு; உட்கோதனான் - அதிலே நிற்கின்ற பயனிலாதோன்; இனிப் பயனின்மை செய்கின்ற குணத்துக்கு ஓதின் தீக்குணங்கட் குள்ளாகிய செய்ந்நன்றிக்கேடு தன்னை ஒப்பான் என்றுமாம்.
-
241. மன்னவன் பகை ஆயது ஓர் மாதெய்வம்
என்னை வந்து இடம் கொண்ட அஃது இராப் பகல்
துன்னி நின்று செகுத்திடு நீ எனும்
என்னை யான் செய்வ கூறுமின் என்னவே.
விளக்கம் : என்ன என்பதனை, உட்கினரா (சீவக. 242) என மேல் வருகின்றதனோடு முடிக்க. (இப் பாட்டும் அடுத்ததும் குளகம்.)
தருமதத்தன் அறிவுரை கூறுதல்
-
242. அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
கருமம் காழ்த்தமை கண்டவர் தம் உளான்
தரும தத்தன் என்பான் இது சாற்றினான்.
விளக்கம் : மணி அரசனுக்கும் நாகம் அமைச்சருக்கும் செகுத்திடு என்ற சொல் இடிக்கும் உவமை. காழ்த்தமை - கொல்லத்துணிந்தமை. ஆயவன் என்ற பாடத்திற்கு அரசனால் ஆயவன் என்க.
-
243. தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்
குவளையே அளவுள்ள கொழுங் கணாள்
அவளையே அமிர்தாக அவ் அண்ணலும்
உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான்.
விளக்கம் : ஏகாரம் இரண்டும் தேற்றம். உம்மை: சிறப்பு: உவளகம் - ஒரு பக்கமும் ஆம். தவளையின் வாய்போன்ற வாயையுடைய கிண்கிணியுமாம். அவளையே என்புழி, சுட்டு உலகறிசுட்டு. அவ்வண்ணல் என்றது இகழ்ச்சி.
-
244. விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வது
பெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன்
எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்
தண் அம் தாமரை யாளொடும் தாழ்ந்ததே.
விளக்கம் : நின்இன்பம் என்பது அரசனை நோக்கி நிமித்திகன் கூறியது. (அதனை உட்கொண்டு தருமதத்தன் கூறினான்.) பெண்ணினின்பம் எனப் பெரிதாழ்ந்தவன் என்பதும் பாடம். (இனி, பெண்ணினுடைய இன்பம் விண்ணும் அமுதும் விலை பெறக் கூடியதாகும். அத்துணைப் பெரிது என, அவ்வின்பத்திலே தங்கிய அரசனின் எண்ணம் ஆட்சியிலே இல்லாமையால் இவ்வையகம் இறங்கி நின்னிடத்தே தாமரையாளொடுந் தங்கியது என்று பொருள் கொள்வதும் பொருந்தும்.) இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் சிறிது வலிந்து கூறுவதாயினும் இன்பமுடைத்தாதலுணர்க.
-
245. தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப்
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள்
அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசைப்
பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே.
விளக்கம் : பூமகள் - திரு. இஃது உலகியலாற் கூறினாள். தார் கெழு வேந்தன் என்பதும் பாடம். முன்னிலைப் புறமொழி எனினுமாம்.
-
246. திலக நீள் முடித் தேவரும் வேந்தரும்
உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர்.
விளக்கம் : கூறலென் என்று பாடமாயின் ஒப்புக் கூறேன் என்றான் என்க. இதுமுதல், மன்னவன் பகையாயதொர் மாதெய்வம் (சீவக. 241) என்றதனைக் குறித்துக் கூறுகின்றான்.
-
247. அருளுமேல் அரசு ஆக்குமன் காயுமேல்
வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ.
விளக்கம் : மன் -மிகுதி. மருளி : இ : பகுதிப்பொருள் விகுதி. மற்று: வினைமாற்று. தாமினி நோயும் (புறப். வெண். 187) என்றாற் போல (வாழ்த்தினும் வையினும் என்பவற்றிலுள்ள) உம்மை மாற்றுக. ஆக்கல், அழித்தல், காலந் தோற்றாத வினைப்பெயர் (தொழிற்பெயர்). ஆப: எதிர்காலத்திற்குரிய பகரத்தோடு அன்பெறாது வந்த அகரவிற்றுப் பலவறி சொல். (ஆபவோ): ஓகாரம் : எதிர்மறை.
-
248. உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால்
இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார்.
விளக்கம் : இறங்குகண் இமையார் - தெய்வத்தன்மை குலையுந் தேவர், என்றது, மேலே, எல்லை மூவைந்து நாள்கள் உளவென இமைக்குங்கண்ணும் (சீவக.2810) என்பராதலின், கண்ணிமையார், தேவர்க்கு ஒருபெயர்.
-
249. யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின்
தேவர் என்பது தேறும் இவ் வையகம்
காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
நாவினும் உரையார் நவை அஞ்சுவார்.
-
250. தீண்டினார் தமைத் தீச் சுடும் மன்னர் தீ
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
மாண்டது அன்று நின் வாய் மொழித் தெய்வமே.
விளக்கம் : இதனால் பகைவரையும் நட்டாரையும் தீநட்பையுங் கூறினான். வேண்டில்இன் அமிர்தும் (வேண்டாது பகைப்பின்) நஞ்சும் ஆதலால் என வருவித்துக்கொள்க. நினக்கு ஒரு தெய்வம் இங்ஙனம் கூறிற்றென்றல் பொய். நீயே இத் தீங்கினை நினைக்கின்றனை என்பான் நின் வாய்மொழித் தெய்வம் என்றான்.
-
251. வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்கு
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான்.
விளக்கம் : இவன் முன்னின்று கூறிய அருமை நோக்கி, ஆற்றலான் என்றார். இஞ்ஞாலம் என்றது இகழ்ச்சி. வாலிது - தூயதுமாம். ஞமன் - யமன்.
-
252. குழல் சிகை கோதை சூட்டிக்
கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழல் திகழ் வேலினானை
நேடிய நெடும் கணாளும்
பிழைப்பிலான் புறம் தந்தானும்
குரவரைப் பேணல் செய்யா
இழுக்கினார் இவர்கள் கண்டாய்
இடும்பை நோய்க்கு இரைகளாவார்.
விளக்கம் : (குழற்சிகை : மயிர் முடியும் ஆம்.) (தந்தானும் என்பதிலுள்ள) தரவு, செலவினும் வரவினும் (தொல்.கிளவி.28) என்னும் பொதுச் சூத்திரத்தால் முடிக்க. குரவர் - அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன் (தமையன்) என ஐவர்.
-
253. நட்பு இடைக் குய்யம் வைத்தான்
பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்
கட்டு அழல் காமத் தீயில்
கன்னியைக் கலக்கினானும்
அட்டு உயிர் உடலம் தின்றான்
அமைச்சனாய் அரசு கொன்றான்
குட்ட நோய் நரகம் தம்முள்
குளிப்பவர் இவர்கள் கண்டாய்.
விளக்கம் : கலக்குதல் கைக்கிளை வகையாகிய இராக்கதமென்னும் மணத்தில் தப்பியதாம். குய்யம் - வஞ்சகம். நலம் - இன்பம். உயிர் அட்டு உடலந் தின்றான் என மாறுக. குட்ட நோயும் நரகமும் ஆகிய இவற்றுள் என்க.
-
254. பிறை அது வளரத் தானும்
வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்
குறைபடு மதியம் தேயக்
குறுமுயல் தேய்வதே போல்
இறைவனாத் தன்னை ஆக்கி
அவன் வழி ஒழுகின் என்றும்
நிறை மதி இருளைப் போழும்
நெடும் புகழ் விளைக்கும் என்றான்.
விளக்கம் : பிறை வளர அதுதானும் வளர்ந்து என மாறுக. அது என்றது குறுமுயலை. செய்யுளாகலின் சுட்டு முன்வந்தது. பிறை வளர்பக்கத்துத் திங்கள். மதி - தேய்பக்கத்துத் திங்கள், இவ்வேற்றுமை தோன்ற பிறைவளர என்றும் மதிதேய என்றும் ஓதினார். இறைவனா என்புழி ஆக்கச் சொல்லின் ஈற்றுக் ககரம் கெட்டது.
-
255. கோள் நிலை திரிந்து நாழி
குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி
விளைவு அஃகிப் பசியும் நீடிப்
பூண் முலை மகளிர் பொற்பில்
கற்பு அழிந்து அறங்கள் மாறி
ஆணை இவ் உலகு கேடாம்
அரசு கோல் கோடின் என்றான்.
விளக்கம் : கட்டியங்காரன் கொலை குறித்ததும் அரசன் அவற்கு அரசளித்ததும் உட்கொண்டு இவ்விரண்டு கவியும் பொதுவாகக் கூறினான். எச்சங்கள், செயப்படுபொருளன. கோள் - ஞாயிறு முதலியன. நிலை என்பது நன்னிலை என்பது பட நின்றது. இச் செய்யுளின்கண் கொடுங்கோலால் விளையும் தீமை நன்கு விளக்கப்படுதல் காண்க. இதனுடன்,
-
கோனிலை திரிந்திடின் கோணிலை திரியும்
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை
தருமதத்தன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கட்டியங்காரன் மைத்துனன் வெகுண்டு கூறுதல்
-
256. தார்ப் பொலி தரும தத்தன்
தக்கவாறு உரப்பக் குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன
கடி கமழ் குவளப் பந்தார்
போர்த்த தன் அகலம் எல்லாம்
பொள் என வியர்த்துப் பொங்கி
நீர்க் கடல் மகரப் பேழ்வாய்
மதனன் மற்று இதனைச் சொன்னான்.
விளக்கம் : அறிவு குன்றியவன் என்பது தோன்ற மகரப் பேழ்வாய் மதனன் என அவன் வாயை விதந்தோதினார். மேலும், பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளியவர் என்னும் திருக்குறட்கு மாறாக இவன் அறிவில்லாதவன் என்பது தோன்ற அக்குறள் சொல்லையும் இதன்கண் அமைத்தனர். இச்செய்யுளான் கார்த்திகைத் திங்கள் கார்த்திகையின்கண் குன்றின்மேல் விளக்கிடும் வழக்கம் அக்காலத்தும் இருந்தமை உணர்க.
-
257. தோளினால் வலியர் ஆகித்
தொக்கவர் தலைகள் பாற
வாளினால் பேசல் அல்லால்
வாயினால் பேசல் தேற்றேன்
காள மேகங்கள் சொல்லிக்
கருனையால் குழைக்கும் கைகள்
வாள் அமர் நீந்தும் போழ்தின்
வழு வழுத்து ஒழியும் என்றான்.
விளக்கம் : தேற்றேன என்பது, தேற்றாய் பெரும பொய்யே (புறநா.59) என்றாற்போல நின்றது. இக்கவி முன்னிலைப் புறமொழி.
கட்டியங்காரன் சினந்து கூறுதல்
-
258. நுண் முத்தம் ஏற்றி ஆங்கு
மெய் எல்லாம் வியர்த்து நொய்தின்
வண் முத்தம் நிரை கொள் நெற்றி
வார் முரி புருவம் ஆக்கிக்
கண் எரி தவழ வண்கை
மணி நகு கடகம் எற்றா
வெண் நகை வெகுண்டு நக்குக்
கட்டியங் காரன் சொன்னான்.
விளக்கம் : இதன்கண்ணும் கட்டியங்காரன் வெகுளுதற்கும் நகைத்தற்கும் வேண்டிய காரணமில்லாதவிடத்தும் கடுஞ்சினமும் பெருஞ்சிரிப்பும் உடையன் என அவன் பேதைமையை விளக்குதல் அறிக. வெண்ணகை - வெண்மை காரணமாகப் பிறக்கும் நகை. வெண்மையை வெகுளிக்கும் ஏற்றுக.
-
259. என் அலால் பிறர்கள் யாரே
இன்னவை பொறுக்கும் நீரார்
உன்னலால் பிறர்கள் யாரே
உற்றவற்கு உறாத சூழ்வார்
மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு
வானவர்க்கு இறைவன் ஆக
பொன் எலாம் விளைந்து பூமி
பொலிய யான் காப்பல் என்றான்.
விளக்கம் : உற்றவன் - சச்சந்தன் என்றும், உறாத பொன்னுலகாளாமல் மண்ணுலகாளுதல் என்றும் நச்சினார்க்கினியர் கூறியவை மிகவும் நுணுக்கமுடையன. இனி, உற்றவன் கட்டியங்காரனுமாம். விளைந்த பூமி என்றும் பாடம்.
தருமதத்தன் வெறுத்துக் கூறுதல்
-
260. விளைக பொலிக அஃதே
உரைத்திலம் வெகுள வேண்டா
களைகம் எழுகம் இன்னே
காவலன் கூற்றம் கொல்லும்
வளை கய மடந்தை கொல்லும்
தான் செய்த பிழைப்புக் கொல்லும்
அளவு அறு நிதியம் கொல்லும்
அருள் கொல்லும் அமைக என்றான்.
விளக்கம் : இனி, அஃதேல் உரைக்கிலம் என்பது பாடமாயின், நின் கருத்து அதுவாயின், வேறு கூறுகின்றிலேம் என்க. இனி, கூற்றமும் கயமடந்தை முதலியனவும் காவலனாகிய கட்டியங்காரனைக் கொல்லுமென்று உட்கொண்டு (மனத்தில் அமைத்து) இனி வார்த்தை யமைக என்றான் என்பாருமுளர். விளைக பொலிக ஒரு வழக்கென்பாருமுளர்.
கட்டியங்காரன் தன்படைகளைக் கொண்டு அரண்மனையை வளைத்தல்
-
261. நிலத் தலைத் திருவனாள் தன்
நீப்பரும் காதல் கூர
முலைத் தலைப் போகம் மூழ்கி
முகிழ் நிலா முடிகொள் சென்னி
வெலற்கு அரும் தானை நீத்த
வேந்தனை வெறுமை நோக்கிக்
குலத்தொடும் கோறல் எண்ணிக்
கொடியவன் கடிய சூழ்ந்தான்.
விளக்கம் : நிலத்தலைத்திரு : இல்பொருளுவமை. அரசுரிமையை இகழ்ந்து வறிய முடியொன்றையே உடையன் என்றிரங்குவார் போகமூழ்கி முடிகொள் சென்னி வேந்தன் என்றார். வேந்தன்: சச்சந்தன். குலம் என்றது கருவுற்றிருக்கும் தேவியை. கொடியவன் : கட்டியங்காரன்.
-
262. கோன் தமர் நிகளம் மூழ்கிக்
கோட்டத்துக் குரங்கத் தன் கீழ்
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம்
இரு நிதி முகந்து நல்கி
ஊன்றிய நாட்டை எல்லாம்
ஒரு குடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத்து உச்சிச்
சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே.
விளக்கம் : (தன் கீழ்) : கீழ்: இடமுமாம். நன்மாந்தர்: இகழ்ச்சி. ஊன்றிய: பெயரெச்சமும் ஆம். கோன் : சச்சந்தன். நிகளம் - தளை; விலங்கு. கோட்டம் - ஈண்டுச் சிறைக்கோட்டம். குரங்குதல் - தாழ்தல்.
-
263. பருமித்த களிறும் மாவும்
பரந்தியல் தேரும் பண்ணித்
திருமிக்க சேனை மூதூர்த்
தெருவுதொறும் எங்கும் ஈண்டி
எரி மொய்த்த வாளும் வில்லும்
இலங்கு இலை வேலும் ஏந்திச்
செரு மிக்க வேலினான் தன்
திருநகர் வளைந்தது அன்றே.
விளக்கம் : உள்நிற்கும் ஊர்திகளும் உட்பட வளைந்து அந்தப்புரத்தினுட் புகுதாது நின்றது கண்டு வாயிலோன் உணர்த்துகின்றமை மேலே கூறுகின்றார்.
கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்
-
264. நீள் நில மன்ன போற்றி!
நெடு முடிக் குருசில் போற்றி!
பூண் அணி மார்ப போற்றி!
புண்ணிய வேந்தே போற்றி!
கோள் நிலைக் குறித்து வந்தான்
கட்டியங் காரன் என்று
சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான்
செய்ய கோல் வெய்ய சொல்லான்.
விளக்கம் : போற்றி: பரிகாரம். அரும்பூண் அற எறிந்தாங்கு என்பர் மேலும். போற்றி நான்கு கூறியது நிலத்திற்கும் குலத்திற்கும் வீரத்திற்கும் தருமத்திற்கும் நின்னையொழிய இல்லையென்று இரங்கினான். கோண் எனினும் மாறுபாடாம்.
-
265. திண் நிலைக் கதவம் எல்லாம்
திருந்து தாழ் உறுக்க வல்லே
பண்ணுக பசும் பொன் தேரும்
படு மதக் களிறும் மாவும்
கண் அகன் புரிசை காக்கும்
காவலர் அடைக என்றான்
விண் உரும் ஏறு போன்று
வெடிபட முழங்கும் சொல்லான்.
விளக்கம் : வல்லே என்றது, எவ்விடத்துங் கூட்டுக. வெடிபட- வெடித்தல் உண்டாக. இஃது இராசதத்தாற் கூறினான். (இராசதம் - அரசனுக்குரிய இயல்பு; துணையில்லாத தனிமையிலும் எழுந்தது.)
-
266. புலிப் பொறிப் போர்வை நீக்கிப்
பொன் அணிந்து இலங்குகின்ற
ஒலிக் கழல் மன்னர் உட்கும்
உருச் சுடர் வாளை நோக்கிக்
கலிக்கு இறை ஆய நெஞ்சினி
கட்டியங் காரன் நம்மேல்
வலித்தது காண்டும் என்று
வாள் எயிறு இலங்க நக்கான்.
விளக்கம் : இது வீரத்தின் கண் எள்ளுதலாற் பிறந்த நகை. (புலிப்பொறிப் போர்வை கவசம் எனவும், ஊர்திகள் இன்மையின் கவசம் நீக்கினான் எனவும் போர்வை உறையும் என்ப எனவும் நச்சினார்க்கினியர் நவில்வர்.)
விசயை துன்புறுதல்
-
267. நங்கை நீ நடக்கல் வேண்டும்
நன் பொருட்கு இரங்கல் வேண்டா
கங்குல் நீ அன்று கண்ட
கனவு எல்லாம் விளைந்த என்னக்
கொங்கு அலர் கோதை மாழ்கிக்
குழை முகம் புடைத்து வீழ்ந்து
செங் கயல் கண்ணி வெய்ய
திருமகற்கு அவலம் செய்தாள்.
விளக்கம் : வேண்டும் என்பது ஒரு வியங்கோள்; ஓஒதல் வேண்டும் (குறள், 958) என்றாற்போல. நன்பொருள்: பிள்ளை. எல்லாம் என்றான் பிள்ளையார் ஆக்கங் கருதி (விசயையின்) உயிர் நிற்றற்கு. தெளிவுபற்றி, விளைந்த என இறந்த காலத்தாற் கூறினான்.
நன்பொருள் - மகவு.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும் (குறள்.63)
-
268. மல் அலைத்து எழுந்து வீங்கி
மலை திரண்டு அனைய தோளான்
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த
அமிர்தம் அன்னாளை எய்திப்
புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப்
பொம்மல் வெம் முலையினாட்குச்
சொல்லுவான் இவைகள் சொன்னான்
சூழ் கழல் காலினானே.
விளக்கம் : அமுதயின்றார்க்கு நாள் கெட்டால் அது வேறுபாடு தோற்றுவிக்குமாறுபோல இவற்கும் வேறுபாடு தோற்றுவித்தலின், அமிர்தம் அன்னாள் என்றார். இவை இருந்தும் பயன்என்கொல் என்றிரங்குவார் மல்லலைத் தெழுந்து வீங்கி மலைதிரண் டனைய தோளான் என்றார்.
-
269. சாதலும் பிறத்தல் தானும்
தம் வினைப் பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம்
அவை பொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண்
உணர்வு இன்மை அன்றே
பேதை நீ பெரிதும் பொல்லாய்
பெய் வளைத் தோளி என்றான்.
விளக்கம் : சாதலும் பிறத்தல் தானும் ஆதலும் அழிவும் எல்லாம் தம் வினைப்பயத்தின் ஆகும். அவற்றுள், சாதற்கும் அழிதற்கும் நோதலும், பிறத்தற்கும் ஆதற்கும் பரிதலும் நுண்ணுணர்வின்மையாம். அவை பொருட்கு இயல்பு, என்றவாறு. பரிதல் - அன்புறுதல். இவற்றை யுணராமையால் நீ பெரிதும் பொல்லாய் என்றான் என்க.
-
270. தொல்லை நம் பிறவி எண்ணில்
தொடு கடல் மணலும் ஆற்றா
எல்லைய அவற்றுள் எல்லாம்
ஏதிலம் பிறந்து நீங்கிச்
செல்லும் அக் கதிகள் தம்முள்
சேரலம் சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளைச்
சுற்றமே இரங்கல் வேண்டா.
விளக்கம் : கடல் மணல் அளவிடப்படாமைக்கு ஒன்று கூறியபடி. இரண்டுநாள் என்றது சிறுமைக்கு ஒன்று கூறியபடியாம். பத்தெட்டு நாட்பயனில்லா வாழ்க்கை என்றாற்போல.
-
271. வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி
வாமனால் வடித்த நுண் நூல்
உண்டு வைத்து அனைய நீயும்
உணர்வு இலா நீரை ஆகி
விண்டு கண் அருவி சோர
விம் உயிர்த்து இனையை ஆதல்
ஒண் தொடி தகுவது அன்றால்
ஒழிக நின் கவலை என்றான்.
விளக்கம் : தெய்வங்கட்குரிய மலரில் வண்டு மொய்யாதாயினும் அருகன் அருளால் வண்டு மொய்த்தது. நூல் : ஆகுபெயர். அனைய: நெஞ்சறி பொருளைச் சுட்டிய சுட்டு. வாமன் - அருகக்கடவுள், வேதமுதல்வன் ஓதிய வேதத்தொளி என்பதுபற்றி, வாமனால் வடித்த நுண்ணூல் என்றார். அவை, அங்காகமம், பூர்வாகமம், பகூசுருதியாகமம் என்னும் மூன்றுமாம்.
-
272. உரிமை முன் போக்கி அல்லால்
ஒளி உடை மன்னர் போகார்
கருமம் ஈது எனக்கும் ஊர்தி
சமைந்தது கவல வேண்டாம்
புரி நரம்பு இரங்கும் சொல்லாய்
போவதே பொருள் மற்று என்றான்
எரி முயங்கு இலங்கு வாள் கை
ஏற்று இளஞ் சிங்கம் அன்னான்.
விளக்கம் : பிள்ளையாற் கதி பெறுதலும் பகை வெல்லுங் கருதி. இருவர்க்கும் கருமம் என்றான். கவலுதல்: இருதலைக் கொள்ளி எறும்பு போற் கணவனையும் மகனையும் எண்ணி வருந்துதல். கவலை: இருபாற்பட்டது. எனக்கும் கருமம் ஈது என மாறுக. ஊர்தியும் சமைந்தது எனல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஆகூழ் உண்மையால் ஊர்தியும் சமைந்துளது என்றவாறு. ஊர்தி என்றது மயிற்பொறியை. எனக்கும் கருமம் ஈது என்றது நின்னைப் போக்குவதே என்றவாறு. நினக்கும் போவதே கருமம் என்க.
விசயையை சச்சந்தன் ம்அயில் பொறியில் அமர்த்தல்
-
273. என்பு நெக்கு உருகி உள்ளம்
ஒழுகுபு சோர யாத்த
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா
ஆர் உயிர்க் கிழத்தி தன்னை
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி
இறைவனது ஆணை கூறித்
துன்பம் இல் பறவை ஊர்தி
சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்.
விளக்கம் : (கூறி என்பதனைக் கூறஎனத் திரித்து, ஆணை கூறியதை விசயைக்கு ஆக்குவர் நச்சினார்க்கினியர்.
சச்சந்தன் கோபங்கொள்ளல்
-
274. நீர் உடைக் குவளையின்
நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம்
நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும்
சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல்
சுடுவது ஒத்து உலம்பினான்.
விளக்கம் : உடைம் முலை: மகர ஒற்றுவண்ணத்தால் வந்தது. பாரை அகத்து அடக்கின கடல் என்றது ஊழிக்காலத்து நீரை. தான் அமைத்த படையைத் தானே அழிப்பதை யுன்னி நெருப்பும் நீரும் உவமை கூறினார்.
சச்சந்தன் போரிட்டு வீரமரணம் அடைதல்
-
275. முழை முகத்து இடி அரி
வளைத்த அன்ன மள்ளரில்
குழை முகப் புரிசையுள்
குருசில் தான் அகப்பட
இழை முகத்து எறி படை
இலங்கு வாள் கடல் இடை
மழை முகத்த குஞ்சரம்
வாரிஉள் வளைத்தவே.
விளக்கம் : குழைமுக மகளிர் காக்கும் புரிசையெனவே அந்தப்புரம் ஆயிற்று. ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் (நெடுநல்.107) என்றார் பிறரும். மழை - மதம். அரியை யானை வளைத்தல் இல் பொருளுவமம்.
-
276. அயிலினில் புனைந்த வாள்
அழன்று உருத்து உரீஇ உடன்
பயில் கதிர்ப் பருமணிப்
பன் மயிர்ச் செய் கேடகம்
வெயில் எனத் திரித்து விண்
வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணிக் கதிர் நகைக்
கடவுள் ஒத்து உலம்பினான்.
விளக்கம் : நல்வினை கெட்டு வீழ்ந்ததொரு கடவுள் (ஞாயிறு) உவமையாயிற்று, இவனும் துணையும் படையுமின்றி நிற்றலின். கயில் - மூட்டுவாய். நகை - முத்துவடம்.
-
277. மாரியின் கடுங் கணை
சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரியக் குரிசிலும்
விலக்கி வெம் கணை மழை
வாரியில் கடிந்து உடன்
அகற்ற மற்ற வன்படைப்
பேர் இயல் பெருங் களிறு
பின்னி வந்து அடைந்தவே.
விளக்கம் : பேர்இயல் பெருங்களிறு - தம்பேர் உலகில் இயலுதலையுடைய பெரிய களிறுகள்.
-
278. சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே.
விளக்கம் : கோடுறவ் வழுத்தலின் : வகரம் வண்ணம் நோக்கி விரிந்தது. ஊற்றறாத மலை மதமறாத களிறுகட்குவமை.
-
279. வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை
வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து
ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத்
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே.
விளக்கம் : வேலி ஆகுபெயராதலின் பிரித்தென்னாது பிளந்தென்றார். வளையென்றார் தப்பாமற் சூழ்தலின். இத்துணையும் இவன் வென்றியாதலின் இவன் களம் என்றார்.
-
280. உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வது
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி
இப்படி இறை மகன் இரும் களிறு நூற
அப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி.
விளக்கம் : அண்ணல் : இகழ்ச்சிக் குறிப்பு. இப்பாட்டுக் குளகம். தன் காவலனையே அழிக்கத் தொடங்கிய படைக்கு முந்நீர் உடன்று கரைகொல்வது ஒப்புடைய தானை என்ற நயம் உணர்க. அப் படையுள் அண்ணல் என்றது கட்டியங்காரனை.
-
281. நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக்
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான்.
விளக்கம் : சீறுபு : இறந்தகால வினையெச்சம். ஒய்யென : ஒலிக் குறிப்பு.
-
282. நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி
வைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி
மைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக்
கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான்.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். நுதி - முனை. தவ - மிக. முதல் - அடி.
-
283. மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச்
சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும்
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான்.
விளக்கம் : மயிலின் தன்மையார் என்ற பன்மையால் தேவியர் பலராயினார். (சச்சந்தனுக்குத் தேவியர் பலருண்டென்றும் காமக் கிழத்தியர் ஐந்நூற்றுவர் என்றும், க்ஷத்திர சூளாமணி என்ற நூல் கூறும்) முலைகள் துஞ்சும் மார்பு எனவே முன் தனக்கு நிகராக எறிவாரின்மை பெறப்பட்டது. மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் - மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா.10) என்றார் பிறரும். யானை ஆழ எறிந்தான் என முடிக்க.
-
284. புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே.
விளக்கம் : தடாயின வேல் என்க. தடாயின: தட என்னும் உரிச்சொல் அடியிற் பிறந்த பெயரெச்சம். அம்ம. அசை. மிறைக்கொளி - வளைவு கொண்டது.
-
285. ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி
நாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்
சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம்
காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே.
விளக்கம் : கப்பணம்: இரும்பால் ஆன ஆனைநெருஞ்சிமுள் போன்ற படை. முன் இவன் ஊர்ந்த யானை துதிக்கை வெட்டுண்டு வீழ்ந்ததால் இப்போது கடுகவுந்திய வேழம் வேறொன்று என உணர்க. நண்ணார், காய்ந்தனன்: முற்றெச்சங்கள் (நச்சினார்க்கினியர் மள்ளரை யானைகளைச் செலுத்துவோர் எனக்கொண்டு. மள்ளர் சாய்ந்தபின் யானை இரிந்தன என மாட்டேறு செய்வர், நண்ணார் : வினைமுற்று என்பர்.)
-
286. குன்றம் மார்பு அரிந்து வெள் வேல்
குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
நின்ற மால் புருவம் போல
நெரி முறி புருவம் ஆக்கிக்
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப
மற்ற போர் களிற்றில் பாய்ந்து
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம்
நீள் முடி இலக்கம் ஆனான்.
விளக்கம் : ஊர்தல் : போதல்; வானூர் மதியம் (நாலடி. 125) போல. மால் - முருகன். நீள்முடி : சினையாகுபெயர். (சச்சந்தன் ஊர்தியின்றி நின்றதால் மயிலூர் தலாகிய உவமையை மட்டும் நீக்குக.)
-
287. நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள்
குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான்.
விளக்கம் : நாக+அணை: நாகணை: அகரம் தொக்கது. நாகணையினான் : திருமால்; ஈண்டுச்சந்தனுக்காயிற்று. ஒசிந்து: வினையெச்சத்திரிபு. நிலம் : இடவாகுபெயர். தன் தோளில்வலிமையுள்ளவரை யானைகளை வெட்டினான். வெட்டியதால் வாளும் ஒடிந்தது. நஞ்சு மதி கொண்ட என்பது பாடமாயின் திருமால் உட்கொண்டசக்கரம் என்க. (மதியனைய சக்கரம்.) தோளசைந்து என்றும் பாடம்.
-
288. ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப்
பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப்
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான்.
விளக்கம் : வீழும் - விரும்பும். இனி நீடும் போரமருள் பாடமாயின் நெடும் பொழுதாம்; நீடு நின்றனன் என்றார் பிறரும். ஆண்டகை - சச்சந்தன். விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு (குறள், 775) என்பது பற்றி இமையானாய் என்றார். பேரமர் என்றது பாரதப் போரினை. அன்று என்றது உலகறி சுட்டு. பெருந்தாதை - கன்னன். இளையோன் - அபிமன்.
சச்சந்தன் வீழ்தல்
-
289. போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்தத்
தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா
வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான்.
விளக்கம் : ஆண்டகைமை: குணப்பண்பு; ஆண்டகைக் குரவிர் (சீவக. 363) போல. அவிதல் - குறைதல். திரைபாடவிய (அகநா. 260) என்றாற்போல. ஆண்டகையைப் பண்பியாக்கிச் சச்சந்தன் பட்டான் எனின், பாலருவி (சீவக.291) என்னுங் கவி வேண்டாவாம். இவன் பகைவர் முகம் நோக்கி வீழ்தலின், பிள்ளையார் பின்பு பகை வென்றார். இச் செய்யுளின்கண் நச்சினார்க்கினியர் ஆண்டகை என்பதற்குச் சச்சந்தன் என்னாது ஆண்தகைமை என்று பொருள்கூறி அதற்குக் கூறும் விளக்கம் கற்றோரை இன்பத்தில் ஆழ்த்துவதாம். நிலமாமகள் வெம்முலை ஞெமுங்க என்றது, நூலாசிரியர் சச்சந்தன் கழிகாமத்தாற் கெட்டமை கருதிக் கூறியதாம்.
-
290. தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது
புலம்பு எய்தி மைந்தர் மாழ்க
ஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடுங் கோல்
இருள் பரப்பவே ஏ பாவம்
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த
அறச் செங்கோலாய் கதிரினை
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மா
நாகமுடன் விழுங்கிற்று அன்றே.
விளக்கம் : கடலாங் குருகுலம் சிறப்பு நிலைக்களமாக முதலொடு முதலேவந்த மெய்யுவமம் (தொல்.உவம.4) மந்திரி மாநாகம் கீழான பொருள் நிலைக்களமாக முதலொடு முதலே வந்த வினையுவமம் (தொல். உவம-5.) தொல்காப்பியனார் சொல்லும் பொருளும் உடன் ஆராய்தலின் உருவகவுவமை யென்றே கூறினார். செங்கோலையுடைய கதிர் : இல்பொருளுவமம். ஏஎ: குறிப்புமொழி. இதனால், அவன் ஆண்டகைமை குறைந்ததற்கு இரங்கினார்.
-
291. பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின்
நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க்
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக்
கேடகமும் மறமும் ஆற்றி
வால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடி
மந்திர மென் சாந்து பூசி
வேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய்
விண்ணோர்க்கு விருந்து ஆயினானே.
விளக்கம் : தோய்: உவமையுருபு. வேலருவி -வேலொழுங்கு. உயிர் நீங்குகின்றபொழுது தியானம் வந்துதவுதலின், வீடு பெற்றான் என்க; சுவர்க்கமுமாம். இடையறாமையானும் மூழ்கினார்க்கு உலகியற்றுன்பம் மறைந்து குளிர்ந்திருத்தலானும் சுக்கிலத்தியானத்தை வாலருவி என்றார். வாலருவியின்கண் ஆடி என்க. ஓதுங்கால் உள்ளமும் உடலும் குளிர்தலின் வாமன் மந்திரத்தை மென்சாந்தம் என்றார்.
சச்சந்தன் உடலை ஈமப்படுகையில் கிடத்தல்
-
292. செந் தீக் கருந் துளைய தீம் குழல் யாழ்
தேம் தேம் என்னும் மணி முழவமும்
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்டத்
தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும்
அம தீம் கிளவியார் ஐஞ்ஞாற்றுவர் அவை துறை
போய் ஆடல் அரம்பை அன்னார்
எந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ என்று இனைந்து
இரங்கிப் பள்ளி படுத்தார்களே.
விளக்கம் : தேந்தேம், தாந்தாம்: அநுகரணம். கிளவியார் ஐந்நூற்றுவர் என்றார் அகப்பரிவாரம் ஐந்நூற்றுவரே என்றற்கு. மேலும் நால்வரை ஒழிந்த தோழர் ஐந்நூற்றுவரும் அகப்பரிவாரம் என்று உணர்க. கோன்றமர் நிகளம் மூழ்கி (சீவக.262) எனவே ஆடவர் இன்மை உணர்க.
சச்சந்தனுக்கு நேர்ந்த கதியை நினைத்து அனைவரும் வருந்தி புலம்புதல்
-
293. மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச்
செப்பகம் கடைகின்றவே போல்
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின்
உள் அரங்கி மூழ்கக் காமன்
படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப்
பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார்
புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள்
மின்னுப் போல் புலம்பினாரே.
விளக்கம் : புலவு - குருதி; பண்பாகுபெயர். (புலால் கமழ்வது குருதி) இனிக் குருதிபடிந்த நிலத்திற்கெனின் தானியாகு பெயர்.) (விம்மா : செய்யா என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம்.) விம்மிப் புலம்பினார் என்க.
-
294. அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு
வேந்தன் கிடந்தானைத் தான்
கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான்
கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும்
ஏற்பச் சொரிந்து அலறி எம்
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப்
பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்.
விளக்கம் : கட்டியங்காரன் மனம் வழிபாட்டிற்படுதலின் தன் வயத்ததின்றிக் கலங்கியது என்பார், கலுழ்ந்து என்றார். கண்ணீர் உகுத்தது இன்பத்தினால், இதனை, உவகைக் கலுழ்ச்சி என்பர். விளிவில் கொள்கை (தொல்.மெய்ப்-5) என்றதனால் இதுவும் அழுகைப்பாற்படும். அரசன் மெய்யை எரி விழுங்குவதனால், ஒளித்தியோ, என்றனர். என்னா - என்று. இச் செய்யுளும் பின்வரும் இரண்டு செய்யுட்களும் ஒரு தொடர்.
-
295. கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல்
ஆரம் பரிந்து அலறுவார்
நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார்
நின்று திருவில் வீசும்
மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார்
கையால் வயிறு அதுக்குவார்
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது
என்பார் கோல் வளையினார்.
விளக்கம் : கடிப்பிணை : குதம்பைபோன்ற ஒரு காதணி. ஓ: இரக்கக் குறிப்பு. கொடிதென்றனர் - அரசற்குச் செய்யும் நீர்க்கடன் முறை செய்யாமை யெண்ணி.
-
296. பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய்
ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத்
தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறு
பிடிகள் போலத் துயர் உழந்து தாம்
ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடி
அடைதும் என்று அழுது போயினார் எம்
கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடி
இனிப் பூவா பிறர் பறிப்பவே.
விளக்கம் : சிறுபிடிகள் எனவே அக்களிறு கூடுதற்குரிய குலத்திற் பிறந்த கொடிகள் அல்ல என்பது பெற்றாம். இக்கொடி என்றார் தம்மைப் பிறர்போல. இவர்கள் அரசற்குக் காமம் ஒழிந்த நுகர்ச்சி கொடுத்தற்குரிய (பணி) மகளிர்.
அவலங்களுக்கிடையே கட்டியங்காரன் மன்னன் ஆதல்
-
297. செங் கண் குறு நரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு
அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப
வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல்
எரியின் வாய்ப் பெய்து அவன் பெயர்ந்து போய்ப்
பைங் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை
அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப
எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான்
பூமகளை எய்தினானே.
விளக்கம் : நரி சிங்கத்தின் இடத்தை அடைந்தாற் சிங்கம்போலத் தொழில் நடத்தாது; தன் இழிதொழிலையே நடத்தும். கட்டியங்காரன் கருத்தால் மகளிர் சச்சந்தனை எரியிற் பெய்தலின் அதனை அவன் தொழிலாக்கினார். (நச்சினார்க்கினியர் விறலெரி என்பதிலுள்ள விறல் என்னுஞ் சொல்லையும், பெய்து அவன் என்பதிலுள்ள அவன் என்னுஞ்சொல்லையும் இணைத்து விறலவன் எனக் கட்டியங்காரனுக் காக்கி இஃது இகழ்ச்சி என்பர்.)
சீவகன் பிறப்பு
-
298. களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்
சுளிமுகக் களிறு அனான்தன் சொல் நய நெறியில் போய
கிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன்.
விளக்கம் : களிமுகம் - களிக்கின்ற நெறி. கயில் - மூட்டுவாய் ஆகுபெயரால் அணிகலனை உணர்த்தியது.
-
299. எஃகு என விளங்கும் வாள்
கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால்
ஆய் மயில் ஊரும் ஆங்கண்
வெஃகிய புகழினான் தன்
வென்றி வெம் முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பிணையின் மாழ்கி
இறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள்.
விளக்கம் : இது கையாறாதலிற் பொறியை இடத்தே திரித்தல் இயலாமை நேர்ந்தது. (கையாறு - செயலறுதல்.) எஃகென விளங்கு வாட்கண் என்பதற்கு வேலென விளங்கா நின்ற ஒளியுடைய கண் எனினுமாம். அஃகிய மதுகை - குறைந்த வலிமை. ஆய்மயில் - வேகம் சுருங்கிய மயிற்பொறி. ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (உரி-32.) என்பர் தொல்காப்பியனார். வெஃகிய புகழினான் -வேந்தன் அல்லனாகவும் அவ் வேந்தற்குரிய புகழைக் கவர்ந்தவன்; என்றது கட்டியங்காரனை. வெஃகுதல் - பிறர் பொருளைக் கவர்தல். வென்றிவெம் முரசம் என்றது இகழ்ச்சி. எஃகு - வேல்.
-
300. மோடு உடை நகரின் நீங்கி
முது மரம் துவன்றி உள்ளம்
பீடு உடையவரும் உட்கப்
பிணம்பல பிறங்கி எங்கும்
காடு உடை அளவை எல்லாம்
கழுகு இருந்து உறங்கும் நீழல்
பாடு உடை மயில் அம் தோகை
பைபய வீழ்ந்தது அன்றே.
விளக்கம் : பாடு - ஈண்டு இடப்பக்கம். உடைமையில்: உடைகின்ற மயில் என வினைத்தொகை. பொறிக்கு, ஓடமுறுக்கி (சீவக.238) என்னும் வாசகம் முன்னர் உளது, ஆதலின், அதற்கேற்ப, உடைகின்றது என்றார். கையால் இடந்திரித்தாற் கடிதின் வீழ்கின்றது, ஈண்டுத் தானே இடந்திரிதலிற் பையப்பைய நிலத்திற்கு அண்ணிதாக வீழ்ந்த தென்றார். வீழ்ந்தது, நிகழ்காலத்தில் தோன்றிய இறப்பு.
-
301. மஞ்சு சூழ்வதனை ஒத்துப்
பிணப்புகை மலிந்து பேயும்
அஞ்சும் அம் மயானம் தன்னுள்
அகில் வயிறு ஆர்ந்த கோதை
பஞ்சிமேல் வீழ்வதே போல்
பல் பொறிக் குடுமி நெற்றிக்
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து
கால் குவித்து இருந்தது அன்றே.
விளக்கம் : பேயும்: உம்: உயர்வு சிறப்பு. அகில் : அதன் மணத்திற்கு ஆகுபெயர். இருக்கும் என்றும் பாடம். இம் மயிற்பொறியைக் கூனியது உருவங்கொண்ட தெய்வம் மறைத்துக் கட்டியங்காரனும் கோவிந்தனும் தேவியைத் தேடாமற் காத்ததென்று கொள்க. அது பின்பு, கனியார் மொழியாட்கும் மயிற்குங் காமர்பதி நல்கி (சீவக.2603) எனச் சேரக் கூறியவாற்றானும் உணர்க.
-
302. வார் தரு தடம் கண் நீர் தன்
வன முலை நனைப்ப ஏல் பெற்று
ஊர் கடல் அனைய காட்டுள்
அச்சம் ஒன்றானும் உள்ளாள்
ஏர் தரு மயில் அம் சாயல்
இறைவனுக்கு இரங்கி ஏங்கிச்
சோர் துகில் திருத்தல் தேற்றாள்
துணை பிரி மகன்றில் ஒத்தாள்.
விளக்கம் : உள்ளாள், தேற்றாள்; முற்றெச்சங்கள். அன்பு மிகுதியாற் கையாறு முற்படுதலின், இறுகி (சீவக.299) எனக் கையாறு கூறி, இரங்கி எனக் கவலை கூறி, ஏங்கி என அரற்றுக் கூறி, அச்சம் உள்ளாள் என அவலங் கூறினார். வருத்தம்தோன்றி நிற்றல், அவலம் வாய்விட்டழுதல், அரற்று. யாது செய்வல் என்றல், கவலை. மூர்ச்சித்தல், கையாறு. ஏல் -மனவெழுச்சி. தான் நிற்கின்ற நிலையிலே கலக்கத்தாலே பேய் முதலியவற்றிற்குச் சிறிதும் அஞ்சினாளிலள்.
-
303. உண்டு என உரையில் கேட்பார்
உயிர் உறு பாவம் எல்லாம்
கண்டு இனித் தெளிக என்று
காட்டுவாள் போல ஆகி
விண்தொட நிவந்த கோயில்
விண்ணவர் மகளின் சென்றாள்
வெண்தலை பயின்ற காட்டுள்
விளங்கு இழை தமியள் ஆனாள்.
விளக்கம் : மகப்பெறுங் காலத்துத் துணையின்றி வருந்துதலின், காட்டுவாள்போல ஆகி என்றார். உரை - அகம அளவை. கண்டினித் தெளிக என்றது காட்சி யளவையானும் கண்டு உணர்வீராக என்றவாறு. இவள் நெருநல் விண்டொட நிவந்த கோயில் விண்ணவர் மகளிற் சென்றாள் இன்று தமியளானாள் என்க.
-
304. இருள் கெட இகலி எங்கும்
மணிவிளக்கு எரிய ஏந்தி
அருள் உடை மனத்த வாகி
அணங்கு எலாம் வணங்கி நிற்பப்
பொரு கடல் பருதி போலப்
பொன் அனான் பிறந்த போழ்தே
மருள் உடை மாதர் உற்ற
மம்மர் நோய் மறைந்தது அன்றே.
விளக்கம் : ஏந்தி - மிக்கு. இகலி -விளக்கொடு மாறுபட்டு எனினும் ஆம். இவன் வீடு பெறுவன் என்று கருதித் தெய்வம் வணங்கிற்று. கவாஅன் மகற்கண்டு தாய் மறந்தாங்கு (நாலடி.201) என்றார் பிறரும். முன் வெஞ்சுடரின் ஆண்டகை அவிந்தான் (சீவக.289) என்று கூறி, அச்சுடர் குழவியாய்த் தோன்றினமை (ஈண்டுக்) கூறினார். ஞாயிறு தோற்றத்தில் இருளைப் போக்கிப் பின்னர் மதியத்தைக் கெடுக்குமாறு போல, இவனும் பிறந்தபோதே தேவியின் இருளைப் போக்கிப் பின்பு பகைவெல்வான் என்பது கருத்து. இக்கருத்தாற், செய்யோன் செழும் பொற்சரம் என்றும், மதிவீழ்வதுபோல வீழ்ந்தான் (சீவக.2322) என்றும் கூறினார். இச் செய்யுளுக்கு நச்சினார்க்கினியர் கூறும் விளக்கங்கள் மிக்க நுணுக்கமுடையன. அவற்றிற் கியல்பன்மை தோன்ற அருளுடை மனத்தவாகி என்றார். அணங்கு - பேய், பொன்னனான் என்றது பொன் போன்று பெறுதற்கரியவன் என்றவாறு.
-
305. பூங்கழல் குருசில் தந்த
புதல்வனைப் புகன்று நோக்கித்
தேம் கமழ் ஓதி திங்கள்
வெண் கதிர் பொழிவதே போல்
வீங்கு இள முலைகள் விம்மித்
திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தித்
திலகனைத் திருந்த வைத்தாள்.
விளக்கம் : புதல்வன் பொருட்டு இவளைப் போக்குதலின், குருசில் தந்த புதல்வனை என்றார். மகப் பயந்தோர்க்குப் பயந்தபொழுதே பால் சுரவாதாகையால் ஆற்றாள் வாங்குபு என்றார்.
விசயை புலம்புதல்
-
306. கறை பன்னீர் ஆண்டு உடன் விடுமின்
காமர்சாலை தளி நிறுமின்
சிறை செய் சிங்கம் போல் மடங்கிச்
சேரா மன்னர் சினம் மழுங்க
உறையும் கோட்டம் உடன் சீமின்
ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று
ஏற்பார்க்கு ஊர்தோறு உய்த்து ஈமின்.
விளக்கம் : (இதுமுதல் விசயை தானே இரங்கிக் கூறுவன.) பாலக்கிரகாரிட்டம் பன்னீராண்டளவும் உண்டு என்றும் அதற்குச் சாந்தியாகப் பன்னீராண்டு கறைவிடுதல் அரசியல்பு என்றும் கொண்டு, பன்னீராண்டு என்றாள். இனி, அரசர்க்குப் பதினோராவதாண்டிலே உபநயனம் பண்ணிப் பன்னீராவதாண்டிலே இல்லறக்கிழமை பூண்டு அரசுரிமை எய்துதல் இயல்பெனக் கொண்டு பன்னீராண்டும் உலகினர்க்குத் தானமாகவிடுதல் இயல்பெனலுமாம். மகவுபெற்றாற் சிறை வீடு செய்தல் தென்புலத்தார் கடனை நீக்குதலென்பர். கறை- குடிகள் வேந்தற்கிறுக்குங் கடமைப் பொருள். ஒருசேர நீக்குமின் என்பார் உடன்விடுமின் என்றார்.. சீமின் - இடித்தொழிமின். திறந்திட்டு - திறந்துபோகட்டு. காமர்சாலை என்றது அறக்கோட்டத்தை. தளி - திருக்கோயில். நிறுமின் - நிறுவுமின். ஈமின் - வழங்குமின் மக்களைப் பெற்றுழிச் சிறை வீடு செய்தால் தென்புலத்தார் கடன் தீரும் என்பதொரு கொள்கை என்க.
-
307. மாடம் ஓங்கும் வள நகருள்
வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு
ஆடை செம் பொன் அணிகலங்கள்
யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்
வீடல் இன்றிக் கொளப் பெறுவார்
விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக்
கோடி மூன்றோடு அரைச் செம் பொன்
கோமான் நல்கும் என அறைமின்.
விளக்கம் : எழுபிறப்புத் தீவினை நீங்க எழுநாள் கொளப்பெறுவார். எழுபிறப்பு : மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மலை, தாவரம் என்பன; இவற்றுள் மலையை நீக்கித் தேவரைக் கூட்டி யுரைப் பாரும் உளர். வீடல்: விடல் என்பதன் விகாரம் ஆம். விடல் - நீக்கல். உடம்பிற்கு மூன்றரைக் கோடி மயிர் உளவாகலின் மூன்றரைக்கோடி நல்குமென்றாள். வளநகர் - வளப்பமுடைய அரண்மனை. பண்டம் என்றது - உணவுப் பொருள்களை. விடுதல் - வீடல் என நின்றது. வீழ்ந்தீர்க்கு - விரும்பினீர்க்கு.
-
308. அரும் பொன் பூணும் ஆரமும்
இமைப்பக் கணிகள் அகன் கோயில்
ஒருங்கு கூடிச் சாதகம் செய்து
ஒகை அரசர்க்கு உடன் போக்கிக்
கரும் கைக் களிறும் கம்பலமும்
காசும் கவிகள் கொள வீசி
விரும்பப் பிறப்பாய் வினை செய்தேன்
காண இஃதோஒ பிறக்குமா.
விளக்கம் : ஓஒ: இரக்கக் குறிப்பு. பிறக்கும் ஆறு என்பது பிறக்கும்ஆ என விகாரப்பட்டது. செய்து - செய்ய: வினையெச்சத்திரிபு. பிறப்பாய் : வினையாலணையும் பெயர். கவிகள் : பெருமங்கலம் பாடுவோர். கணிகள் - கணித நூல் வல்லோர். சாதகம் - பிறப்புக் கணிதம். ஓகை - உவகை: இஃது ஆகுபெயராய் உவகைச் செய்தியை உணர்த்தும்.
-
309. வெவ் வாய் ஓரி முழவு ஆக
விளிந்தார் ஈமம் விளக்கு ஆக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில்
நிழல் போல் நுடங்கிப் பேய் ஆட
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக்
கூகை குழறிப் பாராட்ட
இவ்வாறு ஆகிப் பிறப்பதோ
இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே.
விளக்கம் : வேந்தே? என்றாள் அரசிளங்குமரனாதலின். (நச்சினார்க்கினியர், இவ்வாறென்றது, தந்தை விரும்பும்படி நல்வினையுடைய தன்மையை. இதுவென்றது செயலின்றித் தாய் வருந்தும்படி தீவினையுடைய தன்மையை. ஓகாரமிரண்டும் வினா எனப்பொருள் கூறுவர். மற்றும் அவர் 306 முதல் 309 வரை உள்ள நான்கு செய்யுட்களையும் ஒரு தொடராக்கி மாட்டேற்று முடிபு கூறுவார். அவர் கூறும் முடிபு: தேவி புதல்வனை நோக்கிக், கோமானானவன் கணிகள் சாதகஞ் செய்ய ஓகை போக்கி, வீசிக், கறைவிடுமின், நிறுமின், சீமின், ஈமின், விலக்கல் வேண்டா என அறைமின், வீழ்ந்தீர்க்கு நல்கும் என அறைமின் என்று விரும்பப் பிறக்கும் நீ ஓஒ தீவினைசெய்தேன் காண்டற்காகப் பிறக்கும்படி இத்தன்மைத்தாயிருந்தது; வேந்தே! இவ்விரண்டிலும் இவ்வாறாகிப் பிறப்பது மன்னர்க்கியல்போ? பேயாடக் கூகை பாராட்ட இதுவாகிப் பிறப்பது மன்னர்க்கியல்போ? கூறாய் என்றாள் என்க. (இவ்வாறு மொழிகளை எங்கிருந்தும் எடுத்து மாட்டேற்றுவது நூலாசிரியர் கருத்தாகாது.)
ஓரி - நரி, கேள்விக்கின்னாவாக ஊளையிடும் நரி என்பார் வெவ்வாய் ஓரி என்றார். விளிந்தார் - இறந்தோர். ஈமம் - சுடுகாடு. ஒவ்வாச் சுடுகாடு என்றாள், இறப்போர்க்கே பொருந்துவதன்றிப் பிறப்போர்க்குப் பொருந்தாத இடம் என்பது தோன்ற, உயர் அரங்கின் என்றது இகழ்ச்சி. பேய் வறிய ஆவியே ஆகலின் நிழல்போனுடங்கி என்றாள். முழவம் முழங்க, மணிவிளக்கம் நின்றொளிர, அரண்மனை அரங்கில் மகளிராட, மாந்தர் மகிழ, புலவர் போற்றெடுப்பப் பிறக்க வேண்டிய நீ இவ்வாறாகிப் பிறப்பதோ என்றிரங்கியவாறு.
----------------
-
310. பற்றா மன்னன் நகர்ப் புறமால்
பாயல் பிணம் சூழ் சுடு காடால்
உற்றார் இல்லாத் தமியேனால்
ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருளால்
மற்று இஞ் ஞாலம் உடையாய்! நீ
வளரும் ஆறும் அறியேனால்
எற்றே இது கண்டு ஏகாதே
இருத்தியால் என் இன் உயிரே.
விளக்கம் : மகனையும் உயிரையும் தனித்தனியே முன்னிலைப்படுத்திக் கூறினாள். மற்று : வினைமாற்று. பற்றாமன்னன் - பகைமன்னன். ஆல்: அசைகள். எற்று - எத்தகைய கொடுமைத்து.
-
311. பிறந்த நீயும் பூம் பிண்டிப்
பெருமான் அடிகள் பேர் அறமும்
புறந்தந்து என்பால் துயர்க் கடலை
நீந்தும் புணை மற்று ஆகாக்கால்
சிறந்தார் உளரேல் உரையாயால்
சிந்தா மணியே! கிடத்தியால்
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன்
மம்மர் நோயின் வருந்துகோ.
விளக்கம் : சொல்: கருவியாகுபெயர். வருந்துகு : வருந்துவேன், தனித்தன்மை வினைமுற்று. பேரறப் பூம்பிண்டிப் பெருமானடிகள் என மாறுவர் நச்சினார்க்கினியர்.
விசயையின் துன்ப நிலையைக் கண்டு அஃறிணைப் பொருள்கள் இரங்குதல்
-
312. அந்தோ! விசயை பட்டன கொண்டு
அகங்கை புறங்கை ஆனால் போல்
கந்தார் களிற்றுத் தம் கோமான்
கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து
வந்தாள் போலப் புறம் காட்டுள்
வந்தாள் தமியே என மரங்கள்
சிந்தித்து இரங்கி அழுவன போல்
பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே.
விளக்கம் : (அந்தோ: ஆசிரியருக்குத் தோன்றிய இரக்கத்தைக் குறிப்பது. நச்சினார்க்கினியர், வந்தாள் தமியே என என்பதிலுள்ள என என்னுஞ் சொல்லுடன், அந்தோ எனக் கூட்டி மரங்கள் கூறியதாக ஆக்குவர்.)
-
313. அடர் பொன் பைம் பூண் அரசு அழிய
அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த
இடர் கொள் நெஞ்சத்து இறைவியும்
இருங் கண் ஞாலத்து இருள் பருகிச்
சுடர் போய் மறையத் துளங்கு ஒளிய
குழவி மதிபெற்று அகம் குளிர்ந்த
படர் தீர் அந்தி அது ஒத்தாள்
பணை செய் கோட்டுப் படா முலையாள்.
விளக்கம் : அடர் - தகடுமாம். பொன்அடர் என்க. (துன்பத்தை அடர் அரசு - துன்பத்தை நீக்கிய அரசன் என்பர் நச்சினார்க்கினியர். இறைவியும்: உம்: உயர்வு சிறப்பு. பணைசெய் - பிழைத்தலைச் செய்த) என்பர் நச்சினார்க்கினியர். இதன்கண் இறந்துபட்ட சச்சந்தனுக்கு ஞாயிறும், இடர்கொள் நெஞ்சத்து விசயைக்கு அந்திப் பொழுதும், சீவகனுக்குப் பிறையும் உவமைகள். இவ்வுவமைகள் நினைந்து நினைந்து இன்புறற்பாலன.
சுடுகாட்டில் தெய்வம் ஒன்று உதவி செய்தல்
-
314. தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த போழ்தில்
தான் அமர்ந்து உழையின் நீங்காச் சண்பக மாலை என்னும்
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே.
விளக்கம் : இவன் அரசன் மகனாதலின், அச் சுடுகாட்டில் உறையும் தெய்வம் வந்தது. தெய்வதம் தைவதமென்னும் வடமொழிச் சிதைவு.
-
315. விம்முறு விழும வெந் நோய் அவண் உறை தெய்வம் சேரக்
கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க
எம் அனை தமியை ஆகி இவ் இடர் உற்றது எல்லாம்
செம் மலர்த் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள்.
விளக்கம் : திருவின்: இன்: அசை (ஐந்தனுருபு என்பதே பொருத்தமுடையது.) தெய்வம் கூனியாய் நிற்றலின் உயர்திணையாற் கூறினர். விழுமம் - துன்பம். கொம்மென : விரைவுக் குறிப்பு. கொட்புறுதல் - சுழலுதல். எம்மன்னை எனற்பாலது எம்மனை என நின்றது. அன்பிற்குரியோர் துன்புறக் காண்புழிக் கண்டோர் இது யான் செய்த பாவம் என்று கூறியிரங்குதல் பண்டைக்காலத்தொரு வழக்கு. இதனைப் பெருங்கதையில் துன்ப நிலையிலிருந்த உதயணனைக் கண்ட சாங்கியத்தாய் மாபெருந்தேவி திருவயிற்றியன்ற பெருவிறற் பொலிவே, இனையை யாவது எம்மனோர் வினை என்றிரங்குதலானும் உணர்க. இந்நூலாசிரியரே இனையைநீ யாய வெல்லாம் எம்மனோர் செய்த பாவம் (391) எனப் பிறாண்டும் ஓதுதல் காண்க.
-
316. பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி
நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற
கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே
காவி அம் கண்ணினாய்! யாம் மறைவது கருமம் என்றாள்.
விளக்கம் : பூவினுட் பிறந்த தோன்றற் புண்ணியன் என்றது முருகக்கடவுளை. நிவந்தோங்கு இமயத்து நீலப்பைஞ்சுனைப், பயந்தோர் என்பதுமத்துப் பாயல், பெரும்பெயர் முருக (5-48-50) என்றார் பரிபாடலினும். நா. மொழிக்கு ஆகுபெயர். ஒன்றாது நின்றகோ என்றது கட்டியங்காரனை விசயை நெஞ்சம் நன்கு தேறியிருத்தற் பொருட்டுக் கோவினையடர்க்க வந்து கொண்டுபோம் ஒருவன் இன்னே என்றது தெய்வம் என்க. இது முன்னம் நீ வளருமாறும் அறியேன் என்று வருந்தியதற்குத் தேற்றுரை என்றுணர்க.
-
317. சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
பன் மணி விளக்கின் நீழல் நம்பியைப் பள்ளி சேர்த்தி
மின் மணி மிளிரத் தேவி மெல்லவே ஒதுங்கு கின்றாள்
நன் மணி ஈன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவது ஒத்தாள்.
விளக்கம் : மணியாகிய நா. பன்மணி - உயிர்நீத்தவர் பூண்ட மணி. நீழல் : விகாரம். தெய்வம் ஒரு பள்ளியைத் தேவி அறியாதவாறு அமைத்தது. அது பின்பு ஆசிரியன், பூந்தவிசின் உச்சி (சீவக.386) என்பதனாலும் பெற்றாம்.
-
318. ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்
தீது இல ஆக என்று திரு முலைப் பால் மடுத்துக்
காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்திக்
கோதை தாழ் குழலினாளைக் கொண்டு போய் மறைய நின்றாள்.
விளக்கம் : முற்செய்யுளில் விசயை ஒதுங்குகின்றாள் என்றார். இச் செய்யுளில் அவ்வாறு ஒதுங்கும் விசயையைக் கூனி மறைய அழைத்துச் சென்றாள் என்றார். ஆழிசேர்த்தது அறிந்து வளர்த்தற்கு. (நச்சினார்க்கினியர், முற்செய்யுளையும் இதனையும் ஒரு தொடராக்கி கூனியே நம்பியைப் பள்ளிசேர்த்துத் திருமுலைப்பால் மடுத்து ஆழி சேர்த்தினாள் என்று மாட்டேற்றுவர். அவ்வாறு மாட்டேற்றச் சேர்த்தி என்பதைச் சேர்த்த என்று திரிப்பர்.
-
319. நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகிக்
கொல் வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப்
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல்
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள்.
விளக்கம் : ஒருகணால் என்றதனால் ஒரு கருவிளைமலர் கூறப்பட்டது. நின்னைப் பெறுதற்குரிய நல்வினை செய்திருந்தும் நின்னை வளர்த்தற்கு நல்வினை செய்திலாதேன் என விரிக்க. மாக்கள் - விலங்குகள்; கரி முதலியன. விம்மா - விம்மி; அழுது.
கந்துக் கடன் குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்தல்
-
320. நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனக்
காளக உடையினன் கந்து நாமனும்
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான்.
விளக்கம் : நடப்பது : தொழிற்பெயர். ஊர் கோள் : வினைத்தொகை. கோள் - பாம்புமாம். இதற்குக், கோளொடும் என உம்மை விரிக்க. நாமனும்: உம்மை: சிறப்பு. உடையினன்: முற்றெச்சம். நாள் - அசுவனி முதலிய மீன். ஊர்கோள் - முகில். காளகம் - கருமை. கந்துநாமன் - கந்துக்கடன் என்னும் பெயரையுடையோன். கனை - மிகுதி.
-
321. வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே.
விளக்கம் : தோள் கடைதல் - தழுவுதல் வகை. அணங்குகள் ஆளைக் கடிந்து அணங்கிய காட்டிற்கு அடை. அணங்குகள் = பேய்கள். (இங்குக் கூறிய நிழல்மணி நம்பியின்பால் விசையை வைத்த ஆழியிலிருந்தது.)
-
322. அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்
பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியை
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான்.
விளக்கம் : அருப்பு : அரும்பு என வலித்தது செய்யுள் விகாரம். கிடந்ததென என்பதும் கிடந்தென ஆனது விகாரம். பரப்புபு - பரப்பாநிற்க; வினையெச்சம்.
-
323. புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம்
வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால்
துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான்
சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே.
விளக்கம் : விசையை அச்சத்தால் தன் மனத்திலேயே வாழ்த்திக் கொண்டாள் என்பது தோன்ற ஒரு குரல் என்றார். வனைதல் - கட்டுதல். துனைகதிர் - இருளை நீக்க விரையுங் கதிர், எல்லாப் புலன்களுக்கும் விருப்பமுண்டாவதால், முகப்ப என்றார், மன்னெயின் முகவை (புறநா. 373) என்றார் பிறரும். தும்முதல் நன்னிமித்தம். சீவ : வியங்கோட் பொருளில் வந்த வடசொல். சீவகசாமியை எடுத்து வளர்த்தற்குரிய அறமுடைய கைஎன்பார் வண்கை என்றார். துணைகதிர் : வினைத்தொகை.
-
324. என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
நுன் பழம் பகை தவ நூறுவாய் என
இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள்.
விளக்கம் : நுன் : திசைச்சொல். தவ - மிக. கிளையற நூறுவாயென்பது கருத்து. அரசன் : சச்சந்தன். அவலித்தல்-வருந்துதல். ஐயன் - (சீவகன்) என்றது குழவியை. நூறுதல் - அழித்தல். இறைஞ்சி என்றதனால் இறைவனை என்பது பெற்றாம். இன்பழக் கிளவி - இனிய கற்பகக்கனி போன்ற மொழி.
-
325. ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்
அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே
வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி
விழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான்.
விளக்கம் : கந்துக்கடனுக்கு மக்கள் பிறந்தவுடனே இறந்து கொண்டே வருதலின் அந்நில மாறிக் குழவியாகவே இறவாது நீண்ட நாள்வரை யிருக்கும் மகனை எடுத்துச் செல்வதால், அழிப்பரும் பொன்னுடம்பு உவமையாயிற்று. நச்சினார்க்கினியர் அழிப்பரு விழுத்தவமெனக் கூட்டுவர். தவவுடம்பை இவன் மகனுக் குவமை கூறினார் அவனாலே சீவகனைப் பெறுதலின்.
-
326. மின் அடு கனை இருள் நீந்தி மேதகு
பொன் உடை வள நகர் பொலியப் புக்கபின்
தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்கு
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான்.
விளக்கம் : பொலிய - துன்பம் நீங்கி இன்பம் நிகழ. இன்மொழி : புண்ணியற் பெறுதிர் (சீவக. 1130) என்று முன்னர் முனிவன் கூறியது. முனிவன் கூறியவற்றைப் பின்னர் (சீவக) 1122, 1130 ஆம் பாடல்கள் அறிவிக்கும்.
-
327. பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய
அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்
திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். வருந்தல் : எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. திருந்திய நின்மகன் என்றது தீதின் நீங்கினான் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. தீது - சாக்காடு. மனை - மனைவி.
-
328. கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன்
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை
வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான்.
விளக்கம் : இது மக வழியின் வாழேன் (சீவக. 1124) என்றவள் உயிரையும் மேற்பொருளையுங் கொடுத்தலின் வள்ளல் என்றார். விரகு: விசயை அணிந்ததிலகத்தை மாற்றியும் மோதிரத்தை மறைத்தும் தன் மகனென நம்பும் வகையிற் கொடுத்தல்.
-
329. சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்
விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன
எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல்
கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார்.
விளக்கம் : சுரிமுகம் - சுருளுடைய வாய். துவைத்த : பலவறி சொல். கரிமுகம் - கரிந்தமுகம். மிகுதியாக வழங்கினார் என்பார், சிந்தினார் என்றார். காய்பொன் : வினைத்தொகை.
-
330. அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து
எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்
கழிபெரும் காதலான் கந்து நாமன் என்று
உழிதரு பெருநிதி உவப்ப நல்கினான்.
விளக்கம் : எழுகிளை மகிழ்ந்து - எழுபிறப்பும் எம்மைக் கிளையாக விரும்பி என்றுமாம்.
-
331. திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப்
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை
இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்
செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே.
விளக்கம் : பெற்றென ஆர்த்தி: எனவென் எச்சம் காரணகாரியப் பொருட்டு; மருந்து தின்றெனப் பிணிநீங்கிற்று என்றாற்பொல. செருநிலம் பயப்பு உற - அரசர் பொருத இந்நகரிலேயே சீவகனும் போர்செய்து பிறந்த பயன் உறவேண்டி. ஆழியாற் குலனுணர்தலின் அதற்குரிய தொழிலே கருதினான் கந்துகனும்.
விசயை துறவு நிலையைப் பூணுதல்
-
332. நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
புல் உயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர்
கல் உயிர் காட்டில் கரப்பக் கலம் கவிழ்த்து
அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம்.
விளக்கம் : கரப்ப: செய்விப்பதன் தொழில். கவிழ்த்தல்: காரணம்; அல்லல்: காரியம். காரணம் கருவியில் அடங்கும். உண்ட எச்சில் போல உற்றது என்று இறந்தகாலத்தாற் கூறினார், கதையை உட்கொண்டு. நல்லுயிர் என்றது சச்சந்தனை. புல்லுயிர் என்றது மகவினை. கல்லுயிர் காடு - கல்லை உயிர்த்த சுடுகாடு. கவிழ்த்தவல்லல் எனற்பாலது கவிழ்த்தல்லல் என நின்றது கெடுதல் விகாரம்.
-
333. பொறி அறு பாவையின் பொம் என விம்மி
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள்.
விளக்கம் : பொம்மென : விரைவுக் குறிப்பு. எய்துவது எல்லாம் என்றார், ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி, பன்மைக் காகும் இடனுமாருண்டே (தொல். எச்ச - 65) என்றதனால், நெறிமை: மை : பகுதிப் பொருள் விகுதி. கனவால் ஆக்கமும் உளதென்று கருதியே தேவியின் மனங்கொள்ளுமாறு கூனி தன் தெய்வத்தன்மையால் மேல்வருவன கூறுதலின் அதனை உட்கொண்டு நினைவின் அகன்றாள் என்க.
-
334. பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டே
திரு மகள் தான் இனிச் செய்வதை எல்லாம்
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே.
விளக்கம் : செய்வதை: வினைத்திரிசொல். கேட்டே: ஏ: ஈற்றசை. இருவர்க்கும் ஒருமனம். ஓடு: உடனிகழ்ச்சி. தெருமரு தெய்வம்: புதல்வன் அன்னப் பார்ப்பை முற்பிறப்பிற் பிரித்த தீவினையை உறுகின்ற தன்மையைத் தான் ஆராய்ந்து, அதற்கு அவனை வேறோரிடத்துப் பிரித்து விசயையைத் தனியே கொண்டுபோதற்கு வருந்துகின்ற தெய்வம். செப்பியது: கணவனை யிழந்தார்க்கு நோன்பு கடனாதலின் இயைவதொரு கருமம் விசயைக்குக் கூறியது. அது மேல்வருவது.
-
335. மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
பணி வரும் கற்பின் படை மலர்க் கண்ணாய்
துணி இருள் போர்வையில் துன்னுபு போகி
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம்.
விளக்கம் : பகை நிலத்தை இருளிலேயே கடந்து எல்லைக்கப்பாலுள்ள அமரிகையை அடைவதற்குத் துணிவுகொள் என்றாள், கடத்தற்குரிய விரைவை உட்கொண்டு. ஐம்பால்: ஐந்து வகையாக முடிக்குங் கூந்தல். படை = ஆயுதம். நீலமணியின்கண் பதித்தாற்போன்ற வரியாகிய அறலையுடைய ஐம்பால் என்பதே பொருந்தும். அறல் - அற்றற்றுக் கிடக்கும் வரிகள் என்க. வரியறல்: பண்புத்தொகை. பணிவரும் என்றற்குப் பலரும் தொழுதல் வருதற்குக் காரணமான கற்பெனினுமாம். என்னை? பத்தினிப் பெண்டிரை யாரும் தொழுதல் உண்மையின் என்க. துணி: ஏவல் வினை. அமரிகைப் பேர்யாற்றணி மணல் என மாறுக.
-
336. அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்
குமரிக் கொடி மதில் கோபுர மூதூர்
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்
நமர் அது மற்றது நண்ணலம் ஆகி.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். ஓசனை : வடசொற் சிதைவு. விசயை நோற்பதற்குத் தாபதப் பள்ளி வேண்டுதலானும், அரசனை அமரில் நீத்துப் புதல்வனைப் புறங்காட்டில் விட்டுத் தமரிடஞ் சேரல் ஆகாமையானும், கூனி, நண்ணலமாகி என்றாள். குமரிமதில் கொடிக்கோபுரம் என நிரல் நிரலாக்கினுமாம். குமரி - கன்னிமை; அஃதாவது அழியாமை. தமரியலான் ஓம்பும் என்க. தமரியல் - கேண்மை. நண்ணலம் : தன்மைப் பன்மை.
-
337. வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
கண்டார் மனம் கவர் காவும் கஞலிய
தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள்.
விளக்கம் : வாவி - யாற்றில் உள்ள ஓடை. பொய்கை- மானிடர் ஆக்காத நீர்நிலை. (ஆங்கு: உவம வுருபு என்றும், அத்தாபதர் உறைவதுபோல என அதற்குப் பொருளும் (நச்சினார்க்கினியர்கூறுவர்.) தண்டாரணியம்: தண்டகாரணியம் என்பதன் மரூஉ. தண்டகர் என்னும் ஒரு சாதியினர் உறைதலான் அப்பெயர் பெற்றதென்ப. உறைகுவம்: தன்மைப்பன்மை.
-
338. பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற
மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி
அருள் உடை மாதவர் அத்திசை முன்னி
இருள் இடை மின்னின் இலங்கு இழை சென்றாள்.
விளக்கம் : கேளிரைக் கண்டால் துன்பம் மிகும் என்றும் நோற்பது கருதியதாலும் யான் கருதியதையே கூறினாள் என்னாது அவளே கூறினாளாகக் கொண்டமை தோன்ற, மதித்தனளாகி என்றார். (மகப் பெற்ற புனிறு தீராது (மணி.7,75) இரவிற் சேற லரிதென்று கருதித் தெய்வதம் தன் தெய்வத்தன்மையாற் கொண்டு போகின்ற விரைவு தோன்ற, மின்னின் என்றார் என்பர் நச்சினார்க்கினியர்.) விசையையியல்புக்கு மிகவும் பொருத்தமான மொழியாகலின் பொருளுடை மொழி என்றும், அவட்குப் பெரிதும் நன்மை விளைப்பதாகலின் வாய்மொழி என்றும் கூறினர். உடைமாதர்: வினைத்தொகை. மாதவர் உறையும் அத்திசை என்றொரு சொல் வருவித்துக்கொள்க.
-
339. உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
இருவிலும் எறி மா மகரக் குழைத்
திருவிலும் இவை தேமொழி மாதரைப்
பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே.
விளக்கம் : இரு வில் - கரிய வொளி இருங்கண் யானை (பதிற்) என்பது போல. அதர் போக்குவ: விளக்கு (இதனை ஆகுபெயரென்பர் நச்சி.) உருவமாமதி - அழகிய முழுத்திங்கள். திருவிலும் ஆகிய இவை என்க. பொருவில் என்பதற்கு நெடுமையால் ஒப்பற்ற என்பது சிறப்பு. என்னை? இரவில் போவார்க்கு வெப்பங் கூறவேண்டாமையின் என்க. போக்குவ: பலவறி சொல்; இது காரிய ஆகுபெயர். விளக்கு என்னும் பொருட்டென்க.
-
340. சிலம்பு இரங்கிப் போற்று இசைப்பத்
திருவில் கை போய் மெய் காப்ப
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும்
ஓங்க எறிவேல் கண்
மலங்க மணி மலர்ந்த பவளக்
கொம்பு முழு மெய்யும்
சிலம்பி வலந்தது போல்
போர்வை போர்த்துச் செல்லுற்றாள்.
விளக்கம் : வலம்புரி சலஞ்சலம் வளைஇய தொத்தவளாதலின் (சீவக - 184) மணியைப் பூத்ததொரு பவளக் கொம்பைச் சிலம்பி சூழ்ந்தது போல மெய்ம் முழுதும் போர்வையாலே மறைத்துச் செல்லலுற்றாள். தானுங் கூனியுமே செல்வதால் அஞ்சி மலங்கினாள்.
-
341. பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள்
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே.
விளக்கம் : ஏ: ஈற்றசை: (நச்சினார்க்கினியர் தேற்றம் என்பர்.) மற்றும் அவர், குருதிகான்று குஞ்சித்து அசைந்தசைந்து செல்வதைப் பஞ்சியடரையும் அனிச்சத்தையுங் கண்டே என்று மாட்டேற்றுவர். மற்றும் நடந்ததே என்பதற்கு நடந்த தன்மையே என்று பொருள் கூறுவர்.) அடர் - நெருக்கம். மயில் என்றதற்கேற்ப நடந்தது என்றார்.
-
342. தடங் கொள் தாமரைத் தாது உறை தேவியும்
குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே.
விளக்கம் : என்ப, ஏ: அசைகள். (நச்சினார்க்கினியர், 338-முதல் 342-வரை ஐந்து செய்யுட்களையும் ஒரு தொடராக்கி மாட்டேற்றிக் கூறும் முடிபு: கூனி மொழிகளை விரும்பினளாய்க் கூற, அதனை மாதர் மதித்தனளாய், மாதவரிருக்கின்ற அத்திசையைக் கருதிப் போர்வை போர்த்து அருங்காட்டிலே இடை நுடங்கக்கையைவீசி, நடைக்கு வருந்தாததொரு மயில் நடந்த தன்மையே மலரடிகளாலே செல்லலுற்றாள்; அப்பொழுது, இருவிலும் திருவிலும் மாதரை இரவிடை வழிபோக்கும் விளக்குப் போன்றன. அவ்விளக்கிலே கூனியொழிய வேறோருவ ரின்மையின், கண் அலமருதலாற் சிலம்பு இசைப்பத் திருவிற் காப்பக் கிண்கிணியும் கலையும் ஏங்கக் கடங்களும் மலையுங் கடந்து, அந்த இலங்கிழை மின்போலச் சென்றாள்; இங்ஙனஞ் சென்ற தாமரைத் தாதுறை தேவியும் அவளுக்கு ஏற்பச் சென்ற கூனியும் பின்னர் யாற்றிடைக் குறையைச் சேர்ந்தார் என்க.
-
343. எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர்
மல்லல் மாக் கடல் தோன்றலும் வைகிருள்
தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய
அல்லல் வெவ்வினை போல அகன்றதே.
விளக்கம் : மல்லல்: மணி முதலியன. (எய்திய எல்லை என்று மாற்றி அவர்கள் ஆங்குச் சென்ற அளவிலே என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.) எல்லை எய்திய என்றற்கு உலகம் பகற்பொழுதை எய்துதற்பொருட்டெனினுமாம். தொல்லை நல்வினை - பழைய நல்வினை. விசயையின் தீவினை நுகர்ச்சிக்கு இரக்கமுடையராய் இதுகாறும் ஓதிவந்த நூலாசிரியர் இவ்விடியல் அவள் தீவினைக்கும் ஒரு விடியலாதல் கருதி அத் தீவினையையே இருட்கும் இனி அவட்கெய்தும் நல்வினையையே ஞாயிற்றொளிக்கும் உவமையாக எடுத்தமை நினைந் தின்புறற்பாற்று.
-
344. நுணங்கு நுண்கொடி மின் ஓர் மழை மிசை
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள் அரோ
நிணம் கொள் வைந்நுதி வேல் நெடும் கண்ணினாள்.
விளக்கம் : நுணங்கு நுண்கொடிமின் - மிக மிக நுணங்கிய கொடி மின்னல். இது விசயைக்குவமை. பொழில் அல்லது அப்பொழிலிடத்து மணற்பரப்பு முகிலுக்கு உவமை என்க. அணங்கு நுண்டுகில் - காண்போர் கண்ணை வருத்தும் நுண்ணிழையையுடைய துகில் என்க. வைந்நுதி - கூர்த்த நுனி.
-
345. வைகிற்று எம் அனை வாழிய போழ்து எனக்
கையினால் அடி தைவரக் கண் மலர்ந்து
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி
மொய் கொள் பூமி முளைப்பது போலவே.
விளக்கம் : தெய்வம் கூனி வடிவாய் நிற்றலின் தன் தொழிலுக்குத் தக்கவாறு அடி தைவந்தது. தனக்குத் துன்பம் நேர்ந்த பிறகு இப்போதுதான் துயின்றாளாதலின், துயிலும்போது கனவில் தன் வாழ்வின் அலங்கோலத்தைக் கண்டிருப்பாளாதலின் ஐயவோ என இரங்கினாள். மற்றும் அரசனைக் கனவிற் கண்டு விழித்துப் பார்க்கையில் நனவாகாமையின் ஐயவோ என்றாள் எனலுமாம். ஐய! என்பது அரசனை விளிப்பதும், ஓ: இரக்கக் குறிப்பும் ஆகும். ஆய்மதி - ஒளியற்ற மதி. அதுவும் விடியலில் தோன்றும். மொய்-செறிவு. ஆய்மதி தோன்றல் முகமெடுத்தற்கு உவமை. அன்னை, ஈண்டு முறைப் பெயரன்மையின். அன்னை யென்னை (தொல் -பொருளியல்-52) என்பதாற் கொள்க.
-
346. தூவி அம்சிறை அன்னமும் தோகையும்
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு
ஆவித்து ஆற்று கிலாது அழுதிட்டவே.
விளக்கம் : ஏ: தேற்றம். மயில் முதலிய பறவைகளும் மானினமும் தமக்கியல்பாக நிகழ்த்தியகொட்டாவி கொள்ளுதலையும் ஆரவாரித்தலையும் விசயையின் நிலைக்கு இரங்கியனவாகத் தம் குறிப்பை ஏற்றினார். அன்னம் முதலியவை காலையிற் கொட்டாவி கோடல் இயல்பு எனத் தெரிகிறது. நச்சினார்க்கினியர், தமக்கு இவை இயல்பாகக் காலையிற் செய்தன அல்ல என்க என்பர்.
-
347. கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள்
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே.
விளக்கம் : போதிற்கொடி : திருமகள். உம்மை - முற்பிறப்பு. எய்தினாள் என்றது நல்வினை வந்து தலைப்படுதலானே எய்தினாள் என்பதுபட நின்றது.
-
348. வாள் உறை நெடுங் கணாளை
மாதவ மகளிர் எல்லாம்
தோள் உறப் புல்லுவார் போல்
தொக்கு எதிர் கொண்டு புக்குத்
தாள் உறு வருத்தம் ஓம்பித்
தவ நெறிப் படுக்கல் உற்று
நாள் உறத் திங்கள் ஊர
நல் அணி நீக்குகின்றார்.
விளக்கம் : முன்னர் ஊடலால் தன் கணவனுக்கு வருத்த மூட்டிய கண்கள் என்பதற்கு, வாளுறை நெடுங்கணாள் என்றார். அங்ஙனமின்றித் தவநெறி விழைந்து வரும் இவள் கண்களைப் பிறர்க்கு வருத்த மூட்டுங் கண்கள் என்றல் பொருந்தாமை உணர்க. மாதவஞ் செய்வார் பிறரைத் தழுவலாகாமையின் புல்லுவார் போல் என்றார். விசயை கொண்ட தவநெறி கணவனை யிழந்ததற்கும் மகன் ஆக்கத்திற்கும் பொருந்தியதாகும். விசயை நீக்குவதை, ஏவினாரைக் கருத்தாவாகக் கொண்டு அவர்மேல் ஏற்றினார். அரசரெடுத்த தேவகுலம் போல.
-
349. திருந்து தகரச் செந் நெருப்பில்
தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
கருங் காழ் அகிலின் நறும் புகையில்
கழுமிக் கோதை கண் படுக்கும்
திருந்து நானக் குழல் புலம்பத்
தேனும் வண்டும் இசைப் புலம்ப
அரும் பொன் மாலை அலங்கலோடு
ஆரம் புலம்ப அகற்றினாள்.
விளக்கம் : புலம்ப -தனிப்ப என்றுமாம். தகரம்: ஒருவகை மணமரம். கண்படுத்தலாவது பொருந்தியிருத்தல். தேனும் வண்டும் இனங்கள். பொன்னரிமாலை - பொன்னை அரிந்து தொடுத்த மாலை.
-
350. திங்கள் உகிரில் சொலிப்பது போல்
திலகம் விரலில் தான் நீக்கிப்
பைம்பொன் மகர குண்டலமும்
பாவை கழுத்தின் அணிகலமும்
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி
வேல் கண் பாவை பகை ஆய
அம் கண் முலையின் அணி முத்தும்
அரும்பொன் பூணும் அகற்றினாள்.
விளக்கம் : இன்பத்தால் அவனைக் கெடுத்தலின் தனக்குப் பகையாயின முலைகள். உகிரிற் சிதைப்பது போல் என்றும்பாடம். திங்கள்: திலகத்திற்கு உவமை. உகிர் - நகம். சொலித்தல் - உரித்தல்; மாசில் காம்பு சொலித்தன்ன எனவரும் சிறுபாணாற்றுப்படையினும் அஃது அப் பொருட்டாதல் உணர்க.
-
351. பஞ்சி அனைய வேய் மென் தோள்
பகுவாய் மகரம் கான்றிட்ட
துஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம்
தொழுதேன் உம்மை எனத் துறந்து
அஞ்சி வருத்து நுசுப்பினாள்
வளை கை உடைத்து மணிக் காந்தள்
அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ்
அரும் பொன் ஆழி அகற்றினாள்.
விளக்கம் : மகரமீன் முத்தை உமிழ்வது போற் செய்திருப்பது தோளணி. அரசன் நீங்காமல் தழுவுதற்குக் காரணமாய்த் தன்னைக் கெடுத்தலின், தொழுதேன் என்று இகழ்ந்தாள். வளை கழற்றலரி தாகையால் உடைத்தாள். மணி - அழகு. முத்தம்: அண்மைவிளியுமாம்.
-
352. பூப் பெய் செம் பொன் கோடிகமும்
பொன் ஆர் ஆல வட்டமும்
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும்
அரவின் பையும் அடும் அல்குல்
வீக்கி மின்னும் கலை எல்லாம்
வேந்தன் போகி அரம்பையரை
நோக்கி நும்மை நோக்கான் நீர்
நோவது ஒழிமின் எனத் துறந்தாள்.
விளக்கம் : அரம்பையரை மெய்யுறு புணர்ச்சியின்றி நோக்கால் நுகர்தல் இயல்பாதலால், நோக்கி என்றார். எனினும் நும்மை நோக்கான் என்பதற்கு, நும்மாலான பயனைக் கொள்ளான் என்றே பொருள் கொள்க. இது கண்ணால் நோக்காமல் மனத்தால் நோக்கும், நோக்கல் நோக்கம் (தொல் - வேற்றுமை மயங்கு - 10) எனப்படும்.
-
353. பிடிக்கை போலும் திரள் குறங்கின்
அணியும் நீக்கிப் பிணை அன்னாள்
அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும்
விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல்
கொள்ளத் தோன்றி அணங்கு அலற
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம்
உரவோன் சிறுவன் உயர்க எனவே.
விளக்கம் : கொடிப்பூத்து உதிர்ந்த : ஒற்றுமையாற் சினைவினை முதன்மேல் ஏற்றினார். கல் - காவிக்கல். உயர்க என்றார் நோன்பின் பயன் அதுவாகலின். உரவோன் சிறுவன் என்றாள், பகையை வெல்லப் பிறந்ததால்.
-
354. பால் உடை அமிர்தம் பைம் பொன்
கலத்திடைப் பாவை அன்ன
நூல் அடு நுசுப்பின் நல்லார்
ஏந்தவும் நேர்ந்து நோக்காச்
சேல் அடு கண்ணி காந்தள்
திருமணித் துடுப்பு முன் கை
வால் அடகு அருளிச் செய்ய
வனத்து உறை தெய்வம் ஆனாள்.
விளக்கம் : பைம்பொற் கலத்திடைப் பாலடிசிலைப் பணிமகளிர் ஏந்தவும் நேர்ந்து நோக்கா நிலை செல்வச் சிறப்பைக் காட்டுகிறது. இப்போது தன் கையே இலைக்கறியை அருளிச் செய்ய இருத்தல் வறுமைக் கொடுமையைக் காட்டுகிறது. எனவே, செல்வம் நிலையாமை ஈங்குக் கூறப்படுகிறது. ஆனால், நச்சினார்க்கினியர், உணவு ஒழிந்து நுகர்ச்சியே நிகழ்ந்தமையின் நோக்கிலள் என்பர். நுகர்ச்சியினால் மெய்சோர்ந்தால் உணவு முதலியன கொண்டு சோர்வைப் போக்க வேண்டுதலின் உணவு ஒழிந்து நுகர்ச்சி நிகழ்தல் இயல்பன்று. அமிர்தம் - அடிசிலுக்கு உவமவாகுபெயர். பாவை - கொல்லிப் பாவை. காந்தளினது திருமணித் துடுப்புப்போன்ற முன்கை என்க. அருளிச்செய்ய என்றது அருள என்னும் ஒருசொன்னீர்மைத்து. இதனை, அருளி என்றும், செய்ய என்றும் பிரித்து நச்சினார்க்கினியர் அருளி என்பதனை அருள என்று திரித்தும், செய்ய என்பதனைத் தெய்வத்திற்கு அடையாக்குவர். இங்ஙனம் செய்தலிற் போதப்பயனின்மை காண்க.
விசயையுடன் வந்த தெய்வம் விடைபெற்றுச் செல்லுதல்
-
355. மெல் விரல் மெலியக் கொய்த
குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில்
அணில் விளித்து இரிய ஆமான்
புல்லிய குழவித் திங்கள்
பொழி கதிர்க் குப்பை போலும்
நல் எழில் கவரி ஊட்ட
நம்பியை நினைக்கும் அன்றே.
விளக்கம் : கவரி - கவரிமான்: சினையாகு பெயர். ஆம்பலல்லி: இரு பெயரொட்டு. அல்லி : அரிசியை உணர்த்தியதால் பொருளாகு பெயர். குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை (தொல் - மரபு- 19) என்றதனுள், கொடை என்றதனால், ஆமான் குழவியுங் கொண்டவாறு உணர்க. (நச்சினார்க்கினியர் ஆமான் குழவியைப் புல்லிய கவரி என்று கொண்டு கூட்டுவார்.) இச்செய்யுள் திருத்தக்கமுனிவரின் தலைசிறந்த நல்லிசைப் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும் பெருமையுடைத்தாதலுணர்க. இக்கருத்தின் அழகினைக் கண்ட கம்பநாடர் தங்காவியத்தே,
ஏர்குலா முகத்தினாளை இறைமுக மெடுத்து நோக்கித்
தார்குலா மலங்கன் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் (கிட்கிந்தை - 51)
என்று அழகுற அமைத்துக்கொண்டனர்.
-
356. பெண்மை நாண் வனப்புச் சாயல்
பெரு மட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி
உருவு கொண்ட அனைய நங்கை
நண்ணிய நுங்கட்கு எல்லாம்
அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம்
கரந்து உரைத்து எழுந்தது அன்றே.
விளக்கம் : பெண்மை - அமைதித் தன்மை. மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. மாது - காதல்: மாதர் என்னும் உரிச் சொல் ஈறு திரிந்தது.
-
357. உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆய் இடை
மறுவில் வெண் குடை மன்னவன் காதல் அம்
சிறுவன் தன்மையைச் சேர்ந்து அறிந்து இவ்வழிக்
குறுக வம் எனக் கூனியைப் போக்கினாள்.
விளக்கம் : ஆயிடை : சுட்டு நீண்டதால் யகரந் தோன்றியது; அவ்விடம் என்று பொருள். ஓடல் : எண்ணம் ஓடுதல். சேடியை வம் மென உயர்த்துக் கூறினாள் தான் நிற்குந் தவநிலைக் கேற்ப. (தெய்வம் தன் தெய்வத் தன்மையால் விசயைக்கும் தன் மகனைக் காக்கக் கூனி செல்ல வேண்டு மென்ற எண்ணத்தை உண்டாக்கியது என்பர் நச்சினார்க்கினியர்.)
-
358. நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்
பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்பச் சென்று
இஞ்சி மா நகர்த் தன் இடம் எய்தினாள்.
விளக்கம் : தெய்வம் தன்னெஞ்சின் அங்ஙனமே வருகுவன் என்று ஒப்புக்கொண்டு அங்ஙனம் ஒப்புக்கொண்டமை நெஞ்சறிந்த வஞ்சகமாதற்கு வருந்திற்றென்க. இஃது அத்தெய்வத்தின் மாசற்ற உளத்தினை நன்கு காட்டுகின்றது. வஞ்சியங் கொம்பனாள் என்றது தெய்வத்தை. தன்னிடம் : சுடுகாடு.
-
359. தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று
ஆனியம் பல ஆசையில் செல்லுமே
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே.
விளக்கம் : மானின் : இன் : சாரியை. இச்செய்யுள் அவலச் சுவைக்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும். தன்னுணர்வின் என்றது தனக்குரிய பெண்மையுணர்வினால் என்றவாறு. ஆற்றவும் - மிகவும். ஆனியம் - (ஆநியம்) நாள்; பகலுமாம்; பயங்கெழு வெள்ளிய ஆநிய நிற்ப எனவரும் பதிற்றுப் பத்தானும் அஃது அப்பொருட்டாதலறிக.
-
360. மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்
கட்டு அழல் எவ்வம் கைம் மிக நீக்கிக் களிகூர
விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப் பால்
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன்.
விளக்கம் : அகல்வு - அகற்சி. வேட்கையின் : இன் : சாரியை. பகர்கு : தன்மை யொருமை வினைமுற்று. (என்றது தம்மால் சரிதம் கூறுதல் அரிதாகலின், இனி வேட்கையால் கடுகக் கழியும் பொழுது என்றுமாம் என்று கூறுகிறார் நச்சினார்க்கினியர்.) ஈண்டு என்றது ..... பொழுதென்றுமாம் என்றுள்ள நச்சினார்க்கினியர் விளக்கம் நன்கு தெளியத் தோன்றவில்லை. அது என்றது தம்மாற் சரிதம் கூறுதல் அரிதாகவும் வேட்கையினாலே (ஓடும் பொழுதிப்பால்) கடுகக் கழியாநின்ற அப்பொழுதிற்கு இப்பால் பட்டதை எல்லாம் பகர்குற்றேன்என்றார் என்னும் கருத்துடையதாக இருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது.
-
361. கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்
சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார்.
விளக்கம் : கொல்நுனை : வினைத்தொகை. (மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பு என்பதற்குச் சொல்லப்புகின், சொலும் அஞ்சும்கற்பு என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.) சீவகன் சீவித்தலையுடையவனென்று தெய்வம் வாழ்த்தினமையின் அப்பெயரே ஆயிற்று. மாற்றம் அஞ்சும் கற்பு என்பதற்கு, கற்பெனப்படுவது சொற்றிறம்பாமையேயாகலின், கணவன் சொற்றிறம்புதற்கு அஞ்சும் கற்பு என்றலே நேரிதாம்.
-
362. மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்
ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்தப்
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்
மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான்.
விளக்கம் : புண்ணியன் என்றார் திரிபுரத்தை அழித்தும் நஞ்சுண்டும் பல்லுயிர்களையுங் காத்தலின். மா - ஈண்டு அழகு. மதி - பிறை. போகம் ஈன்ற புண்ணியன் என்றது திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளை. அவன் உலகிற்குப் போகமளித்தலை, போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார் எனவும், இடப்பாக மாதராளோடியைத் துயிர்க்கின்பம் அடைப்பானாம் எனவும் வரும் சிவஞானசித்தியாரானும் (சுபக்.701-74) உணர்க. கணை - திருமால். விரிசடைக் கடவுள் திரிபுரம் எரித்தகாலைத் திருமால் கணையாக விருந்தான் என்பது புராணம்.
-
363. அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்பப்
பைம் பொன் பூமிப் பல் கதிர் முத்தார் சகடமும்
செம் பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே.
விளக்கம் : ஐவர் : பாராட்டுவாள், பாலூட்டுவாள், தாலாட்டுவாள், சொல் கற்பிப்பவள், கையில் ஏந்தி வளர்ப்பவள். குழவிப் பருவத்தும் கொடை யியல்பாகையால், நிதி சிந்தி என்றார். நாளின் : இன்: சாரியை.
-
364. பல் பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனி வானத்து
எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும்
கொல்லும் சிங்கக் குட்டியும் போன்று இவ் உலகு ஏத்தச்
செல்லும் மன்னோ சீவகன் தெய்வப் பகை வென்றே.
விளக்கம் : சீவகனுடன் வளரும் பல தோழமைச் சிறுவர்களிற் சிறந்தமையின் தாமரை மலர் உவமம். உடன் வளர்வோர் சீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன் எனும் நால்வரும் சச்சந்தனுடைய அகப்பரிவார மகளிராகிய ஐந்நூற்றுவர் மக்கள் ஐந்நூற்றுவரும் ஆகியோர். கட்டியங்காரன் வருத்துவதால் அஞ்சிய இவர்களின் பெற்றோர்கள் இவர்களைக் கந்துக்கடனிடம் விடுத்து வளர்க்க வேண்டினர் என்பர். இவர்களிற் சச்சந்தன் அமைச்சரில் ஒருவனான சாகரனுக்கும் குருதத்தைக்கும் மகன் சீதத்தன். சச்சந்தன் படைத்தலைவன் அசலனுக்கும் திலோத்தமைக்கும் பிறந்தவன் புத்திசேனன். சச்சந்தன் நண்பனான தனபாலன் என்னும் வணிகனுக்கும் பவித்திரைக்கும் பிறந்தவன் பதுமுகன். சச்சந்தனின் மற்றொரு நண்பன் விசயதத்தனுக்கும் பிரீதிமதிக்கும் தோன்றியவன் தேவதத்தன். (வானிடத்துத் தேவர் முதலாயினாரிடத்தும் இன்பமுறப் பரக்கின்ற மதியாவது அறிவு; அது ஒரு வடிவு கொண்டாற் போன்றும் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார் (தொல் -மரபு - 10) என்றதனாள், கூற்று என்றதனாற், புலி முதலியவற்றிற்குக் கூறிய இளமைப் பெயர் சிங்கத்திற்குங் கொண்டார். தெய்வப்பகை - வால சிகிச்சை யென்னும் நூலிற் கூறிய தெய்வப் பகை.
-
365. மணியும் முத்தும் மாசு அறு பொன்னும் பவளமும்
அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கிக்
கணிதம் இல்லாக் கற்பகம் கந்துக் கடன் ஒத்தான்
இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்பக் கொடி ஒத்தாள்.
விளக்கம் : கற்பகம் வேண்டின பிறகே நல்கும்; மாரி வேண்டாமலே நல்கும். கந்துக்கடன் இரண்டையும் இவ் விருவகைக் கொடையாலும் ஒத்தான். (கணிதம் இல்லாக் கந்துக்கடன் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.) சுநந்தை: தலைக்குறையாக நந்தை என வந்தது. இது குடுமி வைத்தற்கு முன்புள்ள கருமங்களிலும் நாடொறும் நடத்துங் கருமங்களிலும் கொடைக்கடன் அமர்ந்தமை கூறினார்.
-
366. சாதிப் பைம் பொன் தன் ஒளி வௌவித் தகை குன்றா
நீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப்
போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான்.
விளக்கம் : சாதிப் பைம்பொன் தன்னொளி வெளவி என்றதனால் மெய்யொளியும் நிறமும் உண்டாயினதைக் கூறினார். அந்தணன் மகன்: இயல்பான அறிவிற்கு உவமை. இனித், தீர்த்தங்கரரில் ரிஷபஸ்வாமி மகன் பரதராச சக்கரவர்த்தி யென்றும் உரைப்பர். நிறைவு எய்தி (கல்விகற்கும் பருவம் நிறைந்து.) என்றதனாற் கற்பதற்குமுன் ஒழுக்கமும் இயற்கை யறிவும் அமைய வேண்டுமென்பது கருத்தாயிற்று. நீதிச் செல்வம் நீந்தி மேன்மேல் நிறை வெய்தி என்று மொழி மாற்றி, சௌளச்சடங்கு கடந்து நாமகளைப் புணரும் பருவம் முறையே நிறைந்து என்று பொருள் கூறி, க்ஷத்திரியனுக்கு வைதிகம் வேண்டுதலின் சௌளத்திற்கு முன்புள்ள கன்மமும் சௌளமுங் கூறினமையான், மேலும் உபநயனம் முதலியனவும் விரியக் கூறாராயினும் அவ் விடங்களிலே குறிப்பான் உணர்க என்று விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். நாமகளைப் புணரும் பருவம் - கல்வி கற்கும் பருவம்.
-
367. நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள்.
விளக்கம் : இது சுநந்தையின் தொழிலாதலின் அவள் சான்றோரிடம் கூறினாள். செல்வச் செருக்கின்றிக் கலை கற்கவேண்டுமாதலின், பூமகள் புலம்பி வைக என்றார். பல நூல்களைக் கற்கவே வெற்றியும் புகழுமுண்டாம் என்று, தளைபரிய மையாடுக என்றனள். இனி, இச்செய்யுளில் பூமகள் என்பதனை நிலமகள் என்று கொண்டு நோற்றும் பெற்றிலேன் என்று புலம்பிக்கிடப்ப எனினுமாம். மையாடல் - மையோலை பிடித்தல்; கற்கத் தொடங்குங்காற் செய்வதொரு சடங்கு. இதனை இக்காலத்தார் சுவடி தூக்கல் என்பர்.
-
368. முழவு எனத் திரண்ட திண் தோள்
மூரி வெம் சிலையினானும்
அழல் எனக் கனலும் வாள் கண்
அவ் வளைத் தோளி னாளும்
மழலை யாழ் மருட்டும் தீம் சொல்
மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும்
குமரியைப் புணர்க்கல் உற்றார்.
விளக்கம் : குழைமுக ஞானமென்னுங் குமரி என்பது குழையப் பண்ணுகின்றமுடையஞானமென்னுங்குமரி என்னும் பொருளையுந் தோற்றுவித்தது. குழைவு - அருள். கலை எப்போதும் அழிவற்றதாகலின், குமரி என்றார். (நச்சினார்க்கினியரோ, வேறு தன் கருத்தறிவார், இன்றி இவனே தன் கருத்தறியத் தான் அழியா திருத்தலின் குமரி என்றார் என்பர்.) மதலையைக் குமரியைப் புணர்க்கலுற்றார் என்பது, சாத்தனை நூலைக் கற்பிக்கலுற்றார் என்றாற் போல நின்றது.
சீவக நம்பியும் அச்சணந்தி அடிகளும்
-
369. அரும் பொனும் மணியும் முத்தும்
காணமும் குறுணி ஆகப்
பரந்து எலாப் பிரப்பும் வைத்துப்
பைம் பொன் செய் தவிசின் உச்சி
இருந்து பொன் ஓலை செம் பொன்
ஊசியால் எழுதி ஏற்பத்
திருந்து பொன் கண்ணியாற்குச்
செல்வியைச் சேர்த்தினாரே.
விளக்கம் : பிரப்பு - தெய்வத்திற்குப் படைத்தற்பொருட்டு ஒவ்வொன்றும் குறுணியளவிற்றாக் கூடையிலிட்டு வைக்கும் பொன் அரிசி முதலியன. சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ (234) என்றார், திருமுருகாற்றுப்படையினும். ஆசிரியன் முதலியோர் என எழுவாய் வருவித்தோதுக. மனங்கொள்ளும்வகை என்பார் ஏற்ப என்றார். கண்ணியான் : சீவகன். செல்வி : நாமகள்.
-
370. நாமகள் நலத்தை எல்லாம்
நயந்து உடன் பருகி நல் நூல்
ஏ முதல் ஆய எல்லாப்
படைக் கலத் தொழிலும் முற்றிக்
காமனும் கனிய வைத்த
புலம் கரை கண்டு கண் ஆர்
பூ மகள் பொலிந்த மார்பன்
புவிமிசைத் திலம் ஒத்தான்.
விளக்கம் : சொல்லாற் கூறுவன எல்லாம் அடங்குதற்கு, எல்லாம் என்றார். (பருகி எனவே தன் குலத்திற்குரிய வேதமும் அதிகரிக்க வேண்டுதலின் ஈண்டே உபநயனமுங் கூறினார், இது, சாம கீத மற்றுமொன்று சாமி நன்கு பாடினான் (சீவக-2038) என்பதனானும் பிறவற்றானும் உணர்க, - நச்சி.) புலம் - அறிவு. அது நூலுக்கானதால் காரிய ஆகுபெயர். இசை கூறவே கூத்தும் அடங்கும். முன் நூல்களைக் கற்றதற்கேற்பத் தொழில்களைக் கற்றானென்றார். நாமகணலம் - கலையழகு. நயந்துடன் பருகி என்றதனால் பருகுவார் அன்ன ஆர்வமுடையராய்க் கற்கும் தலைமாணாக்கர் தன்மை யுடையனாய் என்பது போதரும். கலை உணர்ச்சியால் நுகர்வதாகலின் பருகி என்றார். காமனுங் கனியவைத்த புலம் என்றது இசையையும் நாடகத்தையும். பூமகள் பொலிந்த மார்பன் நாமகள் பொலிந்த உளத்தனாய்த் திலகம் ஒத்தான் என்க.
-
371. மின் தெளித்து எழுதி அன்ன
விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார்
பொன் தெளித்து எழுதி அன்ன
பூம் புறப் பசலை மூழ்கிக்
குன்று ஒளித்து ஒழிய நின்ற
குங்குமத் தோளினாற்குக்
கன்று ஒளித்து அகல வைத்த
கறவையில் கனிந்து நின்றார்.
விளக்கம் : மின் தெளித்து எழுதி அன்ன நுசுப்பின் நல்லார் என்பது, தெளித்த சொல் தேறியார்க்கு (குறள் - 1154) என்றாற் போல வந்தது. இனி மின்னைக் கரைத்தெழுதி அன்ன நல்லாருமாம். புறம் - தம் மெய்யிடம். இதனாற் குலக் கன்னியரைக் கூறினார். குன்று ஒளித்தொழிய நின்ற தோள் - இவற்றை ஒவ்வேமென்று மலைகள் மறைந்துபோதற்குக் காரணமான திண்மையும் பெருமையுமுடைய தோள் என்க. கறவை - கற்றா.
-
372. விலை பகர்ந்து அல்குல் விற்கும்
வேலினும் வெய்ய கண்ணார்
முலை முகந்து இளையர் மார்பம்
முரிவிலர் எழுதி வாழும்
கலை இகந்து இனிய சொல்லார்
கங்குலும் பகலும் எல்லாம்
சிலை இகந்து உயர்ந்த திண் தோள்
சீவகற்கு அரற்றி ஆற்றார்.
விளக்கம் : அல்குல் விற்குங் கண்ணார் - அல்குலை விற்றற்குக் காரணமான கண்ணார் : இவர்கள் பரத்தையரிற் கன்னியர். இனிய சொல்லார் : போகம் நுகரும் பரத்தையர். இவர்கள் இற்பரத்தையரும் சேரிப்பரத்தையரும். இற்பரத்தையர் மட்டும் ஒருவனுக்கே உரியர்; காமக்கிழத்தியர் என்றுங் கூறப்படுவர். மற்றவர் (சேரிப்பரத்தையர்) யாரையும் விரும்புவோர்; வரைவின் மகளிர். வேலினும் வெய்யகன் என்றது அல்குல். விற்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. களவு குடிகொள்ளும் கண் என்ற நச்சினார்க்கினியர் விளக்கத்திற்குரிய சொற்கண்டிலேம். முரிவிலர் : முற்றெச்சம். கலையிகந்து என்புழி இகந்து என்பதனை இகந்த எனத் திரித்துக்கொள்க.
சீவகன் வளர்தல்
-
373. வான் சுவை அமிர்த வெள்ளம்
வந்து இவண் தொக்கது என்னத்
தான் சுவைக் கொண்டது எல்லாம்
தணப்பு அறக் கொடுத்த பின்றைத்
தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச்
சீவக குமரன் என்ற
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு
உறுதி ஒன்று உரைக்கல் உற்றான்.
விளக்கம் : கொண்ட தெல்லாம் ; ஒருமைப் பன்மை மயக்கம். (வான்சுவை அமிர்தவெள்ளம் வந்து இவண் தொக்கதென்ன உறுதியொன்றுரைக்க லுற்றான் என்றுங் கூட்டலாம் என்பர் நச்சினார்க்கினியர்.) இச்செய்யுள் கலையின்பத்திற்கு அழகான உவமை எடுத்துக் கூறுகின்றது. கலையைச் சுவையமிர்தம் எனவே அதனை நுகர்வோர் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் எனவும், தான் சுவைக்கொண்ட தெல்லாம் எனவே, தாமின்புறுவது எனவும் வரும் வள்ளுவர் அருள்வாக்கு நினைவில் முகிழ்க்கின்றன.
-
374. நூல் நெறி வகையின் நோக்கி
நுண்ணிதின் நுழைந்து தீமைப்
பால் நெறி பலவும் நீக்கிப்
பருதி அம் கடவுள் அன்ன
கோன் நெறி தழுவி நின்ற
குணத்தொடு புணரின் மாதோ
நால் நெறி வகையில் நின்ற
நல் உயிர்க்கு அமிர்தம் என்றான்.
விளக்கம் : நிறத்தாலும் இருள் நீக்கத்தாலும் ஞாயிறு உவமை. குணம்: இரத்தினத்திரயம். அவை: நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம். நானெறி : நரகர், விலங்கு, மக்கள், தேவர் ஆகிய உயிர்கள் செல்லும்நெறி. நல்லுயிர் - வீடு பேறு விழையும் உயிர். இதனைப் பவ்விய சீவன் என்பர் வடநூலார். நூல்நெறி - இறைவன் ஓதிய ஆகமவழி. இச்செய்யுள்,
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு
என்னுமருமைத் திருக்குறளை நினைப்பிக்கின்றது.
-
375. அறிவினால் பெரிய நீரார்
அருவினை கழிய நின்ற
நெறியினைக் குறுகி இன்ப
நிறை கடல் அகத்து நின்றார்
பொறி எனும் பெயர ஐ வாய்ப்
பொங்கு அழல் அரவின் கண்ணே
வெறி புலம் கன்றி நின்றார்
வேதனைக் கடலுள் நின்றார்.
விளக்கம் : தீவினை கழிய நின்ற நெறியைச் சன்மார்க்கம் என்றும், இன்ப நிறைகடலை, அனந்தசுகம் என்றும் வடநூல்கள் கூறும். நிறைக்கடல் என்று பாடமாயின் இன்பப் பெருக்கினையுடைய கடல் என்க. பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. புலம் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன. அழல் - நஞ்சு; உவமையாகு பெயர்.
-
376. கூற்றுவன் கொடியன் ஆகிக்
கொலைத் தொழில் கருவி சூழ்ந்து
மாற்ற அரும் வலையை வைத்தான்
வைத்ததை அறிந்து நாமும்
நோற்று அவன் வலையை நீங்கி
நுகர்ச்சியில் உலகம் நோக்கி
ஆற்று உறப் போதல் தேற்றாம்
அளியமோ? பெரியமே காண்.
விளக்கம் : கருவி : ஐயும் பித்தும் வளியும் ஆகிய (வலைகட்டும்)வார்கள். வலை : வாழ்நாளைத் தரும் வினை. ஓஒ பெரியம் : இகழ்ச்சி.
-
377. பேர் அஞர் இடும்பை எல்லாம்
பிளந்திடும் பிறப்பு நீக்கும்
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம்
அதன் பயன் கோடல் தேற்றாம்
ஓரும் ஐம் பொறியும் ஓம்பி
உள பகல் கழிந்த பின்றைக்
கூர் எரி கவரும் போழ்தில்
கூடுமோ குறித்த எல்லாம்.
விளக்கம் : அமிர்து : ஆகுபெயர்; பிறவிப்பிணி போக்கலான் மக்கள் யாக்கையை அமிர்து என்றார். பிளந்திடும் அமிர்து, நீக்கும் அமிர்து எனத் தனித்தனி கூட்டுக. ஓரும் என்னும் செய்யும் என்முற்று முன்னிலைக்கண் வாராமையான் ஓரும் எனப் பிரித்து ஓர்ந்து பாரும் என்று பொருள் கோடல் நேரிதன்று.
-
378. தழங்கு குரல் முரசின் சாற்றித்
தத்துவம் தழுவல் வேண்டிச்
செழுங் களியாளர் முன்னர்
இருள் அறச் செப்பினாலும்
முழங்கு அழல் நரகின் மூழ்கும்
முயற்சியர் ஆகி நின்ற
கொழுங் களி உணர்வினாரைக்
குணவதம் கொளுத்தல் ஆமோ.
விளக்கம் : தழங்கு குரல் : தழங்குரல் என விகாரப்பட்டது. செழுங்களி : தரிசன மோகனீயப் பிரகிருதிகள் ஏழும். அவை : அநந்தானுபந்திக் குரோதம், அநந்தானு பந்திமானம், அநந்தானுபந்தி மாயை, அநந்தானுபந்தி லோபம், மித்தியாத்துவம், ஸம்மியக்மித்தியாத்துவம், ஸம்மியக்துவப் பிரகிருதி என்பன. இவை நகர கதியிற் செலுத்தும். குணவதம் : வதம் - விரதம்; பகுதிப் பொருள் விகுதி.
-
379. பவழவாய்ச் செறுவு தன்னுள்
நித்திலம் பயில வித்திக்
குழவிநாறு எழுந்து காளைக்
கொழும் கதிர் ஈன்று பின்னாக்
கிழவு தான் விளைக்கும் பைங் கூழ்
கேட்டிரேல் பிணி செய் பன்மா
உழவிர்காள்! மேயும் சீல
வேலி உய்த்திடுமின் என்றான்.
விளக்கம் : பவழவாய் : கருத்தங்கும் பை : நித்திலம் : முத்துப் போன்ற விந்து. செறுவு - கழனி. நித்திலம் போன்ற வித்தினை வித்தி என்க. பயனீனும் பருவமாதலால் காளைக் கொழுங்கதிர் என்றார். சீலம் - தீந்தேனும் தெண்மட்டும் உயிர்க்குழாம் ஈண்டி நிற்றற்கு இடனாகும் ஊனும் இவை துறத்தல். ஊன்சுவைத்து ஒளிறும் வேலாற்கு உரைக்கலுற்றான் (373) என்று தொடங்கினர் ஆயினும் சீவகனோடிருந்த ஏனை மாணவரையும் உளப்படுத்தி உழவிர்காள் என்று விளித்தமைக்கு ஏற்ப உய்த்திடுமின் எனப் பன்மை கூறினர். இளையவர் குழாத்தினீங்கி (383) என்பர் பின்னரும்.
-
380. சூழ் கதிர் மதியம் அன்ன
சுடர் மணிப் பூணினானும்
வீழ் தரு கதியின் நீங்கி
விளங்கு பொன் உலகத்து உய்க்கும்
ஊழ் வினை துரத்தலானும்
உணர்வு சென்று எறித்தலானும்
ஆழ் கடல் புணையின் அன்ன
அறிவரன் சரண் அடைந்தான்.
விளக்கம் : கலைகள் நிறைதலிற் சீவகனுக்கு மதியுவமை. பூணினானும்: உம்: உயர்வு சிறப்பு. பொன்னுலகு : பொன்னெயில் வட்டம்; (சமவ சரணம் என்னும் சினாலயம்.) ஊழ்வினை : சாது சரண் ஆவதற்கு முன் செய்த நல்லினை. அத் தவத்தே பயின்றமையால், உணர்வு மீண்டும் அதன் மேற் சென்று பரவியது.
-
381. காட்சி நல் நிலையில் ஞானக்
கதிர் மணிக் கதவு சேர்த்திப்
பூட்சி சால் ஒழுக்கம் என்னும்
வயிரத் தாழ் கொளுவிப் பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம்
அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து
ஆட்சியில் உலகம் ஏறத்
திறந்தனன் அலர்ந்த தாரான்.
விளக்கம் : நிலையாக இருப்பதால் நிலை. பொருள்களைக் காத்தற்கு உலாவுதலிற் கதவு. காட்சியையும் ஞானத்தையும் விட்டு நீங்காமல் தகைத்தலின் தாழ். அலர்ந்த - புகழாற் பரந்த என்றுமாம். காட்சி - நற்காட்சி. ஞானம் - நன்ஞானம். பூட்சி - மேற்கோள். ஒழுக்கம் - நல்லொழுக்கம். எனவே இரத்தினத்திரயம் ஆயிற்று. துன்பமல்லது தொழுதகவின்மையின் பிறப்பினை மாட்சியில்கதி என்றார்.
-
382. நல் அறத்து இறைவன் ஆகி
நால்வகைச் சரணம் எய்தித்
தொல் அறக் கிழமை பூண்ட
தொடு கழல் காலினாற்குப்
புல் அற நெறிக் கண் நின்று
பொருள் வயிற் பிழைத்த வாறும்
இல்லறத்து இயல்பும் எல்லாம்
இருள் அறக் கூறி இட்டான்.
விளக்கம் : நால்வகைச் சரணம் : அருக சரணம், சித்த சரணம், சாது சரணம், தன்ம சரணம். இதனால், தேவர் இல்லறத்திலிருந்தே வீடுபேறெய்துதல் கூடும் என்னும் கொள்கையுடையராதல் உணரலாம். இக்கொள்கை,
-
சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்
சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின்
பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள்அரி வையரோடு
அநுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்
நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும்
நுழைவர்பிறப் பினின்வினைகள் நுங்கி டாவே (சிவ.சித்.சுப. 287)
அச்சணந்தி அடிகள், சீவகனது பிறப்பின் இரகசியத்தை அவனுக்கு உணர்த்துதல்
-
383. எரி முயங்கு இலங்கு வை வேல்
இளையவர் குழாத்தின் நீங்கித்
திரு முயங்கு அலங்கல் மார்பின்
சீவகன் கொண்டு வேறா
விரி மலர்க் கண்ணி கட்டி
விழைதக வேய்ந்த போலும்
தெரி மலர்க் காவு சேர்ந்து
பிறப்பினைத் தெருட்டல் உற்றான்.
விளக்கம் : இளையவர்: நபுல விபுலராகிய (சச்சந்தன் காமக்கிழத்தியர் மக்களாகிய) இருவரும், கந்துக்கடனுக்குச் சீவகன் கிடைத்த பின்னர்ச் சுநந்தை வயிற்றிற் பிறந்த நந்தட்டனும் ஆகிய தம்பியரும், முற்கூறிய நால்வரும் ஐந்நூற்றுவரும் ஆகிய தோழரும் ஆவர். வேறாக்கொண்டு என மாறுக. ஆசிரியன் என்னும் எழுவாய் வருவித்தோதுக.
-
384. பூவையும் கிளியும் மன்னர்
ஒற்றென புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து
அம் தளிர்ப் பிண்டி நீழல்
பூ இயல் தவிசின் உச்சிப்
பொலிவினோடு இருந்த போழ்தில்
ஏ இயல் சிலையினானை
இப் பொருள் கேண்மோ என்றான்.
விளக்கம் : பூவை - நாகண வாய்ப்புள். இன்னோரன்ன சாதி என்க. சிலையினான் : சீவகன்.
-
385. வையகம் உடைய மன்னன்
சச்சந்தன் அவற்குத் தேவி
பை விரி பசும்பொன் அல்குல்
பைந்தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து
தேவியைப் பொறியில் போக்கி
மையல் கொள் நெஞ்சில் கல்லா
மந்திரி விழுங்கப் பட்டான்.
விளக்கம் : பொன் - மேகலை (கருவியாகுபெயர்.) தேர்ந்து - கனவிற்குப் பிறகு விசயையைப் போக விடஎண்ணி. மையல் - தன்னை ஆக்கியதார்ப் பொலி வேந்தனைக் கொல்லுதல். சீவகன் கடைபோகக் கேட்கும்பொருட்டு இச்செய்தியைப் பழங்கதையொன்றனைக் கூறுமாறுபோலக் கூறினன் என்பது கருத்து. இக்கருத்தால் நின்தந்தை தாய் என்னாமல் சச்சந்தன் என்னும் அவற்குத் தேவி என்றும் ஏதிலார்போலக் கூறினன். கல்லா மந்திரி என்றது கட்டியங்காரனை. விழுங்கப்பட்டான் என்பதற்கேற்ப மந்திரிமாநாகத்தால் என்க.
-
386. புலம்பொடு தேவி போகிப்
புகற்கு அருங் காடு நண்ணி
வலம்புரி உலகம் விற்கும்
மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னைப்
பயந்து பூந் தவிசின் உச்சி
நலம் புரி நங்கை வைத்து
நல் அறம் காக்க என்றாள்.
விளக்கம் : வலம்புரி உவமை கூறவே தேவி மறைந்தமையும் உணர்த்தினார். விசயை நோன்பிலே யிருந்தமை ஆசிரியனாற் சீவகன் ஈண்டுணர்ந்தும் மேல் அடிகளும் உளரோ? (சீவக-1884) என்று இவன் கூறியது இதற்குப் பின்னரும் தீங்கின்றி யிருந்தமை கருதிப் போலும்.
-
387. வானத்தின் வழுக்கித் திங்கள்
கொழுந்து மீன் குழாங்கள் சூழக்
கானத்தில் கிடந்ததே போல்
கடல் அகம் உடைய நம்பி
தானத்து மணியும் தானும்
இரட்டுறத் தோன்றி னானே
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி
உத்திரட்டாதி யானே.
விளக்கம் : கொழுந்தென்றார் நாடோறும் வளர்தலின். ஊனம் - நாட்களுக்குள்ள தீங்கு. தானம், இடம். அஃதாவது சுடுகாடு. மணிகளின் ஒளி மழுங்கத் தன்மேனி மிக்கு மிளிர என்பார் மணியும் தானும் இரட்டுற என்றார். உத்திரட்டாதியான் - உத்திரட்டாதிநாளிற்றோன்றியவன்.
-
388. அருந் தவன் முந்து கூற
அலங்கல் வேல் நாய்கன் சென்று
பொருந்துபு சிறுவன் கொண்டு
பொலிவொடு புகன்று போகத்
திருந்திய நம்பி ஆரத்
தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
அரும் பொனாய் கேண்மோ என்றான்
அலை கடல் விருப்பில் கொண்டாள்.
விளக்கம் : கொண்டு - கொள்ள; போக - போய்: வினையெச்சத் திரிபுகள். நாய்கன் என்றது கந்துக்கடனை.
-
389. கரியவன் கன்னற்கு அன்று
பிறப்பினைத் தேற்றி ஆங்கு அப்
பெரியவன் யாவன் என்ன
நீ எனப் பேசலோடும்
சொரி மலர்த் தாரும் பூணும்
ஆரமும் குழையும் சோரத்
திரு மலர்க் கண்ணி சிந்தத்
தெருமந்து மயங்கி வீழ்ந்தான்.
விளக்கம் : கண்ணி : முடிமாலை. பெரியவன் : அறிவினாற்பெரியவன், சீவகன். பேசலோடும் : ஓடு : உடனிகழ்ச்சி. இவ்வாறு எனவும் உணர்த்தியவுடன் எனவும் வருவிக்க. அன்பு மிகுதியான் மூர்ச்சை முந்திற்று. மூர்ச்சை - கையாறு. கரியவன் - கண்ணன். அன்று - பண்டைக்காலத்திலே. தேற்றியாங்கு - தேற்ற என ஒருசொல் வருவித்துக்கொள்க. தெருமந்து - சுழன்று.
-
390. கற்பகம் கலங்கி வீழ்ந்த
வண்ணம் போல் காளை வீழச்
சொல் பகர் புலவன் வல்லே
தோன்றலைச் சார்ந்து புல்லி
நல் பல குழீஇய தம்மால்
நவை அறத் தேற்றத் தேறிக்
கல் புனை திணி திண் தோளான்
கவலை நீர்க் கடலுள் பட்டான்.
விளக்கம் : சீவகன் வண்மையிற் சிறந்தவன் ஆதலின் அவன் நிலை குலைந்து வீழ்ந்ததற்குக் கற்பகத்தை உவமையாகக் காட்டினார்.
-
391. இனையை நீ ஆயது எல்லாம்
எம்மனோர் செய்த பாவம்
நினையல் நீ நம்பி என்று
நெடுங் கண் நீர் துடைத்து நீவிப்
புனை இழை மகளிர் போலப்
புலம்பல் நின் பகைவன் நின்றான்
நினைவு எலாம் நீங்குக என்ன
நெடும் தகை தேறினானே.
விளக்கம் : நீர்துடைத்து என்றது அரற்று. (யாது செய்வேனென்றல்.) நினைவெலாம் என்றது அவலம் (வருத்தம்) இங்ஙனம் அவலம், கவலை, அரற்று, கையாறு என்னும் நான்கு மெய்ப்பாடும் கூறப்பட்டமை தெளிக. எம்மனோர் செய்த பாவம் நீங்குகை காரணமாக நினையல் என்றும் ஆம்.
-
392. மலை பக இடிக்கும் சிங்கம்
மடங்கலின் மூழங்கி மாநீர்
அலை கடல் திரையின் சீறி
அவன் உயிர் பருகல் உற்றுச்
சிலையொடு பகழி ஏந்திக்
கூற்று எனச் சிவந்து தோன்றும்
இலை உடைக் கண்ணியானை
இன்னணம் விலக்கினானே.
விளக்கம் : தந்தையைக் கொன்றவனைக் கொல்லாமை விலக்கல் அருமையின் மேற்கூறுகின்ற கூற்றான் விலக்கினமை தோன்ற, இன்னணம் என்றார். (நச்சினார்க்கினியர் சிங்கமடங்கலிற் சீறி எனவும் திரையின் முழங்கி எனவும் மாற்றிக் கூட்டுவர்.)
-
393. வேண்டுவல் நம்பி யான் ஓர்
விழுப் பொருள் என்று சொல்ல
ஆண் தகைக் குரவீர் கொண்மின்
யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக
அவன் திறத்து அழற்சி இன்மை
வேண்டுவல் என்று சொன்னான்
வில் வலான் அதனை நேர்ந்தான்.
விளக்கம் : என்று கூற எனவும் பாடம். வேண்டுவல்: அல் ஈற்றுத் தன்மைச் சொல்; சந்தியால் னகரம் வந்தது. இர் ஈறு, கேளிர் வாழியோ (குறுந் - 280) என்றாற் போல இயல்பாய் நின்று விளியேற்றது ஆண்டகையை கூறிற்று, கொலையை விலக்குவரோ என்று அஞ்சிக் கற்பித்த முகத்தான்; இதனால் அரசனென்று ஆசிரியனைச் சீவகன் உணர்ந்தானாயிற்று. திறம் - குலம். வல்லான் ; எதிர்மறை யாகாது உலக வழக்காய் உடன்பாடு உணர்த்திற்று. இது மேலும் கொள்க. கொள் + மின் = கொண்மின் என ளகரம் ணகரமாகத் திரிந்தது. இது மின் விகுதி பெற்ற முன்னிலையேவலொருமை வினைமுற்று.
-
394. வெவ் வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் இன்னீர்
கவ்விய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி
இவ் இயல் ஒருவற்கு உற்றது இற்றெனக் கிளக்கல் உற்றான்.
விளக்கம் : அமிர்தம்: இரத்தினத்திரயம். இவ்வியல் ஒருவன், என்று தன்னைப் பிறன்போல் கூறினான், தன்மேல் அன்பால் வருந்துவன் என்று கருதி, மற்றும், சீவகன் மெய்யுணர்தலின் தன்னை விலக்கானென்று இக்கதை கூறுகிறான்.
அச்சணந்தி அடிகள் தன் வரலாறு கூறுதல்
-
395. வான் உறை வெள்ளி வெற்பின்
வாரணவாசி மன்னன்
ஊன் உறை பருதி வெள் வேல்
உலோகமா பாலன் என்பான்
தேன் உறை திருந்து கண்ணிச்
சிறுவனுக்கு அரசு நாட்டிப்
பால் நிறக் குருகின் ஆய்ந்து
பண்ணவர் படிவம் கொண்டான்.
விளக்கம் : பருதிபோற் பகையாகிய இருளைக் கெடுக்கும் வேல். உலோகமா பாலன்: மா: வியங்கோளசையன்றி இசை நிறைத்து நின்றது; புறனடையான் வந்தது. (தொல். இடை. 48); ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே (புறநா - 193) என்றாற்போல.
-
396. வெம் சினம் குறைந்து நீங்க
விழுத் தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்குப்
பாவம் வந்து அடைந்தது ஆகக்
குஞ்சரம் முழங்கு தீயில்
கொள்கையின் மெலிந்து இம் மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன
மாட வீட்டு அகம் புகுந்தான்.
-
397. உரை விளையாமை மைந்தன்
கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன்
யார் அவன் வாழி என்ன
விரை விளையாடும் தாரோய்
யான் என விரும்பித் தீம்பால்
திரை விளை அமிர்தம் அன்ன
கட்டுரை செல்க என்றான்.
விளக்கம் : விளையாமை - முற்றுமுன்னர். கேட்கிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். வரைவிளையாடும் மார்பன் என்றது மலையே தனக்கு நிகரென்று கருதி அதனோடு விளையாடுதற்குக் காரணமான மார்பையுடையன் என்றவாறு. விரை - நறுமணம். தீம்பால் திரை - பாற்கடல்.
-
398. பூத் தின்று புகன்று சேதாப்
புணர் முலை பொழிந்த தீம்பால்
நீத்து அறச் செல்ல வேவித்து
அட்ட இன் அமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும் பொன் தாலம்
பரப்பிய பைம் பொன் பூமி
ஏத்த அரும் தவிசின் நம்பி
தோழரொடு ஏறினானே.
விளக்கம் : சேதா : பண்புத்தொகை. பாத்தல் அரும்பசும் பொன் (இனியும் குற்றமின்மையால்) பிரிக்கவியலாத பசும்பொன்: ஓட்டற்றபொன்.
-
399. புடை இரு குழையும் மின்னப்
பூந்துகில் செறிந்த அல்குல்
நடை அறி மகளிர் ஏந்த
நல் அமிர்து உண்ணும் போழ்தின்
இடை கழி நின்ற என்னை
நோக்கிப் போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன
பொன் கலத்து எனக்கும் இட்டார்.
விளக்கம் : நடை என்றது சோறிடு முறைமையினை. இடைகழி - இல்லத்தில் ஓருறுப்பு; ரேழி என இக்காலத்தார் கூறுவதுமிது.
-
400. கை கவி நறு நெய் பெய்து
கன்னல் அம் குடங்கள் கூட்டிப்
பெய் பெய் என்று உரைப்ப யானும்
பெருங் கடல் வெள்ளிக் குன்றம்
பெய்து தூர்க்கின்ற வண்ணம்
விலாப் புடை பெரிதும் வீங்க
ஐயன் அது அருளினால் யான்
அந்தணர் தொழிலன் ஆனேன்.
விளக்கம் : (ஐயன் - சீவகன் என்பர் நச்சினார்க்கினியர். ஐயனாகிய நின் அருளால் என்பர்.) விரைவினால் பெய் பெய் என்று அடுக்கி வந்தன. இஃது இக்கால வழக்கு. விரைசொல் அடுக்கே மூன்றுவரம் பாகும் (தொல் - எச்ச -28) அந்தணர் - அறவோர். இவர் தொழில் அமைதி அடைதல். கைகவி நறுநெய் - உண்போர் போதும் போதும் என்றுகைகவித்து மறுக்குமளவும் பெய்யப்பட்ட நறிய நெய் என்றவாறு. பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர வைகல் கைகவி பருகி (157-8) என்றார் பொருநராற்றுப்படையினும். ஐயன் என்பது சீவகனைக் குறிப்பதாகக் கோடலே காப்பியத்திற்குச் சிறப்பாகும். ஐயன் : முன்னிலைப் புறமொழி.
-
401. சுரும்பு உடை அலங்கல் மாலைச்
சுநந்தையும் துணைவன் தானும்
விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப
வேழ வெந்தீயின் நீங்கி
இருந்தனன் ஏம முந் நீர்
எறி சுறவு உயர்த்த தோன்றல்
கரும்பு உடைக் காளை அன்ன
காளை நின் வலைப் பட்டு என்றான்.
விளக்கம் : காளையின் வலையிற் பட்டதையும் யானைத் தீயினின்றும் நீங்கியதையும் மேல் வருவனவற்றால் அறியலாம். இவற்றை விளக்கிப் போகக்கருதியதனால், வலைப்பட்டு என்றான். விரும்பினர்: முற்றெச்சம். வேழவெந்தீ - யானைத்தீ என்னும் நோய். ஏமமுந்நீர் - உலகிற்குப் பாதுகாவலாகிய கடல். எறிசுறவு: வினைத்தொகை. கரும்புடைக்காளை - காமன். காளை: அண்மைகிளி.
-
402. நிலம் பொறுக்கலாத செம் பொன்
நீள் நிதி நுந்தை இல்லம்
நலம் பொறுக்கலாத பிண்டி
நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய்
ஆதலால் ஊடு புக்கேன்
கலம் பொறுக்கலாத சாயல்
அவர் உழை நின்னைக் கண்டேன்.
விளக்கம் : நிதி - திரள். எல்லா மூர்த்தமும் இவனாதலின், நான்முகன் என்றார். மேலும், ஆதிவேதம் பயந்தோய் நீ (சீவக 1242) மலரேந்து சேவடிய மாலென்ப (சீவக. 1610) என்பர். இல்லம் என்பதனைத் தமர்கட்கெல்லாம் என்பதன் பின்னரும் கூட்டுக.
-
403. ஐயனைக் கண்ணில் காண
யானைத்தீ அதகம் கண்ட
பை அணல் நாகம் போல
வட்க யான் பெரிதும் உட்கித்
தெய்வம் கொல் என்று தேர்வேற்கு
அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
மொய் குரல் முரசம் நாணும்
தழங்கு குரல் முழங்கக் கேட்டேன்.
விளக்கம் : ஐய நிண்கண்ணின் என்றும் பாடம் (இப் பாடமே தக்கது.) தெய்வமோ என்று ஐயுற்றபோது, மகனே யென்று தெளியக் குரல்முழங்கக் கேட்டேன் என்றான். அதகம் - மருந்து. இஃது அகதம் என்றும் வழங்கும் எனத் தெரிகிறது. எரிதழல் விடத்தை - மலைமறை அதகம் மாற்றியாங்கு (கல் - நிணமுயிருண்ட - 6) தழங்குரல்: தழங்குகுரல் என்பதன் விகாரம். வேழவெந்தீயின்நீங்கி என்றும், (401) யானைத் தீவட்க என்றும் (403) இருமுறை வருதலால், இவனிருக்கின்ற மனையாதலின் இவனைக் காண்பதற்கு முன்னே குறைந்து, இவனைக் கண்டபின் பொன்றக்கெட்டது என்பர் நச்சினார்க்கினியர்.
-
404. கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து
குலவிய திருவில் போல
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து
முருகு கொப்பளிக்கும் தாரோய்
கேட்டு அளப் பரிய சொல்லும்
கிளர் ஒளி வனப்பும் நின்னைச்
சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய்
சாதகம் செய்த என்றான்.
விளக்கம் : கோடு - நுனி. திருவில் - வானவில். மோடு - பெருமை. முருகு - தேன். சேடு - பெருமை. சாதகம் - பிறப்பு.
அச்சணந்தி அடிகள் தவம் மேற்கொள்ளல்
-
405. கோள் இயங்கு உழுவை அன்ன
கொடும் சிலை உழவன் கேட்டே
தாள் இயல் தவங்கள் தாயாத்
தந்தை நீ ஆகி என்னை
வாள் இயங்கு உருவப் பூணோய்
படைத்தனை வாழி என்ன
மீளி அம் களிறு அனாய் யான்
மெய்ந்நெறி நிற்பல் என்றான்.
விளக்கம் : நல்வினையால், இக் கலைகளைக் கற்றுத் தான் வேறொரு பிறப்பானமை கூறினான். தாயாக என்பது ஈறுகெட்டது. உழுவை - புலி. தாள் - முயற்சி. மெய்ந்நெறி - தவநெறி. நிற்பல் : தன்மை ஒருமை.
-
406. மறு அற மனையின் நீங்கி
மா தவம் செய்வல் என்றால்
பிற அறம் அல்ல பேசார்
பேர் அறிவு உடைய நீரார்
துறவறம் புணர்க என்றே
தோன்றல் தாள் தொழுது நின்றான்
நறவு அற மலர்ந்த கண்ணி
நல் மணி வண்ணன் அன்னான்.
விளக்கம் : ஒருவன் துறப்பேன் என்றால் அறிவுடையோர் விலக்கார் ஆதலின், இவனும் அதற்கு உடன்பட்டானெனக் கவியின் கூற்றாகவும் ஆக்கலாம். (பேரறிவுடைய நீரார் மாதவஞ் செய்வல் என்றால் என்று கொண்டு கூட்டுவர் நச்சினார்க்கினியர்)
-
407. கை வரை அன்றி நில்லாக்
கடுஞ் சின மடங்கல் அன்னான்
தெவ்வரைச் செகுக்கும் நீதி
மனத்து அகத்து எழுதிச் செம்பொன்
பை விரி அல்குலாட்கும்
படுகடல் நிதியின் வைகும்
மை வரை மார்பினாற்கும்
மனம் உறத் தேற்றி இட்டான்.
-
408. அழல் உறு வெண்ணெய் போல
அகம் குழைந்து உருகி ஆற்றாள்
குழல் உறு கிளவி சோர்ந்து
குமரனைத் தமியன் ஆக
நிழல் உறு மதியம் அன்னாய்
நீத்தியோ எனவும் நில்லான்
பழவினை பரிய நோற்பான்
விஞ்சையர் வேந்தன் சென்றான்.
நாமகள் இலம்பகம் (பாடல்கள் 379) முற்றியது.
This file was last updated on 12 Jan. 2019.
Feel free to send any corrections to the .